Saturday, May 4, 2019


artist / nartaki natraj

வந்தடைந்த ரயிலின்
கடைசிப் பெட்டி
எஸ்.சங்கரநாராயணன்
*
*
 திருவிழாக் கொண்டாட்டங்கள், ஆரவாரங்கள் முடிந்தாப் போலிருக்கிறது. வானம் ஒரு கண்ணை லேசாய் அரைத் தூக்கத்துடன் மூடிக் கொள்கிறது... ஒரு கருந் திரை மெல்ல இறங்குகிறாப் போல. பறவைகள் மெல்ல மரங்களுக்குத் திரும்புகின்றன. நிழலோடு ஐக்கியமாகும் பொழுதாகி யிருக்கிறது. வெளிச்சம் விடைபெறும் வேளை.
சனிக்கிழமை தோறும் சிந்தனை நீட்சியாய் இப்படி எதாவது இலக்கியச் செய்திகள் பரிமாற என யோசிக்கிற வழக்கத்தில் இருந்து சிறிது ஓய்வு கொள்ளலாம். இப்படியொரு கட்டுரைத் தொகுப்பு அமையலாம், என தனி நூலாக்கும் அளவில் நான் முன் அனுமானம் எதுவும் வைத்துக்கொள்ள வில்லை. அபுனைவு எனது வேலையல்ல என்கிறாப் போல ஓர் உதடு திறக்காத இறுக்கம் காத்து வந்தவன் நான். ஆச்சர்யகரமாக இது நிகழ்ந்து விட்டது. அதன் விடைபெறும் தருணமும் வந்தாகி விட்டது!
ஒரு பதினாறு வாரம் என இவை அமையும் என்றே, எழுதத் தலைப்பட்டேன். நண்பர்களிடமும் அப்படியே பேசி வந்தேன். சில நிகழ்வுகள் இதன் சில பகுதிகளை எழுதத் தூண்டின. சில அரங்குகளில் நான் பேசியவற்றை இங்கே பகிர வேண்டும் என உணர்ந்தேன். புதிதாய் நிறைய, அந்த வாரம் எழுத, என யோசிக்க எனக்குப் பிடித்திருந்தது. நண்பர்களுடன், வாசகர்களுடனான அரட்டையின் போது வந்த யோசனையை விரித்துச் சொல்ல இங்கே இடம் இருந்தது.
முகநூலில், ‘வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்’ என ஓர் ரசிகர் குழு தமிழின் இலக்கிய முயற்சிகளை அடையாளங் காட்டியும், விவாதித்தும், ரசித்தும், ஆக்க பூர்வமான விமரிசனங்களுடனும், ஒரு கருத்துப் பரிமாற்றம்... என இயங்க ஆரம்பித்தது. ஓர் எழுத்தாளரின் படைப்புகளைப் பற்றி அந்த வாரம் முழுதும் தகவல்கள், விமரிசனக் குறிப்புகள் பகிரப் பட்டன. குழு துவங்கிய வெகு சீக்கிரமே நானும் அந்தப் பட்டியலில் ‘வார எழுத்தாளர்’ கௌரவம் பெற்றேன். குழு அமைப்பளர்கள் யார் என்று நான் முன்அறிமுகம் இல்லாதவன். படைப்புகளால் அவர்கள் என்னை அறிந்திருந்தார்கள், என்பது அருமையான விஷயம் அல்லவா? அவ்வளவில் மிகுந்த மகிழ்ச்சியளித்தது அவர்களின் அந்தப் பாங்கு.
வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் - குழுவின் மந்திரமூர்த்தி அழகு, கவிஞர் சுப்ரா, சத்யா ஜி. ப்பி, சரஸ்வதி காயத்ரி, சுரேஷ் சுப்ரமணி, இராமச்சந்திரன் காளஹஸ்தி ஆகியோருக்கு நன்றி. இவர்களில் பலரை இன்றளவும் நான் சந்தித்ததோ உரையாடியதோ இல்லை. எந்த சுயநலமும் இன்றி, பக்கச் சார்பு இன்றி அவர்கள் தமிழின் ‘எல்லா’ இலக்கியப் போக்குகள் சார்ந்தும் சமமான அக்கறையும் கவனமும் தர முன்வருகிறார்கள். நான் அவர்களை முகநூலில் தொடர்ந்து வருகிறேன். துவக்க காலகட்டத்தைத் தாண்டிய வளர்ச்சி அடைந்துள்ளது இந்த அமைப்பு. ஒரு வருடம் நிறைவு காணப் போகிறது. அவ்வளவில் கதை கட்டுரை கவிதை நாவல் மொழிபெயர்ப்பு - என பொது வெளியில் எந்தப் புத்தகம் பற்றியும் குறிப்புகள் தர அங்கே அதன் ‘கான்வாஸ்’ விரிந்து கொடுத்திருக்கிறது இப்போது. தமிழ் தாண்டி, பிற மொழி இலக்கியம், உலக இலக்கியம், மொழிபெயர்ப்புகள் பற்றியும் அங்கே பதிவுகள் உலா வருகின்றன. வாசகர்கள் கொடுத்து வைத்தவர்கள். வாசிப்போம் குழு ஒரு நல் இயக்கம். மேலும் வளர்ந்து சிறக்க வேண்டும் அது. அது தமிழின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும்.
இலக்கியம் சார்ந்து எனக்கான கருத்து வளாகங்களை அப்போது, அதில் வரும் குறிப்புகளைப் பார்க்கையில் நான் கண்டடைய நேர்ந்தது. எனது ஆதர்ச எழுத்தாளர்கள் யார் யார், யாரோடு நான் உடன் படுகிறேன், யாரோடெல்லாம் எப்படியெல்லாம் முரண் படுகிறேன்... இன்னவும் பிறவுமான என் சிந்தனை யோட்டங்களை, ஆனால் இந்தக் குழுவில் நான் பகிர்வது பாந்தமாய் இராது, என்று தோன்றியது. குழுவில் இடம் பெறும் பதிவுகள் அந்தப் படைப்பையோ எழுத்தாளனையோ சார்ந்து இயங்க வேண்டும். அதாவது குழு அந்த எழுத்தாளர் பற்றிய ஒரு பொதுக் கருத்தை உருவாக்க முயல்கிற அளவில் செயல்படுகிறது. அதுவே அந்தக் குழுவின் செயல்பாட்டுக்கு நியாயம் செய்யும். அதில் பகிர வாய்க்காத அநேகக் கருத்துக்களை நாம் இங்கே, எனது ‘பிளாக்’கில் பகிரலாம் என்று தோன்றியது. முழுக்க என் அடையாளங்கள், என் பார்வை சார்ந்த பதிவாக அது அமையும். அப்படி எழுத ஆரம்பித்தது தான் இந்த ‘யானையின் வண்ணப்படம்.’
கட்டுரைகள் எழுதக் கூடாது என்று வைத்திருந்தேன். பத்திகள், கட்டுரைகள் போன்றவை ஒதுக்கி, எழுதக் கிடைத்த என் நேரத்தை, புனைவு நோக்கி மாத்திரமே நான் செலவழிக்க வேண்டும், என்று தீர்மானித்து வைத்திருந்தேன். அதிகக் கூட்டங்களை நான் தவிர்த்தேன். முன்னுரைகள் தருவதிலும் எனக்குப் பெரிய ஆர்வம் இல்லை. தவிர்க்க முடியாமல், அந்தப் புத்தகம் எனக்குப் பிடித்திருந்தால் மாத்திரம், நான் முன்னுரை தருவேன். புத்தக மதிப்புரைகளும் அப்படியே. எனது பணி புனைவு இலக்கியம் தான். என் கவனத்தை அதில் இருந்து பிட்டுக் கொள்ள வேண்டாம் என்பதாய் இருந்தேன். எப்படியோ இந்தத் தன்னனுபவக் குறிப்புகள் தவறி என்னில் இருந்து வெளியேறி விட்டன! நண்பர்களுடன் அரட்டை யடிப்பது போன்ற எளிமையும் இயல்பான நகைச்சுவையுமாகவே இவற்றை அமைத்துக் கொண்டேன். இலக்கியப் பத்திகள் என்று வார்த்தைகளால் மிரட்டவோ, ‘ர்’ என பல் காட்டி கர்ஜனை செய்யவோ நான் விரும்பவில்லை.
இலக்கியப் பயணம் என்று என் வாழ்வில் நான் கடந்து வந்த பாதைகள், சந்தித்த பிரமுகர்கள், அவர்களிடம் கற்றுக் கொண்டது... இப்படியான அடையாளங்களை இதில் காண முடியும். விமரிசன அதிரடிகள் வேண்டாம். குறை சொன்னாலும் அந்தப் படைப்புகளில் எனக்கு மரியாதை இல்லாத அளவில் அவற்றைப் பற்றி எழுதவும் நான் விரும்பவில்லை. ஜெயமோகனின் நாவல் ‘விஷ்ணுபுரம்’ வெளியான போது நான் எழுதிய விமரிசனக் கட்டுரை கணையாழியில் வெளியானது. அப்போது கணையாழியிலும் பிற ‘சிவப்பு’ இதழ்களிலும் உடனே வேறு சில எழுத்தாளர்களை, நாவல்ளைக் குறிப்பிட்டு, விமரிசனங்கள் தாருங்கள், போடலாம், என்றார்கள். அவர்களுக்கு ஒரு கருத்து வளாகம் இருந்து வருகிறது. அதில் என்னை ஈர்த்துக் கொள்கிற முயற்சி அது. நான் அதில் தலைகொடுக்க விரும்பவில்லை. இதே ஜெயமோகன் கட்டுரையை, ‘சிவப்பு’ இதழ்களில் வெளியிடாமல் கணையாழியில் நான் வெளியிட்டதையே கவனிக்க வேண்டும். நாவலையிட்டு என் கருத்துகளை நேரடியாக வாசகர்கள் எடுத்துக் கொள்ளட்டும். எனக்கு ‘சிவப்பு’ கம்பள வரவேற்பு வேண்டாம்.
உடனே மீண்டும் எனது புனைவுச் சூழலுக்கு வந்திருந்தேன். இப்போது பதிவுகளாக இவை பெரும் நூலாக வளர்ந்ததும் ஆச்சர்யம் தான். மிகவும் சிரமம் இன்றியே இந்தப் பகுதிகளை எழுதி யிருக்கிறேன். மனதில் உள்ள கதைகள், எழுத்தாளர்கள் என்று துடுப்பு போட்டுப் போனேன். இலக்கிய மிரட்டல்கள், அதிகார த்வனி, கெடுபிடி, சட்டாம்பிள்ளைத் தனம்... நமக்கு வேண்டாம். நண்பர்களுடன் உரையாடல்கள் இவை. வாசிப்பின் சுவாரஸ்யம் முக்கியம். கருத்துப் பகிர்தல் முக்கியம். கருத்தில், கருத்து தாண்டிய ‘பின்னணி’ ஆராய்ச்சிகள் இங்கே இல்லை. மனதில் ஒன்று வைத்து வேறான்றாக, பூடகமாக, வக்கிரமாக எழுதிச் செல்லுதல் வேண்டாம். யாரும் முகம் சுளிக்கிற அளவில் இதைத் தோல்விகரமான படைப்பாக ஆக்க நான் விரும்பவில்லை. என் நோக்கமும் அது அல்ல.
இதை ஒருசேரப் பார்க்கையில் நானும் இலக்கியச் சண்டைகள் போட்டிருக்கிறேன், என்று தெரிகிறது. எனக்கும் எதிரிகள், பொறாமைக் காரர்கள், என்னைப் பிடிக்காதவர்கள் என்று சிலர் என் வாழ்வில் வந்து போயிருக்கிறார்கள். என்னை எதிர்க்கிறவர் இருக்கலாம். எனக்கு எதிரிகள் இல்லை.
பத்திரிகைகளுடன் எனக்கு கருத்து வேறுபாடு வந்திருக்கிறது. நான் சில இதழ்களில் எழுதுவதை நிறுத்திக் கொண்டிருக்கிறேன். பிறகு சமாதானங்கள் அமைந்துள்ளன. சில பத்திரிகைகள் திடீரென்று எனக்கு ‘வேத்துமுகம்’ காட்டுகின்றன... இவற்றை எல்லாம் இங்கே தற்செயலாக நான் பதிவு செய்திருக்கிறேன். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் எழுத்து வாழ்க்கை சுமுகமானது அல்ல... என்று தெரிகிறது.
அது உண்மைதான். தலை வணங்காமல் இங்கே எழுத்து வாழ்க்கை வாழ முடியாது. அது சாத்தியமாக வேண்டுமானால், சாப்பாட்டுக்கு வேறு வேலை வைத்துக் கொண்டு எழுத வர வேண்டும். நான் அப்படியே சுதந்திரப் பட முடிந்தது. இவற்றை எல்லாம் தற்செயலாக இங்கே இந்த நூலின் பதிவுகளில் திரும்பிப் பார்க்க வாய்த்தது. பழைய விஷயங்களை நான் திரும்பிப் பார்ப்பது இல்லை. சில விவரங்களை என் நண்பர்கள் சிலர், தேதி மாதம் வருடம் அளவில் நினைவு வைத்துக் கொண்டு சொல்வார்கள். அதில் நான் அசடு. ஆனால் அதை மீறி எத்தனையோ, நினைவுக்குள் இருந்திருக்கிறது. பத்திகளில் குதித்திருக்கிறது. கால அடையாளங்கள் தவிர்த்த, காலத்தைத் தாண்டிய அடையாளங்கள் அவை. அவற்றில் அனுபவப் பாடங்கள் இருந்தன.
நான் பேசிய உரைகளில் சிலவும், நூல் முன்னுரைகள் மற்றும் மதிப்புரைகள் சிலவும், வெளியிட்ட கட்டுரைகள் சிலவும் இங்கே இடம் பெற்றுள்ளன, அவற்றின் தகுதிப்படி. தவிர்த்தவை அதிகம். அதேபோல வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சொன்ன ஒரே விஷயத்தை நூல் வடிவம் பெறும் இந்த சமயம், கூறியது கூறல் குற்றம், என்ற அளவில் முடிந்த அளவு தவிர்க்கவும் முயற்சி மேற் கொண்டேன். ஒரே விஷயத்தின் வேறு கோணங்களை அனுமதிக்கவும் வேண்டி யிருந்தது.
இதைத் தனி நூலாக்கு முன், ‘கூறியது கூறல்’ தவிர்க்க என்று சரிபார்க்க உதவிய எழுத்தாளர் எஸ். குமார், எனது 38 ஆண்டு கால நண்பர். எழுத்து நடையில் சொற் சுருக்கமும் இறுக்கமுமான மொழி அவருடையது. பெரும் சுற்றிதழ்களில் அவ்வாறான தன்னடையாளங்களுடன் வெற்றி உலா கண்டார் எஸ்.குமார். தெற்கே அன்புமகா சமுத்திரம், ஒரு பட்டாம்பூச்சியின் கறுப்பு வெள்ளைப் புகைப்படம், ஒரு பறவைப் பார்வை, கனவளவு உலகம் உட்பட பன்னிரண்டு புனைவு நூல்களின் ஆசிரியர். எந்தத் தயக்கமும் இன்றி நான் அவரிடம் பணி ஒப்படைக்க, இத்தனை விரைவாகவே அதை அவர் நிறைவேற்றியும் தந்துவிட்டார்.
இந்த நூலின் பக்கங்களில் என்னுடைய வாசகர்கள், ரசிகர்கள், நண்பர்கள், சில உறவினர்களும், (ஹா ஹா... சில எதிரிகளும்) இடம் பெற்றிருக்கிறர்கள். அவர்களுக்கு நன்றி.
எனது காணொலி, தொலைக்காட்சிப் பேட்டிகளிலும் சொன்னதுதான். இந்த வாராந்திரப் பதிவுகளில், தனியான அடையாளங்கள் என முற்போக்கு இலக்கியம், தலித் இலக்கியம், பெண்சார்ந்த உடல்மொழி இலக்கியம்... என்றெல்லாம் நான் கட்சி கட்டுவதைத் தவிர்த்தேன். அவை அந்தந்தக் காலகட்ட அலை யெழும்புதல்கள். கால காலத்துக்குமான பொதுத்தன்மை சார்ந்தே நான் இலக்கியம் பேச விரும்புகிறேன். இதுகுறித்து மாற்றுக் கருத்துள்ளவர்களை நான் மதிக்கிறேன். அவர்களும் என்னை மதிப்பார்கள் என்பது என் விருப்பம். இப்படியாகத்தான் நான் ஒளிவட்ட அமைப்புகளோ, ரசிகர் குழுப் பின்னணியோ வேண்டாம் என்று தவிர்த்தேன். எனது வாசகர் தனக்கான சிந்தனை வளாகம், சுதந்திரம் உள்ளவர், அது அவரின் தகுதி என்று நான் மதிக்கிறேன். அங்கிகரிக்கிறேன். அவரை அவ்வளவில் போற்றுகிறேன். நான் கட்டுப்படாதவன் என்ற அளவில் அவர்களுக்கு சுதந்திரம் அளிப்பதே நியாயம் அல்லவா?
தனி நூல் எனத் தருகிற போது, யானையின் வண்ணப்படம், என்ற இந்தப் பொதுத் தலைப்பை ‘உலகெனும் வகுப்பறை’ என அமைத்துக் கொள்கிறேன். இன்முகமும் பொறுமையும் காட்டி, இதுகாறும் என்னுடன் பயணித்த நண்பர்களுக்கு வணக்கம். நன்றி. உலகம் அழகாகவே இருக்கிறது. இந்த நிமிடத்தில் யாரிடமும் எனக்கு கசப்போ வெறுப்போ இல்லை. அதுவே என் வாழ்வின் நியாயம். இப்படியே ஓடிவிடும் என்று நம்புகிறேன்.
மீண்டும் சந்திப்போம்.
*
storysankar@gmail.com
91 97899 87842 / 91 94450 16842


Friday, April 26, 2019


பகுதி 39 Artist/A.Selvam

இதோ இந்த
அலைகள் போல
எஸ்.சங்கரநாரயணன்

பால்யத்தில் எனது சொல்சாமர்த்தியத்தில் நண்பர்கள் மத்தியில் புகழ் போதையுடன் அளவளாவுவது எனக்கு இயல்பாக இருந்தது. ஒரு சக மாணவன் பந்தயம் ஒன்றில் இரண்டாம் பரிசு வாங்கினான். நான் அவனிடம் சொன்னேன். “முதல் பரிசு வாங்கறது ஈசிடா. ரெண்டாம் பரிசுதான் திறமை.” இன்னொரு சம்பவம் நினைவு வருகிறது. வத்றாப் என்கிற குட்டிக் கிராமத்தில் ஒன்பது பத்து பதினொன்று வகுப்புகள் வாசித்து விட்டு மதுரைக் கல்லூரியில் (Madura College) புகுமுக வகுப்பு சேர்ந்தவன் நான். என்றாலும் சிரமம் இல்லாமல் ‘இந்திய’ ஆங்கிலம் புரியவும் செய்யும். பதிலுக்கு ஆங்கிலத்திலேயே உரையாடவும் என்னால் முடியும். எங்கள் ஆங்கில வாத்தியார் ஆங்கிலப் பாடத்தையே தமிழில் நடத்திக் கொண்டிருந்தார். பாடம் முடித்து, எனி டவ்ட்?.. என்று கேட்டார். நான எழுந்து கேட்டேன்.
சார் நீங்க எம்.ஏ. இங்கிலீஷ் தமிழ் மீடியமா?
எத்தனையோ நிதானப் பட்டிருக்கிறேன் இக்கால கட்டங்களில் என்பது புரிகிறது. ஒரு கன்றுக்குட்டியின் துள்ளலே அந்தக் காலம். அதன்பிறகு இந்தப் பழக்கத்தின் ஒரு நீட்சியாகவே எனது படைப்பு வாழ்க்கை ஆரம்பித்திருக்கக் கூடும். சிறுகதைகளிலும் இந்தத் தெறிப்புகள், திவலைகளின் சுவடு காயாமல் காணக் கிடைத்திருப்பதாக என் ஆரம்ப காலக் கதைகள் உணர்த்துகின்றன. “நாங்கள் நான்கு குழந்தைகள் அப்பாவுக்கு. வாசல் திண்ணையில் படுத்துக் கொள்வோம். அப்பாவும் அம்மாவும் உள்ளே படுத்துக்கொண்டு மேலும் குழந்தைகளை வாசல் திண்ணைக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள்” - என்கிற என் ஆரம்பகாலக் கதையொன்றின் வரியை ரமேஷ் வைத்யா, பேச்சுவாக்கில் மேற்கோள் காட்டினான். ஆனால் இந்த வரிகளை காலம் உற்சாகமாக எதிர்கொண்டே வந்திருக்கிறதை, எனது இந்த இயல்பு ரசிக்கப் படுவதை எப்போதுமே உணர்கிறேன். ம.வே.சிவகுமார், க.சீ.சிவகுமார் போன்ற நண்பர்களின் எழுத்துகளின் தளமே இந்த இடக்கரடக்காத தன்மைதான். ஒரு பையனை தான் காதலிப்பதாக இளம்பெண் ஒருத்தி, புதிதாகக் கல்யாணமாகி வந்த பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் சொல்வாள். அதற்கு, “நானே போய் உங்க அப்பா அம்மாவிடம் பேசிச் சம்மதிக்க வைக்கிறேன்,” என்று அந்த பக்கத்து வீட்டுக்காரி முன் வருவாள், என்று கதை சொல்லும் ம.வே.சிவகுமார், சில பெண்களுக்கு சுபாவமாகவே இம்மாதிரி காரியங்கள் பிடிக்கிறது, என அடுத்து ஒரு வரி போடுகிறார். க.சீ.சிவகுமாரிடமும் அநேக வரிகளை இப்படி அடிக்கோடு இட்டுக் காட்ட முடியும்.
பல் எடுப்பான பெண்கள் போன்ற கதைகள் அவை. அதுவும் ஒரு அழகு என்று எழுத்தில் வரவேற்பு கண்டது. அவை அந்த இளம் பருவத்தில் அணிற்பல் பாவனையை எல்லாருக்கும் தந்ததோ என்னவோ? இளமை, அதுவே அழகுதான். எதிராளியை எத்திச் செல்லுதல் என்பது கவுண்டமணியின் வெற்றி ரகசியம் அல்லவா? இலக்கியக் கவுண்டமணிகள் வெற்றி உலா வருகிறாப் போலாச்சு.
இந்த ரகளைகள் இப்போது அநேகமாக அடங்கி விட்டன. அப்படித்தான் நினைக்கிறேன். அப்படியான கதைக் களமே அமையாத பட்சம் இப்படி அடுத்தாளை நக்கல் அடிக்கிற சோலி மனதில் தட்டுவது இல்லை. இது என் வளர்ச்சி அல்லது மாற்றம் என்று வைத்துக் கொள்ளலாம். அந்த வயதுக்கேற்ற எழுத்து இந்த வயதுக்கு தன்னைப் போல மாறிக் கொள்கிறதோ என்னவோ, இதில் இன்னொரு விபரமும் குறிக்க இருக்கிறது. சுஜாதா தலைமையிலான மேற்படி எழுத்தாளர் கூட்டணி இதைப் பிடிவாதமாக தக்கவைத்துக் கொள்ள முயல்கிறது. வாசகனுக்கு இது ஒரு வாசிப்பு நிலை மாத்திரமே. இதை அடைந்து. ரசித்துவிட்டு அவன் தன் ருசியை உயர்த்திக் கொண்டு இவர்களைத் தாண்டிப் போகக் கூடும்..
எனக்கு இந்த ஆபத்து நிகழக் கூடாது.
ஒரு காலத்தில் தமிழ்வாணனின் நிறைய நாவல்களை வாசித்திருக்கிறேன். தூய தமிழ்ப்பெயர்களாக அவர் தம் பாத்திரங்களுக்கு வைப்பார். அவரது இரண்டு மகன்களுக்கும் ரவி, லெட்சுமணன் என்றுதான் பெயர் வைத்தார்... என இப்போது ஏன் நினைவு வருகிறது தெரியவில்லை. (இன்னும் அடங்கல போலருக்கே. அதுல பாருங்கோ... இரவி, இலெட்சுமணன் என்றல்லவா எழுதப் பட வேண்டும். எழுதுகிறார்களோ?) எளிய துப்பறியும் கதைகள். சங்கர்லால். துணிவே துணை. நாற்காலியில் அமர்ந்தபடி மேசையில் காலைத் தூக்கிப் போட்டுக்கொண்டு ஓய்வெடுத்தல். பள்ளிக்கூட வயசு வாசகர்களுக்கு அது வாசிக்க சுலபம். அதேபோல சாண்டில்யன். ஜெகசிற்பியன்... இப்படி ஒரு வரிசை. காலப்போக்கில் எழுத்தில் ஒரு தீவிரத்தன்மை தேட ஆரம்பித்து விடுகிறது மனசு. ஸ்ட்ராங் டிகாஷனில் கும்பகோணம் டிகிரி காப்பி தேவைப் படும் நாக்கு. அக்கால கட்டங்களில் வேறு எழுத்தாளர்களை நோக்கி தேர்ந்த வாசகன் நகர்ந்து விடுகிறான். என்றாலும் இன்னொரு தலைமுறை வரும். அது வந்து ‘இந்த’ மேற்படி எழுத்தாளர்களைப் புன்னகையுடன் கையில் எடுக்கும், திளைத்து மகிழும்... என்பது உண்மையே.
சங்கீத ரசனையிலும் இப்படி பல பாடகர்களின் பல மட்டங்களை அநேகர் உணர்ந்திருப்பீர்கள், உயர்ந்திருப்பீர்கள்!
நான் அப்படி சிமிழுக்குள் அடங்க மாட்டேன்... என என்னை வரையறுத்துக் கொள்ள எனக்குத் தெரிந்திருந்தது. குறைந்த பட்சம் ஒரு கதைப்பாணியில் இருந்து அடுத்த கதைப்பாணியை மாற்றி உருவாக்கிப் பார்க்கும் தீராத விளையாட்டு அல்லது கிறுக்கு எனக்கு உண்டு. அது கதைக் கருவாக இருக்கலாம். வடிவமாக இருக்கலாம். நடையாக, உத்தியாக இருக்கலாம். சர்ரியலிசக் கதைகள் கூடவும் எழுதிப் பார்த்திருக்கிறேன். உருவக பாணியில் இருண்மை காட்டிய கதைகள் முயன்றிருக்கிறேன். இவையெல்லாம் எழுதியபின் அந்தளவு சிறப்பாக வராது போக நேரலாம்... ஆனாலும் முயற்சி முக்கியம் என்பது எனது துணிபு. பெர்க்மென், குரோசோவா, தார்க்கோவ்ஸ்கி போன்றவர்கள் ஒரு படம் போல இன்னொரு படம் அமையாமல் மிக கவனமாகத் தங்களைப் புதுப்பித்துக் கொள்கிறார்கள். யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது.
புத்தக வடிவில் கதைகளை அடுக்கிப் பார்ப்பது வாழ்வில் இன்னொரு சுவாரஸ்யம். வாசகனுக்கு ஒரு விருந்து பரிமாறல் போல, எங்கெங்கே எந்தப் பதார்த்தம் வைக்க வேண்டும் என்கிற கவனம் போல, அந்தப் பத்து பதினைந்து கதைகளை வரிசைப் படுத்துவது ஒரு விஷயம் தான். ஒருசேர வாசிக்கையில் வாசகன் அடையும் உணர்ச்சி அலை என்ன? புத்தகத்தை மூடி வைக்கையில் அவன் அடைகிற உணர்வுத்தளம் என்ன... என்றெல்லாம் யோசிப்பது தனி அனுபவம். அதேபோல ஒரு கதைக்குத் தலைப்பு வைக்க எத்தனை மெனக்கிடுகிறோமோ அதே அளவு அந்த நூலின் தலைப்புக்கும் நான் பாடுபட விரும்புகிறேன். அந்தத் தொகுப்பில் உள்ள எந்தக் கதையின் தலைப்புமாக அல்லாமல் புத்தகத்துக்கு, இலக்கியம் என்கிற அடையாளங் காட்டும் பொதுத்தலைப்பு தருவதாக என் முதல் சிறுகதைத் தொகுதியில் இருந்தே நான் முயற்சி செய்தேன். ‘அட்சரேகை தீர்க்கரேகை’ - இது என் முதல் நூல். இந்தத் தலைப்பில் தொகுப்பில் கதை எதுவும் இல்லை. இந்த ரேகைகள், பூமியின் மேல் நாமே கற்பனையாக இட்ட கோடுகள். என்றாலும் உண்மைகளை அறிய இந்தக் கற்பனைக் கோடுகள் நமக்கு எவ்வளவு உதவி செய்கின்றன. என் கதைகளும் இப்படியே, இவை கற்பனையே, ஆனாலும் உண்மையை இன்னும் துலக்கி இவை காட்ட வல்லவை... என்பது தலைப்பின் உட்கிடக்கை.
இன்றுவரை நான் இந்த என் பாணியைத் தொடர முயல்கிறேன். என் அநேகத் தொகுப்புகள் இப்படி பொதுத்தலைப்பு சார்ந்தவையே. ஒரு துண்டு ஆகாயம், சராசரி இந்தியன், உயிரைச் சேமித்து வைக்கிறேன்... முன்பு ஒரு பதிவில் குறிப்பிட்டபடி புதுவெள்ளம், என்ற நூலுக்கு உள்ளே பொருளடக்கம் என்பதற்கு பதிலாக நீர்மட்டம் என்று போட்டு கதைகளின் வரிசையைத் தலைகீழாக அடுக்கியதைச் சொன்னேன். அதேபோல சமீபத்திய ஒரு சிறுகதைத் தொகுதிக்கு, தானும் அதுவாகப் பாவித்து, என தலைப்பு வைத்திருந்தேன். ஒரு சுய எள்ளல். ஒரு சிறுகதைக்கு வான்கோழிகளின் ஆகாயம், என்று தலைப்பு வைத்தேன். அதே போல இது. தானும் அதுவாகப் பாவித்து - அதில் பொருளடக்கம் என்பதற்கு பதில், பொல்லாச் சிறகை விரித்து, என்று குறிப்பிட்டேன். இப்படி வாசகரோடு சிறு விளையாட்டு எனக்கு எப்பவுமே உவப்பானது. தலைப்பு வைப்பதில் எனது மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்புகளுக்கும் அவ்வண்ணமே பேர் சூட்டினேன். கனவுச் சந்தை. மேற்கு சாளரம். வேற்றூர் வானம். கடைசியாக, அயல்வெளி.
ஒரு தொடர்ந்த சிறுகதை யெழுத்துப் பயணத்தில் சில மைல்கல்கள் நமக்கு அடையாளப் படுகின்றன. அப்படியான கௌரவம் எத்தனை ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் படைப்பாளனுக்கு அளித்து விடுகிறது. அவ்வளவில் என் முதல் புத்தகம் வெளியிட்ட கலைஞன் பதிப்பகம் பெரிய அளவில் என் எழுத்துக்கு கௌரவம் செய்திருக்கிறது. இரண்டாவதாக, (அப்ப முதலாவதாக, என்ன? அதை அடுத்துப் பகிர்வேன்.) என் ‘இல்லாததாய் இருக்கிறது’ சிறுகதைத் தொகுப்பை அது மலேஷியாவில் வெளியிட்டது. மலாய் பல்கலைக் கழகத்தோடு இணைந்து மலேஷிய அரசின் விருந்தினராக என்னை அழைத்தார்கள். நான்கு நாட்கள் ராஜ மாரியாதை. அதற்கு முன்பு, கலைஞன் திரு மாசிலாமணி தமிழின் குரலாக அடையாளப்பட்ட எழுத்தாளர்களின் சிறுகதைகளை மொத்தத் தொகுப்பாகத் திரட்டி தனி நூலாக்க விருப்பம் கொண்டபோது, நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் அப்படி, மொத்தத் திரட்டு வெளிவரக் கண்டார்கள். தமிழ் இலக்கிய வரலாற்றில் அது, அந்த நிகழ்ச்சி ஒரு மைல்கல் அல்லவா? அதில் நானும் இடம் பிடித்தது, என் வாழ்வின் ஒரு மைல்கல் என நம்புகிறேன். இரு தொகுதிகளாக, ‘எஸ்.சங்கரநாராயணன் கதைகள்’ என்று 2000 ஆம் ஆண்டில் பெருங் கதைத்திரட்டு வெளிவந்தது. 1994 வரையில் வெளியான எனது சிறுகதைகளைத் தொகுத்து அந்த நூல் அமைந்தது. பிறகான கதைகள் அந்த சமயத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் என்ற அளவில் அந்தப் பதிப்பாளர்களை சிரமப்படுத்த வேண்டாமாய் இருந்தது எனக்கு. கலைஞன் திரு மாசிலாமணி தந்த முதல் கௌரவம் இது. மொத்தக் கதைத் திரட்டு. இரண்டாவது, அவர் மகன் திரு நந்தன் தந்தது. மலேஷியாவில் நூல் வெளியீடு.
வாழ்நாள் சாதனையாளரான அன்னம் விருது, இலக்கிய வீதி சார்பில் கிடைத்ததையும் குறிப்பிட்டாக வேண்டும். அதேபோல, மொழிபெயர்ப்பாளனாக வாழ்நாள் சாதனை விருதும் தமிழக அரசே இந்த ஆண்டு எனக்கு வழ்ங்கியதும் எப்பெரும் பேறு...
இந்நாட்களில் பத்திரிகையின் சிறப்பு எழுத்தாள அந்தஸ்தும் தந்தார்கள். தீபாவளி பொங்கல் என சிறப்பிதழ்களுக்குக் கதைகள் கேட்டார்கள். புதுப் பத்திரிகை, முதல் இதழில் எழுதுங்கள் என்றார்கள். தனி முத்திரைக் கதைகள் என அடையாளமும் தந்தார்கள். தலைப்பு தந்து கதை எழுத வாய்ப்பு தந்தார்கள். ஓவியத்துக்கு, புகைப்படத்துக்கு எழுதச் சொன்னார்கள். ‘புதிய பார்வை’ இதழில் வாசகர்களிடம் கதைக் கரு கேட்டு அதை எழுத்தாளர்களிடம் தந்து கதை எழுதச் சொன்னபோது எனக்கும் ஒரு கதை எழுத வாய்ப்பு தரப்பட்டது. ‘மடிப்பித்து’ என ஒரு கதை அப்படி அமைந்தது.
நானும் அப்போது தினமணி கதிர் ஆசிரியராக இருந்த (கணையாழி) கஸ்தூரிரங்கனுமாக, எட்டு தலைப்புகள் நான் தர, சிறுகதைப் போட்டி வைத்தோம். இன்று வெள்ளி நாளை புதன், நான் அவனில்லை அவன்தான் நான், ஒரு மயானத்தின் மரணம், நடுப்பகலில் நட்சத்திரம்... இப்படி எட்டு தலைப்புகள். நடுப்பகலில் நட்சத்திரம், என்பதை ஒருவர் சினிமா நடிகரின் கதையாகச் சொன்னார். நான் அவனில்லை அவன்தான் நான் - என்பதை, ஒருவர் தூரத்தில் இருந்து அடையாளங் காட்டுவதாகவும் மற்றவர் தவறாகப் புரிந்து கொள்வதாகவும் நியாயப் படுத்தினார். இன்று வெள்ளி நாளை புதன், என்ற தலைப்பை ஒருவர் இன்னும் அழகாகப் பயன்படுத்தினார். புதன்கிழமை பள்ளி ஆசிரியர் ஒருவர் இறந்து விடுகிறார். அன்று பள்ளி விடுமுறை விட்டு விடுகிறார்கள். சனிக்கிழமை அந்தப் பள்ளிக்கூடத்துக்கு விடுமுறையாய் இருந்ததை மாற்றி, புதன்கிழமைப் பாடத்திட்டம் என்று அறிவிக்கிறார்கள்!... எப்படி யெல்லாம் சிந்திக்கிறார்கள் நம் மக்கள்!
மேற்சொன்னவை தவிர, பத்திரிகைகளில் எனக்கு முதல் வரி, கடைசி வரி இரண்டும் தந்து கதை கேட்டார்கள். புதிய ஆத்திசூடி களைகளில், சூரரைப் போற்று, என எழுதித் தந்தேன். ‘காட்டு மனிதர்களும் நாட்டு மிருகங்களும்’ என அது வீரப்பனின் சாயல் கொண்ட கதை. பத்து பன்னிரெண்டு எழுத்தாளர்களாக ஆளுக்கு ஒரு வாரம் என தொடர்கதை எழுதினோம்... நட்சத்திர கௌரவத்துடன் என்னைப் பயன்படுத்திக் கொண்ட அவர்கள் அனைவருக்கும் நன்றி. இறைத்த கிணறு ஊறும். வாய்ப்புகள் என்னை வளர்த்தெடுத்தன என்பதில் சந்தேகம் இல்லை. எம்.எஸ்.வி.யோ, இளையராஜாவோ இன்றைய உச்சத்தை எட்டியதற்கு முதல் காரணம் அவர்களுக்கு அமைந்த வாய்ப்புகள். அவற்றை அவர்கள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். நானும் அதில் கவனம் செலுத்தினேன். கதை கேட்ட மாத்திரத்தில் என்னுள் பொங்கும் உற்சாகம் வார்த்தைகளுக்கு அப்பாற் பட்டது.
2
முதல் இரண்டு தொகுதிகள் - மொத்தக் கதைகள் என வெளிவந்த நிலையில் இதன் அடுத்த கட்டமாக எனக்கு ஒரு யோசனை வந்தது. இதுவரை உலகில் எந்த எழுத்தாளனுமே யோசிக்காத அளவில் புதிதாய் ஒரு காரியம் செய்ய விரும்பினேன். ஜேம்ஸ் ஜாய்ஸ் தமது ஊரான டப்ளின் நகரைச் சுற்றியே நடப்பதாக கதைகள் எழுதி ‘டப்ளினர்ஸ்’ என தொகுத்திருந்தார். அதேபோல ஷெர்வுட் ஆன்டர்சன், ஒரே ஊர் அடையாளத்துடன் கதைகள் எழுதி ஒரே தொகுப்பில் சேர்த்திருக்கிறார்... என்றாலும் ஒரு குறிப்பிட்ட சூழலில், அல்லது தளத்தில் இயங்குகிறாப் போல ஒரே எழுத்தாளரின் சிறுகதைகள், தனி நூல் என அமையப் பெறவே இல்லை. இதுவரை உலக அளவில் அப்படி முயற்சிகள் இல்லை என்பது ஆச்சர்யமே.
நான் கம்யூனிச சித்தாந்தங்கள் சார்ந்து, அதைத் தூக்கிப் பிடித்து கதைகள் தருபவன் அல்ல. என்ற அளவில்... அரசியல் சார்ந்து நான் எழுதிய கதைகளை ஒருசேர அடையாளப் படுத்தினால் என்ன என்பது முதல் யோசனையாய் இருந்தது எனக்கு. அப்போது இணையத்தில் ஈ-புத்தகங்கள் வர ஆரம்பித்த காலகட்டம். நிலாச்சாரல் என்ற இணைய இதழ் நடத்தும் திருமதி நிலா என்னிடம் முதல் ஈ-புத்தகம் கேட்டபோது அப்படியொரு முயற்சியை மேற்கொண்டேன். அரசியல் சூழ்ந்து நான் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து ‘நரஸ்துதி காலம்’ என்று அளித்தேன். அவர் வெளியிட்ட புத்தகங்களிலேயே அதிகம் விற்பனையான புத்தகம் இதுதான், என அவர் பாராட்டியபோது மகிழ்ச்சியாய் இருந்தது.
அதன்பிறகு கார்கில் போர் வந்த காலகட்டத்தில், எல்லாமே யுத்தம் சார்ந்த கதைகளாக எழுதிச் சேர்த்த தொகுதி ‘யுத்தம்.’ மறு பதிப்பாக அது ‘இரத்த ஆறு’ எனவும் வெளியானது. யுத்தம் சார்ந்த கதைகளின் தொகுதி, ஒரே எழுத்தாளருடையது இதுவரை வந்தது இல்லை, தமிழிலும், உலக அளவிலும். ஓய்வு பெற்ற ஒரு ராணுவ லெப்டினன்ட் நூலை வெளியிட, இன்னொரு ஓய்வு பெற்ற ராணுவ லெப்டினன்ட் ஒரு ஆகஸ்டு 15 நாளில் பெற்றுக் கொண்டார். ஒருவர் போர்க்கால நடவடிக்கைகள் பற்றி எடுத்துச் சொன்னது எல்லாருக்குமே புது அனுபவமாக இருந்தது. அடுத்த அதிகாரி புத்தகத்துக் கதைகளைப் பற்றிப் பேசினார். திரட்டாமலேயே நிறையப் பேர் வந்து கலந்து கொண்ட கூட்டம் அது.
ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் அமையும், அதே சமயம் அந்த வட்டத்தை நுணுகி ஆராயும் போக்குள்ள கதைகள் என இப்படிக் கதைகளைத் தொகுக்க எனக்கு ஆர்வம் அதிகம் ஆகிவிட்டது. இதில் வாசகரோ, மற்றவரோ யூகிக்க எளிமையான தொகுதிகள், முற்றிலும் பெண்களே முன்னால் வரக்கூடிய கதைகள், செக்ஸ் சார்ந்த கதைகள்... என நான் தேர்வு செய்ய விரும்பவில்லை. அந்தத் தொகுப்பு சார்ந்த கற்பனையே புத்தகத்தைக் கையில் எடுக்கிற ஆர்வத்தை, புன்னகையைத் தரும் அளவில் புதுமையாக, தனித்தன்மையுடன், யாரும் எதிர்பாராத அளவில் அமைய வேண்டும்... என நினைத்தேன்.
பிறந்து ஆறு ஏழு மாதங்களே ஆன குழந்தைகள் பற்றிய என் சிறுகதைகளின் தொகுப்பு அடுத்ததாக நான் திரட்டினேன். இருவர் எழுதிய கவிதை - என்பது பெயர். அந்தக் குழந்தைகள் ஒரு வார்த்தை கூட கதைகளில் பேசாது. என்றாலும் கதைகள் பூராவும் அவற்றைச் சுற்றி அமைந்தவை. அதேபோல முதுமையின் கூறுகளைப் பேசும், பல்வேறு கோணங்களில் முதுமையை விளக்கும் கதைகளாக ‘இரண்டாயிரம் காலத்துப் பயிர்’ வெளியிட்டேன்.
நிலம் நீர் காற்று நெருப்பு ஆகாயம், என பஞ்ச பூதங்களைப் பற்றிய என் கதைகள் ‘பிரபஞ்ச பூதங்கள்.’ அதே தளத்தில் லா.ச.ரா, சுஜாதா ஆகியோர் செயல் பட்டிருக்கிறார்கள். என்றாலும் அந்த உத்தியின் சவால் எனக்குப் பிடித்தது.
பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்த அன்னையின் பால் ஈர்க்கப்பட்டு முழுக்க ஆன்மிகம் சார்ந்த கதைகளாக ‘பெண்கொற்றக்குடை.’
இரவை மையப்படுத்தி அமைந்த எனது கதைகள், ‘காலம் விரித்த குடை.’ பிற்பாடு ‘இரவு’ என்றே ஜெயமோகன் ஒரு தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். எனது இந்த முயற்சிகளைப் பார்த்து ஒன்றிரண்டு இதேமாதிரியான தொகுதிகளை மதுமிதா ராஜா, சந்தியா பதிப்பகத்துக்காகத் தொகுத்தார். அதில் மரம் தொகுப்பிலும், இரவு தொகுப்பிலும் நான் பங்களித்தேன். எழுத்தாளர்களே பாத்திரமாக அமைந்த கதைகளின் தொகுதி ‘விரல் நர்த்தனம்.’ மன நலம் பிறழ்ந்த பாத்திரங்களாக ஒரே தொகுதியில் ‘நாணல் பைத்தியம்.’ நம்மைப் புரிந்து கொள்ளாத அவர்களைப் புரிந்து கொள்வோம். அதேபோல, மனிதனோடு மிருகங்களைப் பேசும் தொகுதி ‘அஃறிணை.’
எனது மூத்த மகனின் திருமண சந்தர்ப்பத்தில் கல்யாணம் சார்ந்து, காதல் அல்லது பெண் பார்த்தல், கல்யாணம் பேசுதல், திருமண வைபவங்கள், திருமணத்துக்குப் பின்னான மாற்றங்கள்... எனக் கதைகளை அடுக்கி ஒரு தொகுப்பு ‘கைத்தலம் பற்ற’ என்று வெளியிட்டேன். கல்யாணப் பரிசு திரைப்படத்தில் எழுத்தாளராக நடித்த தங்கவேலுவுக்கு சமர்ப்பணம் - இதுவே ஒரு கல்யாணத்தின் பரிசு தானே?
முற்றிலும் அருவம் சார்ந்த கதைகளை முன்னிறுத்தி, கதையில் எந்தப் பாத்திரத்தையும் வலியுறுத்தாமல் அருவத்தை விவரப்படுத்தும் கதைகளாக ‘இல்லாததாய் இருக்கிறது’ வெளியானது. அதன் முன்னீடாக இப்படிக் குறிப்பிட்டிருப்பேன் - இல்லாததாய் இருக்கிறது - வானம், தெய்வம், நிவேதனம், மன்மதன், கலை, காலம், இருள், ஆவி, திசை, வெற்றிடம், பூஜ்யம், எல்லை, விதி, மறுபிறவி, உயிர், சந்ததி, துறவு, சுயம், மனம், ஆத்மா, அறிவு, மென்பொருள், கானல், கனவு, பிம்பம் . . . இவற்றுடன், இந்தக் கதைகளில் நான்!
இதே பாணியில், எனது சமீபத்திய சிறுகதைத் திரட்டு, ‘நன்றி ஓ ஹென்றி.’ பளிச்சென்ற முடிவு கொண்ட கதைகள்!
3
எனது கதைகள் என்று இப்படித் திரட்டுவது தவிர, பொதுவாக நான் சிறுகதைத் திரட்டுகளில் மிகுந்த ஆர்வம் உள்ளவன். எனது முதல் சிறுகதைத் திரட்டு ‘ஆகாயப்பந்தல்’ தொடங்கி ஏழெட்டு திரட்டுகள் தந்திருக்கிறேன். நான் ரசித்த கதைகளின் அணிவகுப்பு அவை. மேற்சொன்ன எனது ‘ஒற்றைகவனக் கதைகள்,’ என்ற அளவில் சில திரட்டுகளும் கொண்டு வந்தேன். அவ்வகையில் முதலாவது, ஜுகல்பந்தி. அன்றுமுதல் இன்றுவரை சங்கீதம் சார்ந்து எழுத்தாளர்கள் எப்படியெல்லாம் எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள், என்கிற திரட்டு. வடக்கு வாசல் என்கிற தில்லி இதழ் சார்பில் யதார்த்தா பெண்ணேஸ்வரன் அதை நூலாகக் கொண்டு வந்தார். தில்லி தமிழ்ச் சங்கத்தில் நூலை அப்போதைய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் வெளியிட முதல் பிரதியை சுதா ரகுநாதன் பெற்றார்.
முதல் பக்கத்தில் எனது அறிமுகம், இரண்டாம் தமிழுக்கு முதல் தமிழின் வணக்கம்!
கவனம் மிக்கவர் சார்பில் சங்கீதக் கதைகளைத் தொகுத்த பின், உணவு பற்றிய கதைகள், எல்லாருக்குமான விஷயம் அல்லவா உணவு, இரு தொகுதிகளாக, அமிர்தம், எனத் தந்தேன். அதன்பின் வந்தது ‘வேலைசூழுலகு.’ வீடு போலவே அலுவலகமும் மிக முக்கியமான அளவில் மனித வாழ்வில் பங்கு வகிப்பதை எடுத்துக் காட்டும், அலுவலகச் சூழல் கதைகள். இந்த வரிசையில் ‘தருணம்’ என்கிற திரட்டு போன ஆண்டு வெளியானது. வாழ்வில் சில தருணங்கள் திடீரென சம்பவித்து பெரிய பாதிப்பை நிகழ்த்தி விட்டு ஓய்ந்து விடுகின்றன. என்றாலும் அந்தத் தருணங்களுக்கு முன், பின் என்று வாழ்க்கை அடையாளப் படும் அளவுக்கு அவை முக்கிய பாதிப்பைத் தந்து போகின்றன... அப்படிப்பட்ட தருணங்களின் தொகுப்பான சிறுகதைகளைப் பல்வேறு எழுத்தாளர்கள் பதிவு செய்திருப்பதை எடுத்துக் காட்டும் திரட்டு அது.
காலம் அனுமதித்தால் மேலும் திரட்டுகள் கொண்டு வருவேன். மனதில் இரண்டு மூன்று யோசனைகள். அவற்றின் பின்புலம் பற்றி இப்போது வெளியிட வேண்டாம். ஆர்வமுள்ளவர்கள் காத்திருப்பதை விரும்புவார்கள். அவர்களை நான் மதிக்கிறேன். வேறு யாரும் முயற்சி செய்யாத திரட்டுகளாக அவை அமைய வேண்டும்... என்கிற அளவில் சில ரகசியங்கள் நல்லது தானே?



(யானையின் வண்ணப்படம் -
அடுத்த சனியோடு நிறைவு காண்கிறது.)
storysankar@gmail.com
91 9789987842 - 91 9445016842

Friday, April 19, 2019


part 38

அதோ அந்த
பறவை போல
*
எஸ்.சங்கரநாராயணன்
*

முதலில் துணுக்குகள், வாசகர் கடிதங்கள் என்றெல்லாம் எழுதி அச்சில் என் பெயர் பார்த்து மகிழ்ந்து, பிறகு சிறுகதை எழுத்தாளன் என்று மெல்ல, பொந்துக்கு வெளியே வரும் பாம்பு போல தயங்கித் தலை நீட்டினேன். அப்படித்தான் எழுத்துக்கு வர முடியும் என்று தோன்றியது. எழுத்தை, வாசிப்பை ஊக்குவிக்க எடுத்துக்காட்டி வழிநடத்த ஆட்கள் இல்லை. கைக்குக் கிடைத்ததை வாசிப்பது, பிறகு அதில் ஒரு ருசி தட்டி, குறிப்பிட்ட எழுத்தாளர்களை ரசித்து, அவர் எழுத்துக்களைப் பின் தொடர்ந்து, பின் எழுத்தை ஆய்வு செய்து, விமரிசனப் பாங்கில் அலசிப் பார்த்து மேலதிகத் தரமான எழுத்துக்களுக்கு நகர்வது... அதுவும் இது போலத்தானே அல்லவா? ஆனால் சிலர் இயல்பிலேயே உள் சூட்சுமத்தை திடீரென்று தாங்களே உணர்ந்து கொள்கிறார்கள். நாம் வெகு காலம் யோசித்து கண்டடைந்த முடிவுகளை அவர்கள் தற்செயலாகவே அடைந்து விடுகிறார்கள்... வாழ்க்கை பல ஆச்சர்யங்கள் கொண்டது.
சிறுகதை எழுதவே நிறைய மெனக்கிட வேண்டி யிருந்தது. என்றாலும் நாலுக்கு ரெண்டு பிரசுரமும் ஆகிறது என்று அந்த ஆசுவாசத்தில் தொடர்கிறோம். நாவல் என்பது, குறுநாவல் என்பது வேறொரு பயிற்சிக் களம். படித்துறை, நதிதீரம், ஊரணி என வெவ்வேறு நீர்நிலைகள்... அதைப்போல. அநேகமாக குறுநாவல்கள் யாரும் எழுதுவதே இல்லை. சிறுகதை என ஆரம்பித்து கையைச் சுருக்கத் தெரியாமல் பெரிசாய் எழுதி விட நேர்ந்தவர்கள் அநேகம். நாவல் என்பதின் ‘ரிஸ்க்’ பெரியது. அதை வெளியிட ஆள் கிடைப்பது அரிது. தவிரவும் அந்தப் பெரிய பரப்பில் நீச்சல் அடிப்பது, பயமற்று நெடுஞ்சாலையில் தனியே வண்டியோட்டிப் போகிறாப் போல. தனியே என்பது... நாம் முதலில் நாவல் எழுதும் அனுபவத்தைச் சொல்கிறேன். சுவாரஸ்யமாக இருக்கிறதா என்கிற சந்தேகம் வந்தபடியே யிருக்கும். நமக்குத் தெரிந்ததை யெல்லாம் வளவளவென்று கொட்டுகிறோமோ (தேளாய்?) என்று தோன்றும். திடீரென்று எழுதுவதை நிறுத்தி மூச்சு வாங்கிக் கொள்ளவும் நேரும். எழுதிப் பாதியில் நிறுத்திய நாவல்கள் நிறையப் பேரிடம் இப்பவும் இருக்கும். என்னிடமே உண்டு. ஒரு நாவலை, சாதிகளால் எப்படி ஊர் துண்டாடப் படுகிறது... என அதன் கலவரங்களை விரித்து எழுத முற்பட்டேன். அதன் பிரதியே இப்போது என்னிடம் இல்லை. காணவில்லை.
பல சிறுகதைகளைத் தாண்டித் தான் நாவல் எழுதலாம் என்கிற யோசனையே வரும். அத்தனைக்கு மக்களோடு, சம்பவங்களோடு ஊடாடித் திரிய வேண்டும், சந்தைமாடு போல... என நினைத்திருந்தேன். ஆனால் இன்றைக்கு நிறையப் பேர் கதை கவிதை கட்டுரை எதுவும் முயற்சி செய்யாமலேயே நேரடியாய் நாவல் எழுத வந்திருக்கிறார்கள், என்பதைப் பார்க்க வியப்பாகத் தான் இருக்கிறது. சமுத்திர ஸ்நானம்! அவர்கள் சிறுகதைகள் எழுதி பிரசுரிக்காமல் இருந்தார்களோ என்னவோ? வண்ணதாசன், புதுமைப்பித்தன் போன்றவர்கள் நாவல் பக்கமே வரவில்லை. லா.ச.ரா. குறுநாவல்கள், நாவல்கள் எழுதினாலும், அவை நீண்ட கதைகளே. இரா.முருகவேள் போன்றவர்கள் நேரடியாக நாவல் அனுபவத்தைக் கண்டார்கள். இரா.முருகன் சிறுகதைகள் எழுதத் தொடங்கி, இப்போது அவருக்கு ருசி நாவல் தான். சிறுகதை எழுதுவதை விட நாவல் எழுத அவருக்குப் பிரியமாய் இருக்கிறது. இன்னொரு பாவப்பட்ட என் நண்பர் ஒருவர். ம்ஹும். பேர் எதுக்கு? வணிகப் பத்திரிகைக்கு கதை மேல் கதையாக எழுதி அனுப்பிக் கொண்டே யிருந்தார். தபால் ஆபிசே அவரை வைத்து தான் இயங்கியது. பிரசுரம் கண்டவை எல்லாம் ஒருபக்கக் கதைகள். “ஏண்ணா நாலைந்து பக்கங்கள் வரும் அளவில் பெரிய கதையாக முயற்சி செய்யலாமே?” என்று ஒருநாள் கேட்டுவிட்டேன். “நான் பெரிய கதையாகத் தான் எழுதுகிறேன். அவர்கள் சுருக்கி ஒருபக்கமாகப் போடுகிறார்கள்” என்றார்.
ஒருபக்கக் கதை என்று அவர் அனுப்பினால் என்னாகும் தெரியவில்லை.
சொல்ல மறந்து விட்டேன். அவர் துணுக்குகளும் எழுதுவார்!
2
நான் எழுதிய முதல் நாவல் இரணடாவதாக அச்சில் வெளியானது. அதை ஓர் எளிய பதிப்பாளரிடம் தந்து கசப்பான அனுபவங்களை அடைந்தேன். அதற்கு ‘கிரகணம்’ என்று பெயர் வைத்தேன். கிரகணம் விலகவே விலகாது போல ஆகி விட்டது. பெரிய நாவலாக இருக்கிறது. சிறிது குறைத்து 200 250 பக்க அளவில் அச்சிடும்படி தாருங்கள், என்றார்கள். மறுக்கப் பார்த்தால், அட்டை அடித்துத் தயாராய் வைத்திருந்தார்கள். காட்டினார்கள். எழுத்தாளர் பேர் இல்லாமல் அட்டை தயாராய் இருந்தது. என்ன செய்ய? அப்போது மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழ் தற்கால இலக்கியம், துறைத் தலைவராக இருந்த முனைவர் சு.வேங்கடராமன் மனமுவந்து அதைக் குறைத்துத் தந்தார். அதில் நான் அழகான பகுதிகள் என நினைத்திருந்த பல பகுதிகள் வெட்டி குறைக்கப் பட்டன. “தம்பி, இது உன் முதல் நாவல், ரொம்ப எகிர்றதெல்லாம் வேணாம், உன் நல்லதுக்கு...” என என் வாலையே குறைத்தார் அவர். அவர் சொன்னதை இளையவனான நான் வழிமொழிந்தேன். அதன்பிறகும் அந்தப் பதிப்பாளரோடு வாக்குவாதம் வந்து, ‘கிரகணம்’ வெளியாகும் சாத்தியக்கூறுகள் குறைவாய் இருந்தன. திருப்பி வாங்கி வந்துவிட்டேன். (கிரகணம், என அந்தப் பதிப்பகத்தின் ஆஸ்தான எழுத்தாளர் வேறு நாவல் அவருக்கு அளித்து அது வெளியானது தனிக் கதை. அட்டை தயாரித்து விட்டு எழுதப்பட்ட நாவல்.) அடுத்த முயற்சியாக கலைஞன் பதிப்பகத்தில் எனது இரண்டாவது நாவலுக்குப் பிறகு இதுவும் வெளியானது. வேறு பதிப்பகத்தில் இருந்து வாங்கி வருகிறேன் ஐயா, என்று சொன்னபோது மாசிலாமணி, பதிப்பாளர், சங்கரநாராயணன் நாவலை மறுக்க முடியுமோ, என்றது இப்போது நினைத்தாலும் கண் பனிக்க வைக்கிறது.
எனது முதல் நாவல் ‘மானுட சங்கமம்.’ ஒரு கிராமத்தின் கதை என அதை மனசில் இருத்தி பாத்திரங்களின் ஊடே ஆனால் ஊரின் கதையாக அதைச் சொல்ல ஆவல் கொண்டேன். கதாபத்திரங்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை ஊரின் வரலாறு போல் பொருத்திச் சொன்னேன். நாவல் துவக்கத்தில் பெருவெள்ளம் வரும். ஊரிலேயே வயதான பாட்டி ஒருத்தி அந்த வெள்ளத்தில், தன் சிறு வயதில் தாயாரைப் பறி கொடுத்திருப்பாள். காலரா வந்து ஊரில் மரணங்கள் திரும்பத் திரும்ப சம்பவிக்கும். தபாலாசிஸ் போஸ்ட் மாஸ்டர் பணி ஓய்வு பெற்று வெளியேறுவார். வேறொருவர் அங்கே பணிக்கு வருவார். ஒரு பகுத்தறிவு பேசும் பாத்திரம். பிராமணப் பெண்ணிடம் அது அடங்கும்! அந்த வயசுக் கதை... நாதஸ்வரக் கலைஞர் ஒருவர், தன் கலைக்கு மரியாதை இல்லாததால் ஊரை விட்டு வெளியேறுவார் - இப்படி அமையும் நாவல், கடைசிப் பகுதியில் ஒரு கிறித்துவ டீச்சர் பள்ளிக்கூடத்தில் வேலைக்கு வருவாள். அவள் குழந்தைகளுக்கு ‘ஏசுவை நேசித்துக் கை தட்டு’ என்று புதுப் பாடல் எல்லாம் சொல்லித் தருவாள். ஊர்ப் பெண் பிரமீளாவுக்குக் கல்யாணம்... அத்தோடு நிறைவு காணும் நாவல். ஆனால் அந்தக் கல்யாணம் நின்று விடும், என ஒரு கிளைக்கதை. ‘மானுட சங்கமம்’ நாவலுக்கு தீபம் நா.பா. முன்னுரை தந்தார். முன்னுரை என்பது என்ன, விழா துவங்குமுன் தீபம் ஏற்றுவது போலத் தானே?
நான் இரண்டாவதாக எழுதி முதலாவதாக அச்சான நாவல் ‘நந்தவனத்துப் பறவைகள்.’ கிளிக்கூட்டம், என இரண்டாம் பதிப்பும் கண்டது அது. காலத்தின் ஆகச் சிறு பகுதியை எடுத்துக் கொண்டு அதிலேயே நாவல் நுட்பமாக உள்ளே இயங்க வேண்டும், என ஆர்வம் கொண்டு அமைத்த நாவல் இது. தன்னைப் பற்றி தனக்கே நம்பிக்கை இல்லாத ஒருவனின் கதை. அலுவலகத்தில் தன்னை வேலைக்கு வைத்துக் கொள்வதே தான் செய்த புண்ணியம் என தானே தன்னைப் பற்றித் தாழ்வாக நினைக்கிறான் அவன். அப்படியாப்பட்ட அவனுக்குக் கல்யாணம்! வீட்டில் ஏற்பாடுகள் ஆரம்பிக்கிறார்கள்! எப்படி தன் கல்யாணம் பற்றி அவன் பயந்து குழம்பி தடுமாறுகிறான் என்பதே கதை. குடும்பத் தலைவன் என்று பொறுப்பு, மேலாண்மை தன்னாலாகுமா, என்கிற உதறல் தான். கடைசியில்... வாய்த்த மனைவி, அவனை மதித்துப் பேசுகிறாள். எல்லார்க்கும் எல்லாம் தெரிஞ்சிருதா என்ன. இருவருமாச் சேர்ந்தே கத்துக்கலாம்.., என்று ஆசுவாசப் படுத்துகிறாள் அவனை. இது கதையமைப்பு. அவளுடன் ஒரு சிறு பிணக்கு வந்து அதை தானே வெற்றிகரமாக அவன் சமாளிப்பதாக, நல் வார்த்தையுடன் முடிகிறது நாவல். மானுட சங்கமத்தை விட, இந்த நந்தவனத்துப் பறவைகள் நாவல் மிகுந்த தற்காலத் தன்மை கொண்டது.
இந்த நாவல்கள் இரண்டுமே மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியப் பயில்நூலாக அங்கிகாரம் பெற்றன. மூத்த எழுத்தாளர்கள் பலர் அவற்றை கவனித்தார்கள் என்று பின்னாளில் அறிய சந்தோசம். நான் இன்றைய எழுத்தாளன். அவ்வளவில் என் அடையாளம், என் நாவல்களில் நான் கையாளும் காலத்தின் சிற்றளவு, என வகுத்துக் கொண்டேன். முதல் இரண்டு நாவல்கள் கிராமப் பின்னணியில் அமைந்து விட்டன. இரண்டாவது நாவலின் களம் வளர்ந்து வரும் சிற்றூர். ஸ்ரீவைகுண்டம், வத்றாப் என்று எனது சூழலின் அடையாளமாக அது காணக் கிடைப்பது தவிர்க்க முடியாதது.
என் பின்னணியிலேயே ஆனால் நகரம் பற்றி எழுதலாம் என்று அமைத்துக்கொண்ட என் மூன்றாவது நாவல். ‘நகரம்’ என்றே அதன் பெயர் வைத்தேன். முன் வாசிப்பு செய்தவர்கள், அவர்கள் பார்த்த நகரத்தின் கூறுகளை, அதில் இருந்திருக்கலாம் என அபிப்ராயப் பட்டுப் பேசியது வியப்பளித்தது. நகரத்துக்குப் புதிதாய் வரும் இளைஞன். சென்னையின் கச்சேரி சீசனைப் பற்றிச் சொல்லவே இல்லை அது, என ஒருவர் கேட்டார். அவனுக்கு கர்நாடக சங்கீத அறிவும் ரசனையும் நான் தரவே இல்லை. அவன் ஊரில் எங்கு போனாலும் நடை, அல்லது அப்பாவின் சைக்கிள் என்று போய் வருகிறவன். வேலை தேடி நகரத்துக்குள் நுழைந்தவன். பாத்திர அடிப்படையில் நகரத்தை எதிர்கொள்ளும் பார்வை அம்சங்கள் மாறவே செய்யும்.
அச்சாகும் போது ‘காலத்துளி’ என வெளியிட்டேன். ஒரு ரெண்டுங் கெட்டான் ஊரில் இருந்து சென்னை நோக்கி, அசட்டு நம்பிக்கைகளுடனும், தன்னைப் பற்றிய அதித பிரமைகளுடனும் வந்து சேர்கிற இளைஞன். நகரத்து இளைஞர்களின் வாழ்க்கை சார்ந்த சுய கவனம் அவனை அயர்த்துகிறது. தங்கள் எதிர்காலத்தை அவர்கள் நுட்பமாக யோசிக்கிறார்கள். இளைஞர்கள் அதற்குக் கடுமையாகத் தங்களைத் தயார் செய்து கொள்கிறார்கள். சிறப்பு வகுப்புகள் போய் வருகிறார்கள். கணினி கையாளக் கற்றுக் கொள்கிறார்கள். கடும் பயிற்சியுடன் அவர்கள் முட்டி மோதி முந்திச் செல்கிறார்கள். எல்லாரும் எதாவது வேலை என்று கிடைத்ததைப் பற்றிக் கொண்டு, பிறகு நல்ல வேலையில் அமர்ந்து கொள்கிறார்கள். சில பேர் பார்க்கும் வேலை தவிர, பார்ட் டைம் என்று மேலதிகம் உழைக்கிறார்கள். அவர்களின் சுறுசுறுப்பும் முன்னேற வேண்டும் என்கிற துடிப்பும் அறிந்து நகர யந்திரத்தோடு அவனும் தன்னை ஒரு கண்ணியாக இணைத்துக் கொள்வதே கதை. நகர அடையாளங்கள் என நான் அடுக்கக வாழ்க்கை சார்ந்த விஷயங்களை அலசிச் செல்கிறேன் இந்த நாவலில். ஒரு சிறு கவிதை -
மொட்டைமாடியில்
கரையும் காகம்
எந்த ஃபிளாட்
விருந்தாளிக்காக.
‘காலத்துளி’ மறுபதிப்பாக ‘புன்னகைத் தீவுகள்’ எனவும் வலம் வந்தது. வேலைதேடும் இளைஞனின் கதை என்ற அளவில் இந்த நாவலையும், ம.வே.சிவகுமாரின் ‘வேடந்தாங்கல்’ நாவலையும் சேர்த்துப் பார்க்கிறதாக கோவை ஞானி ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதினார். இதேபோல இன்னொரு சந்தர்ப்பத்தில் எனது, வேலையில்லாத இளைஞன் பற்றிய சிறுகதை ஒன்று - குதிரை மீதொரு ராஜகுமாரன் - மற்றும் இதேமாதிரியான கருத்துச் சூழலில் மாலன் எழுதிய ‘23’ சிறுகதையும் ஒப்பு நோக்கி ராஜன் என்ற பெயரில் ஒரு ஆய்வுக் கட்டுரை ஜெயமோகன் எழுதினார்... என்பதையும் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறேன்.
கலைஞன் பதிப்பகத்தில் 64 பக்க அளவில் சிறு நாவல்கள் என ஒரு செட் கொண்டு வந்தார்கள். நாங்கள் ஒரு இருபது முப்பது பேர் எழுதினோம். இரண்டு இரண்டு நாவல்களைச் சேர்த்து நூலாக்கினார்கள். அப்படி வந்த எனது நாவல் ‘கனவுகள் உறங்கட்டும்.’ ஒரு திரைப்படத்துக்கான கதையாக அதை அமைத்திருந்தேன். மல்யுத்த வீரன் ஒருவனின் கதை. வெற்றி போதை அடங்கியபின் அவன் எதிராளியை அடிப்பதை வெறுக்கிறான். இந்த வெற்றி தோல்வி என்கிற மீண்டும் மீண்டுமான விளையாட்டு யாருக்காக, என நினைக்கிறான். அவன் குடும்பம் அவனை மீண்டும் மீண்டும் போட்டியிட வற்புறுத்தும் போது அவன் தோற்றுப் போக விரும்புவதாக பாத்திரவார்ப்பு கண்ட கதை அது. பூமணிக்குப் பிடித்த கதை இது.
அதன்பிறகு எழுதிய நாவல் ‘மற்றவர்கள்.’ எழுதும்போது மிகுந்த பொறுப்பான எழுத்தாளனாக நான், நிறைய எனக்குள் யோசிக்கிறவனாக ஆகியிருந்ததாகத் தோன்றுகிறது. எழுத்துப் பயிற்சியின் முக்கிய மாற்றத்தை நானே உணர்ந்த நிலை அது. (“சிற்பியைப் பார்த்து / முறைபிட்டது கல் / என்னை மூளியாக்கி விட்டாய்.”) இயற்கை அழகு, என்றாலும் வெயிலும் அழகு.. என்றெல்லாம் அதில் சொல்லி யிருப்பேன். வாழ்க்கை அது தரும் படிப்பினைகள், கல்விக் கூடங்களில் அறிவு பெற்ற கால காலமான மேல் சாதி இளைஞன் ஒருவன். அவனை விட, வாழ்க்கையை நேசிக்கிற, தனக்குள் தேடல் கொண்ட நாயகன். பள்ளிக்கூடத்துக்கு மேல் கல்வியைத் தொடராத ஓர் இளைஞன், பிராமணப் பையன் கிருஷ்ணப்ரேமியின் பள்ளிவகுப்புத் தோழன் ஜோதி பற்றிய கதை அது. மிக மென்மையான உணர்வுகளையும் வருடிச் செல்லும் அந்த எழுத்து. கோபிகிருஷ்ணன் அதற்கு முன்னுரை தந்தார். அந்த நாவலை நான் தந்த அமைதியான நடை அவரைக் கவர்ந்தது, அவரது முன்னுரையில் அந்த அமைதியை அவரும் அடைந்திருந்தார். அந்த அளவு அந்த நாவல் அவரை ஈர்த்திருந்ததை உணர முடிந்தது. நன்றி கோபிகிருஷ்ணன். அந்த நாவலை அவர் வாசித்த பின் நாங்கள் மேலும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம்.
நாவல் பாலு மகேந்திராவுக்கு மிகவும் பிடித்திருந்தது. நாவலைப் பற்றிப் பிரியமாய்ப் பேசுமுன் அதன் அட்டைப்பட வடிவமைப்பை வியந்தார் அவர். தமிழின் எல்லா எழுத்தாளர்களின் பெயரையும் எழுதி அதன் குறுக்கே “மற்றவர்கள்” என பெரிதாய் ‘எம்போஸ்’ பண்ணிவிட்டு, கீழே எஸ்.சங்கரநாராயணன் என தனியே குறிப்பிட்டிருப்பேன் அட்டையில்.
அரும்பு மாத இதழுக்காக ஆறு இதழ்கள் தொடராக எழுதியது ‘கடல்காற்று.’ கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் இளங்கலை நவீன இலக்கியப் பயில்நூல் என அடையாளம் பெற்றது. ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரின் கதை. டியூஷன் எடுக்கிறார். அவர் இறந்து போகிறபோது அவரது கூடப் பிறந்த அண்ணன் தங்கை அக்கா என அத்தனை பேரும் மீண்டும் சந்திப்பதும், அவரவர்களின் வாழ்க்கை எவ்வளவில் தன்வழி எனப் பிரிந்து முன்னேறி, அல்லது பின்னேறி யிருக்கிறது... என்று அலசிச் செல்கிறது அந்த நாவல். ‘கடல்காற்று’ என்றே தலைப்பு வைத்தேன். மென்மையான அந்தக் காற்றுக்கு ‘கடற்காற்று’ என வல்லின அழுத்தம் தவிர்த்தேன்.
பெண்ணிலை வாதம் பேசும் அநேகக் கதைகள் நான் தந்தது போலவே, வேலைக்குப் போகும் இன்றைய பெண் பற்றி வரைந்த சித்திரம் ‘நேற்று இன்றல்ல நாளை.’ அக்னி அட்சர விருது கிடைத்தது அந்த நாவலுக்கு. காலச் சிறு பகுதி என மீண்டும் நான் அமைத்துக் கொண்ட நாவல். அபார்ஷ்ன் பற்றிய கதை அது. ஒரு பெரும் உணர்ச்சிச் சுழலில் இயங்கும் நாவல். நவின இலக்கியத்தின் போக்குகளை அடையாளங் காட்டும் அளவில் திலகவதி ‘காலப்பெட்டகம்’ பெருந் திரட்டு வெளியிட்ட போது, இந்த நாவலின் பகுதிகள் அதில இடம் பெற்றன.
பிறப்பும் இறப்பும் சார்ந்த யோசனைகளை முன்னிறுத்திய ‘தொட்ட அலை தொடாத அலை.’ திருப்பூர் தமிழ்ச் சங்க விருது பெற்ற நாவல். இல்வாழ்வின் கடமைகளை முடித்தபின் கடைசிக் காலங்களில் தன் சாவை நினைத்து அசைபோடும் முதியவரின் கதை. அந்த அனுபவம் சார்ந்த சொல் அழுத்தமும் தத்துவ வீச்சும் வாய்த்த கதை அது.
இந்தப் புத்தகங்களைப் பற்றி விவரங்கள் வேறு வேறு பகுதிகளில் சொல்லி யிருப்பதால் தகவல் எனக் கடந்து செல்கிறேன். தவிரவும் இந்தப் பகுதியின் நோக்கம், எழுத்தில் நாவல் நாவலாக நான் கடந்து வரும் போது நான் இயங்கிய தளங்களைப் பகிர்வது மாத்திரமே.
சிறு சிறு தொடர்கதைகள் எழுதினாலும் எனக்கு தொடர்கதை என்ற அம்சத்தில் ஆர்வம் இல்லை. அவர்களும் அவ்வளவில் என்னிடம் கேட்கவில்லை, என்று சொல்லலாம். ‘நேற்று இன்றல்ல நாளை’ நாவலே ஹைக்கூ தொடர், என குமுதத்தில் வெளியானது. பிற்பாடு, குமுதம் இணையத்தில் பத்திரிகை என வந்தபோது இளமைத் துள்ளலுடன் தந்த கதை ‘முத்த யுத்தம்.’ 24 காரட் நகைச்சுவை. எத்தனை அருமையான வாசகர்கள் கிடைத்தார்கள் அந்தத் தொடருக்கு. அதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் 30 அத்தியாயங்கள் வரை வளர்ந்த அந்த நாவலுக்கு நான் குமுதத்தில் சொன்ன கதைச் சுருக்கத்தின் - சினாப்சிஸ் - முதல் வரி கூட விவரப் படாமல் நாவலையே எழுதி முடித்து விட்டேன். வாரா வாரம் எழுதித்தர வேண்டியிருந்தது, குமுதம் இதழில் அதைத் தொடர இயலாத நிலையில் கடைசிப் பகுதிகளை எழுதி 30 பகுதிகளில் முற்றும் போட்டேன். பத்திரிகைகளில் தொடர் எழுதுவது வேறு விதமான பயிற்சி. புது அனுபவம். பத்திரிகைத் தொடர்கள் அனுபவமே தனியானது தான். நல்லதும் மோசமானதுமாய் கலந்து கட்டிய அனுபவம்!
‘திசை ஒன்பது திசை பத்து’ மற்றும் ‘இரவில் கனவில் வானவில்’ 100 பக்க அளவில் கேட்டபோது இதழ்களுக்குத் தந்தவை தாம். ஒரு நண்பருக்காக முன்னதையும், கே.பாக்யராஜுக்காக இரண்டாவதையும் எழுதித் தந்தேன். மற்றபடி இந்த மாதநாவல் பணி, தொடர்கதைப் பாணியில் எனக்கு ஆர்வம் கிடையாது. நல்ல துட்டு அதில் இருந்தாலும் கூட!
‘நீர்வலை’ என ஒரு சுனாமிபற்றிய நாவல். கலைமகள் போட்டிக்கு என எழுதி அது பிரசுரம் ஆகவும் இல்லை. பிறகு இன்னும் சிறிது விரித்து தனி நூலாக்கிய போது தமிழக அரசின், ஆண்டின் சிறந்த நாவல், பரிசு வாங்கித் தந்தது. வலை வீசி மீன் பிடிக்கப் போனவனை, அலை வீசி கடல் பிடித்த கதை. ஹெமிங்வேயின் பாத்திர வார்ப்பும் சாயலும் அதில் எனக்கு நிறைவளித்தது. தவிரவும் ஒரு நிகழ்காலப் பதிவு, முக்கியம் அல்லவா? இந்தோனிஷியாவில் சுனாமி வந்தபோது ஒருவன் கடலில் வீசப்பட்டு, கைக்கு எட்டிய ஒரு மரக்கிளையைப் பற்றி மிதந்தபடியே 22 நாட்கள் தத்தளித்து, பின் மீட்கப் பட்டான்... என்ற பத்திரிகைச் செய்தி அடிப்படையிலேயே இந்த நாவல்.
‘இன்று நேற்று நாளை’ என காலப் பயணம் சார்ந்த ஒரு திரைப்படம் வந்தது அல்லவா? அந்தத் திரைப்படத்துக்காகப் பேசிய பல கதைகளில் என் கதை ஒன்று. முடிவில் வேறு கதையை இயக்குநர் ரவிகுமார் தேர்வு செய்து கொண்டார். திரைப்படம் வெளியானதும், என் கதையைப் புத்தகமாக்கினேன். ‘வசிகரப் பொய்கள் 2’ திரைப்பட வடிவில் ஒரு நாவல். அந்தத் திரைப்படம் அநேகம் பேர் பார்த்திருக்கலாம். அதற்கு ‘கால யந்திரம்’ எல்லாம் பயன்படுத்தி ஒரு கதை சொன்னார் ரவிகுமார். காலத்தினால் பின் செல்ல கதாநாயகனுக்கு ஒரு கால யந்திரம் கிடைக்கிறது... என்கிற பாணிக் கதை. ‘வசிகரப் பொய்கள்’ கதையில் ஒரு லிஃப்ட், அதையே கால யந்திரம் போன்று பயன்படுத்தலாம் என நான் யோசித்தேன். எட்டு அடுக்குகள் கொண்ட ஒரு அடுக்ககம். அதில் கதாநாயகன் ஏழாவது மாடியில் இருக்கிறான். அவன் லிஃப்டில் நுழைந்து பொத்தானை அழுத்தப் போகும்போது ஒருநாள் அவனுக்கு மாத்திரம் லிஃப்ட் ‘மைனஸ் ஒன்’ என்று புதிய பொத்தான் காட்டுகிறது. அந்த லிஃப்டில் ஸீரோ முதல் எட்டு வரை தான் பொத்தான்கள் இருக்கும். ஆச்சயர்யத்துடன் மைனஸ் ஒன்னை அவன் முடுக்க, அதில் இருந்து இறங்கி அவன் இரண்டு வருடங்கள் முந்தைய உலகத்துக்குச் சென்று விடுகிறான். லிஃப்டில் ஏறி வேளியே வருகையில் நிகழ்காலத்துக்கு வந்து விடுவான். அவனுக்கு மாத்திரமே இது நிகழ்கிறது... என்கிற கதையமைப்பு, என் கதை. திரைப்படமாக அது விரைவில் வெளிவரக் கூடும்.
இவை தவிர, பூமிக்குத் தலை சுற்றுகிறது, விநாடியுகம் என குறுநாவல்கள் தொகுதிகளும் அமைந்தன. குறுநாவல்கள் என்ற வடிவம் பிடித்து பத்துக்கும் மேற்பட்ட அளவில் முயன்று பார்த்திருக்கிறேன்.
நாவல் என்ற வடிவத்தில் வாழ்வின் தத்துவச் சரடைப் பற்றிச் சென்றபடி எழுத, தனி அனுபவம் அது. பாத்திரங்களோடு நாமே இழைந்து பயணப்படுவதும் உண்டு. மனசு வசம் ஒரு நாவல் இருக்கிறது. இன்றைய பேரிளம் பெண் ஒருத்தியின் கதை அது. விவரங்கள் வேண்டாம். எப்போது எழுதக் கையில் எடுப்பேன் தெரியாது. காலச் சிறு பகுதி. இன்றைய கால அடையாளங்களுடனான எழுத்தாக அதை அமைக்க உத்தேசம்.
எனது நாவல்களையும், சிறுகதைகளையும் ஒருசேர வாசித்தால், நாவலில் என் முகம் வேறாகவும், சிறுகதைகளில் வேறாகவும் தோன்றுகிறது ஏனோ. மத்த எழுத்தாளர்கள் பற்றித் தெரியவில்லை. சிறுகதை எழுதினால் கூட பல சந்தர்ப்பங்களில் யார் எழுதினார்கள் என்று கவனிக்காமல் வாசகர்கள் வாசித்துக் கடந்து விடுவார்கள். நாவல் ஆசிரியனை அவர்கள் இன்னும் பிரியமாய்ப் பெயரோடு அடையாளங் கண்டு கொள்கிறார்கள் என்றே தெரிகிறது.
சிறுகதை என்பது பாடலின் ஓரிடத்திலான ஆலாபனை. நாவலுக்கு பல்வேறு படித்துறைகள் வாய்க்கின்றன. கச்சேரி அது.
storysankar@gmail.com
91 9789987842 / 91 9445016842

Friday, April 12, 2019


பகுதி 37
 
விசிலில் பாட்டெடுத்தல்
எஸ். சங்கரநாராயணன்

விதைத் தெறிப்பான கணங்களைப் போலவே, எழுதுகையில் சில சமயம் விளக்கு போட்டாப் போல உற்சாகமாக உணர்வது உண்டு. அந்த சந்தர்ப்பங்களில் நகைச்சுவையும் ததும்ப ஆரம்பித்து விடும். அப்படிக் கணங்களைத் தான் வாசகர்கள் கதைகளில் இனங்கண்டு கொண்டு அந்த எழுத்தாளர்களை மனதில் இருத்தி மகிழ்கிறார்கள். கதையின் தத்துவார்த்த வரிகளை விட, இந்த மாதிரி எகத்தாளங்களுக்கு, அல்லது கிண்டல்களுக்கு மவுஸ் அதிகம். ‘நீர்வலை’ நாவலில் பிச்சைக்காரன் போட்டுக் கொண்டிருக்கும் சட்டை பெரிய சைசில் இருக்கும். இது அவன் கேட்காமலேயே கிடைத்த ‘பெரிதினும் பெரிது’ என்று சொல்லியது நினைவு வருகிறது. திடீரென்று எங்காவது யாராவது வாசகர் என்னைச் சந்திக்க நேர்கையில் இம்மாதிரி மேற்கொள் காட்டி புன்னகையுடன் கை குலுக்குவார். எனக்கு இவ்வகையில் பெரும் வாசகர் வட்டமே உண்டு. பெரும்பாலும் அவர்கள் எனது ஒரு படைப்பைப் பற்றி புன்னகையுடன் பேச ஆரம்பிக்கும்போது, எனது இந்த எள்ளல் வரிகளை அவர் எடுத்துக்காட்டப் போகிறார் என்கிற என எதிர்பார்ப்பது வழக்கமாகி விட்டது. அதிலும் சில சமயம் நான் அவர் சொல்லப்போகிற ஒரு இடத்தை யோசிக்க, அவர் அதே படைப்பில் வேறொரு பகுதியைப் பேசுவார்!
பி.ஜி.உட்ஹவுசின் ஒரு கதை. அவன் ஒருவரைத் தேடி வேகமாக வீட்டுக்குள் ஓடி அவர் இல்லாமல் வேகமாய் வெளியே வருவான். அவன் எத்தனை வேகமாய் ஓடினான் என்றால், அவன் உள்ளேபோய் வெளியே வருகையில் அவனை அவனே சந்தித்துக் கொண்டான், என எழுதுவார்.
அருமை வாசகர் ட்டி.கே.சுப்ரமணியன் விழுப்புரத்துக்காரர். ஒய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர். மீண்டும் ஒருமுறை சந்திக்க வந்திருந்தார். திடீரென்று, “சார் அந்த நாவலில்...” என சிரிக்க ஆரம்பித்தார். ஒரு சிரியசான கட்டம் அது. ரேடியோவில் ‘அந்தநாள் ஞாபகம்’ பாடல். “உங்கள் மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் பிரிந்து போய்விட்டன. அவை மீண்டும் சந்தித்தபோது?... பேச முடியவில்லையே...” என்கிற உணர்ச்சிக் கட்டம். கீழே நான் “அட அறிவு கெட்டவனே, ஆடு எப்பய்யா பேசியது?” எனப் போட்டிருந்ததை இப்போது நினைத்து ரசித்து சிரித்துக் கை கொடுக்கிறார்.
நகைச்சுவையில் இது ஒரு பாணி. ஒரு கவனத்தில் இருந்து விடுவித்து, வேறொன்றை அங்கே எடுத்துச் சொல்லுதல். இந்த விரலை எங்க டீச்சர் பயன்படுத்த மாட்டாங்க, ஏன்னு சொல்லு? - (ஏன்னா இது என்னோட விரல், என்பது பதில்.) பெண்கள் வலது கையில் வாச் கட்டறாங்க. ஆண்கள் இடது கையில் கட்டறாங்க. ஏன்னு சொல்லு? - (மணி பாக்கத்தான், என்பது பதில்.)
இவற்றையெல்லாம் எழுதிய பின் மறந்துதான் விடுகிறோம். ஆனால் அவர்கள், பிரியமான வாசகர்கள் நினைவில் வைத்து ரசித்து நமக்கே எடுத்துத் தருகிறார்கள். எதற்காக அதை எழுதினோமோ அதன் பயன் கிட்டி விட்டது அல்லவா?
ரொம்ப சீரியசான எழுத்தாளர்களே கூட சில சமயம் சட்டென்று இப்படி முக இறுக்கம் தளர்த்திக் கொள்கிறார்கள், என்பதை அறிவது சுவாரஸ்யம். கலைஞனின் நெகிழ்ந்த மனநிலை, வாசகர்களுக்கு அல்லது கூட இருக்கிறாட்களுக்கு அற்புத அனுபவமாகிப் போகும். சிலாட்கள் விருந்து சாப்பிட உட்கார்ந்து சாப்பாடு அம்சமாய் அமைஞ்சிட்டால் சட்டென்று இடுப்பு வேட்டிய தளர்த்திக்குவான். அந்தமாதிரி எழுத்தாளர்களே சிறிது புன்னகையுடன் எழுதிச்செல்கிற அளவில் கதைகள் அமைந்துவிடும். கேலி கிண்டல் எல்லாம் அப்படி அமைவது தான். ஒரு முறை இப்போதைய இயக்குநர் சரண், அப்போது அவர் கே.பாலச்சந்தரிடம் உதவி, ஒரு பாடல் பதிவு என்று ஜேசுதாஸ் வந்துவிட்டார். இசையமைப்பாளர் மரகதமணி வரவில்லை. அவர் வந்து சேரும்வரை, ஜேசுதாஸ் சரணுடன், கலைஞனின் கவன உக்கிரத்துடன் அல்லாமல், இயல்பாக உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தாராம். என் வாழ்வில் மறக்க முடியாத அற்புதத் தருணம் அது, என்று இன்றும் பேசுவார் சரண்.
பாமா விஜயம் திரைப்படத்தில் பாலச்சந்தர் வசனம். நடிகையிடம் கேள்வி. காதல் காட்சியில நெருங்கி நடிக்கிறீங்களே வெட்கம் இருக்காதா? - வெட்கப்பட்டா எப்பிடிங்க நடிக்க முடியும்? - உடனே அடுத்த கேள்வி - சரி. வெட்கப் படறா மாதிரி நடிக்கச் சொன்னா என்ன பண்ணுவீங்க?...
பாட்டும் பரதமும் படத்தில் மல்லியம் ராஜகோபால் வசனம். இவங்க நாட்டிய தாரகை - ஆறு வயசில் ஆட ஆரம்பிச்சாங்க. அறுபது வயசாகுது இன்னமும் ஆடிட்டே இருக்காங்க. அதைக் கேட்ட நாகேஷ் வசனம் - அறுபது வயசாயிட்டா அவங்க ஏன் ஆடணும்? உடம்பு தன்னால ஆடுமே.
எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ஒரு நாவல். ட்டு ஹேவ் அன்ட் ஹேவ்நாட், என்று தோன்றுகிறது. அதில் ஒரு மதுக்கூடத்தின் காட்சி. ஒரு குடிகாரன் பக்கத்தில் இருக்கும் இன்னொரு குடிகாரனிடம் தனது துக்கத்தைப் பகிர்ந்து கொள்வான். தூரத்தில் ஒருவனைக் காட்டி, அதோ பார், அவன்தான்... அவன்தான் என் வாழ்க்கையையே பாழ் பண்ணியவன், HE HAS SPOILED MY LIFE, என்று சொல்வான். கூட இருந்த குடிகாரன் அதை அரைகுறையாகக் காதில் வாங்கிக்கொண்டு, ஐயையோ அப்படியா, என்று தனக்கு இந்தப் பக்கம் இருக்கிற நபரிடம், SEE THAT MAN. HE HAS SPOILED THIS MAN'S WIFE, என்பான். முதல் குடிகாரனுக்குத் தூக்கிவாரிப் போடும். அட, ஒய்ஃப் இல்ல, லைஃப், என்பான். அதை யாரும் காதில் வாங்கிக்கொள்ள மாட்டார்கள். அந்த மூணாவது மனிதன் வந்து, பாவம் நீ... என அவனிடம் ஆறுதல் சொல்வான். அவனிடம் இவன் விளக்க முற்படுமுன், அவன் நாலாவது ஆளிடம் போய்... அதே செய்தியை, மனைவியை இழந்தவன்... என்கிற செய்தியைச் சொல்லுவான்... என நீளும் காட்சி. ஹெமிங்வேயிடம் இப்படியொரு காட்சி! ஆச்சர்யமாய் இருந்தது.
கதை எழுதுகையில் சட்டென இப்படி நகைச்சுவைச் சிறகு முளைப்பது தவிர ஒரு சந்தர்ப்பத்தில் முழு கதையுமே இப்படி உருவாகி விடும்! அதாவது கதைக்கான பொறி கிடைக்கும்போதே அப்படியொரு மந்தகாச மன இயல்பில் அந்தப் படைப்பாளன் இருந்திருக்கலாம். அப்படிக் கதைகள் வாசகனின் பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடக்கவில்லை’ என்ற ஒரு கதைச் சித்திரத்தை இதே பகுதியில் முன்பு பகிர்ந்தேன். ஒரு அரசு அலுவலகத்தில் பழைய கோப்புகள் அறையின் கிளர்க் ஒருவனைப் பற்றி எழுதியதும் ஞாபகம் வருகிறது. மார்ச்சுவரியில் ஒரு மனிதன், என்பது அந்தக் கதை. வடக்கு வாசல் இதழுக்காக ஒரு சிறுகதை எழுதினேன். ஒருவன் மனைவியுடன் திகைத்துப் போய்த் தனியே பிரிந்து போய்விடுவான். பிற்காலத்தில் அவன் உலக சாதனை ஒன்று செய்வான். கடுமையான விஷப் பாம்புகளுடன் அறுபத்திநான்கு நாட்கள் இரா பகலாக ஒரே அறையில் வாழ்ந்து காட்டுவான்... கதைக்குத் தலைப்பும் அவ்வளவில். ‘நிர்த்தாட்சாயணி.’ இந்த மாதிரி கதைகளை நான் எழுதுகையில் இப்படி அமைகிறாப் போன்ற யோசனை நிட்சியில் தலைப்பிலேயே அப்படியொரு நகைச்சுவையான முரணை முன்னரே தீர்மானித்துக் கொள்வேன். தலைப்பில் சுவாரஸ்யத்தை வாசகனை ஈர்க்கிற அளவில் தர எப்போதுமே எனக்குப் பிரியம் உண்டு. ‘பூமிக்குத் தலை சுற்றுகிறது’ என்பது என் ஒரு குறுநாவல்.
யுகமாயினி இதழுக்காகத் தந்த கதை ’துப்பாக்கி இல்லாமல் ஒரு துப்பறியும் கதை.’ கல்லூரிப் பருவ இளம் பெண்ணும் அவள் அம்மாவும் கோவிலில் பிராகாரத்தில் போய்க் கொண்டிருக்கையில் திடீரென்று மின்சாரம் போய்விடும். அந்த அம்மாவுக்கு யாரோ பச்சக் என்று இதழில் முத்தம் தந்து விடுவார்கள். மின்சாரம் வந்ததும் அவள் தேடிப் பார்த்தால் சுற்று முற்றும் யாருமே இருக்க மாட்டார்கள். அருகில் நடந்தது தெரியாமல் கூட வந்து கொண்டிருக்கும் பெண். நல்லவேளை இவளுக்குத் தெரியாது, என்று நினைத்தபடி அவள் அந்த முத்தத்தை மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டே பிராகாரத்தில் வருவாள். இத்தனை வயதிலும் நான் அப்படியொரு அழகா, ஒரு ஆணைத் தூண்டும் வகையில்? கணவனை இழந்து இத்தனை வயதிலும் என் உடல் கட்டுக்கோப்பாக, ஓர் ஆணைப் பித்தம் கொள்ள வைக்கிற அளவில், கிறுகிறுப்பாக்குகிற அளவில் இருக்கிறதா... என்றெல்லாம் யோசனை நீளும். கதையின் கடைசிப் பத்தி இப்படி முடியும் - சட்டென அம்மாவுக்கு ஞாபகம் வந்தது. பிராகாரத்தில் இடப்பக்கம் அம்மா. வலப்பக்கம் பெண்... என்று வந்து கொண்டிருந்தார்கள். மின்சாரம் துண்டிக்கப் படும் அந்த விநாடிக்குச் சற்று முன், அவர்கள் இடம் மாறி விட்டார்கள். அம்மா வலப்பக்கம். பெண் இடப்பக்கம் என்று மாறிக் கொண்டிருந்தார்கள்!
2
இந்தமாதிரியான கதைகளை உள்ளே புரட்டிக்கொண்டு எழுதுவது எழுதவே உற்சாகம். இதில் இரு நிலைகள் உள்ளன. இருவகையான உதாரணங்களையும் இங்கே பகிர உத்தேசம். முதல் வகை கதை எழுதுகையில் நமக்கே உள் கிளர்ந்த உற்சாகத்தில் வரும் தடாலடி வரிகள். அந்தக் குடும்பத்தில் வலது கை போல அவன், என்று எழுதும்போது, அந்தக் குடும்பத்தில் வலது கையின் கட்டைவிரல் அவன், என எழுதிச் செல்வது. அதைப்போலவே சினிமாப்பாடல் ஒரு வரி சொல்லி, அடுத்த வரியாக அதை முரண்டி எழுதுதல். “என்ன மானமுள்ள பொண்ணு இன்னு மதுரையில கேட்டாக. மன்னார்குடியில கேட்டாக. அந்த மாயவரத்துல கேட்டாக...” என்று பாடும்போது, “உள்ளூர்ல எவனும் கேக்கல போல?” என எகிறி யடித்தல், ஓர் உதாரணம். பழமொழிகளையும் சொலவடைகளையும் சுட்டிக் காட்டி அதை எகிறி ஒரு வரி, அடுத்த வரி போடுதல். AN APPLE A DAY KEEPS THE DOCTOR AWAY. இதன் அடுத்த வரி - IF THE APPLE IS CUTE KEEP THE DOCTOR AWAY.
இரண்டாவது பாணி மொத்தக் கதையமைப்பிலேயே சுவாரஸ்யம். கதாபாத்திரங்களோடு ஜாலியாக நீச்சல் அடித்துப் போகிற எழுத்து. கூட நடந்து வருகிற நண்பனை ‘லந்து’ பண்ணுகிறாப் போல சில சமயம் நமது பாத்திரங்களையே இப்படி ‘கலாய்க்கிறது’ - அதுவும் தவிர்க்க முடியாதது. லா.ச.ரா.வின் ஒரு சிறுகதை. ‘வித்துக்கள்.’ லா.சா.ரா.விடம் இருந்து இப்படி ஒரு கதை, யாரால் எதிர்பார்க்க முடியும்? ஒரு பெண்ணுக்கு மகா மகா சேட்டைக்காரனாகப் பிள்ளை. அந்தப் பள்ளிக்கூட தலைமையாசிரியை அவனைச் சமாளிக்கப் படாத பாடு படுகிறாள். அடிக்கடி அந்த அம்மாக்காரியைப் பள்ளிக்கு அழைத்து அவள் மகனைப் பற்றி முறையிடுகிறாள். இந்நிலையில் அந்தத் தாய் மீண்டும் கர்ப்பம் ஆகிறாள். அடுத்த குழந்தை பிறக்கிறது. இரண்டாவது குழந்தையையும் அவள் அதே பள்ளியில் சேர்க்க என்று போகிறாள். தலைமையாசிரியை “ஐயோ இன்னொரு பையனா? வேண்டவே வேண்டாம்” என்று தவிர்க்கப் பார்க்கிறாள். இல்லை, மூத்தவன் போல இல்லை, இவன் சாது, என்றெல்லாம் சமாளித்துச் சொல்லி, அவனை அதே பள்ளியில் சேர்த்து விட்டு வருகிறாள் அம்மா. நாலே மாதத்தில் அந்த ரெண்டாவது பிள்ளையின் சேட்டைகளையும் தாள முடியாமல் தலைமையாசிரியை அந்த அம்மாவைக் கூப்பிட்டு விடுகிறாள். இப்போது அவளது பிராது இரண்டாவது பிளளையைப் பற்றி. உள்ளே நுழைந்த அந்த அம்மாவைப் பார்த்ததும் தலைமையாசிரியை திகைக்கிறாள். பின் கேட்கிறாள். “ஏங்க நீங்க மறுபடியும் தாயாகப் போறீங்களா?” அவள் வயிறு உப்பி யிருக்கிறது!
இரா.முருகனின் ஒரு சிறுகதை. ஸ்ரீவில்லிபுத்தூர் அல்லது அதேபோல புராணப் புகழ் வாய்ந்த தலம் ஒன்று. அதில் வாழ்ந்த தனது ‘தாத்தாவுக்குத் தாத்தா’வைப் பற்றி ஒருவன் அறிய விரும்புகிறான். அந்த ஊருக்குப் போனால் அங்கே யாருக்கும் அவரைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. அக்கிரகாரத்தில் அவருக்குச் சொந்த வீடு இருந்ததாகத் தெரிகிறது. அந்த வீட்டில் வசிப்பவருக்கே விவரங்கள் தெரியவில்லை. அந்த ஊரில் வயதானவர் ஒருவரைப் போய்ப் பார்க்கச் சொல்கிறார்கள். நினைவுகளில் தேடிப் பார்க்கிறார். அவருக்குமே அவனுக்கு உதவிகரமாக எந்தத் தகவலும் தர இயலவில்லை. ஒரு நூறு வருடங்களுக்கு முந்தைய கதை தான் அது. யாருக்குமே சரியான தரவுகள் இல்லை. அவனுக்கு ஏமாற்றமாகி விடுகிறது. அவன் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்குப் போகிறான். புராணச் சிறப்பு கொண்ட கோவில் அல்லவா அது? அங்கே ஒரு ‘கைடு’ அவனை அழைத்துப்போய் இங்கதான் ஆண்டாள் பிறந்தது, என ஒரு நந்தவனத்தைக் காட்டி, ஆண்டாள் பிறந்ததை நேரில் பார்த்தது போல அத்தனை தத்ரூபமாகக் கதை சொல்வதாக கதை முடிகிறது!
நாஞ்சில்நாடனின் கதைகளில் கும்பமுனி என்கிற பாத்திரம் பற்றி அறிந்திருக்கலாம். இது கும்பமுனி கதை அல்ல. காலச்சுவடு இதழில் வெளிவந்து, நான் என் இசை சார்ந்த சிறுகதைத் திரட்டு ‘ஜுகல்பந்தி’ வெளியிட்டபோது பயன்படுத்திக் கொண்டேன் இந்தக் கதையை. ‘பிணத்தின் முன்னமர்ந்து திருவாசகம் படிப்பவர்.’ ஊரில் பெரிய தலை ஒன்று மண்டையைப் போட்டு விடுகிறது. அவரது சாவை எடுக்கும்வரை ஓர் ஓதுவாரை வரவழைத்து அவரை பிணத்தின் அருகே அமர்ந்து திருவாசகம் பாடச் சொல்கிறார்கள். அவருக்கு மீற முடியவில்லை. தினந்தோறும் சிவலிங்கத்தின் முன் நின்றபடி உருக உருக திருவாசகம் பாடியவர் அவர். இப்போது இந்த சலனமற்ற பிணத்தின் அருகில் பாட வேண்டி யிருக்கிறது. அது இவரை கவனிக்குமா? சுற்றிலும் பிணத்தின் உறவு சனம். அந்த உயிருள்ள சனத்திலேயே யாரும் அவரை கவனித்ததாகத் தெரியவில்லை. இதில் பிணம் எப்படி அவரை கவனிக்கும்? அட இந்தப் பிணம் அது உயிரோடு இருந்த காலத்திலாவது திருவாசகம் கேட்டிருக்குமா அதுவே சந்தேகம் தான். தனக்குள் பல்வேறு வெட்கமயமான சங்கடமயமான உணர்வுகளுடன் ஆனாலும் அவர் வந்த வேலையை மேற்கொள்கிறார்.
இடையே புகுந்து ஒரு செய்தி சொல்லி விடலாம். இப்படி தன்னெழுச்சி கொண்ட கதைகளை எழுத்தாளர்கள் அட்டகாசமாக முடிக்கிறார்கள். லா.ச.ரா.வின் முடிவு எப்படி? இரா.முருகன் எப்படி முடிக்கிறார்... நாஞ்சில்நாடனும் அற்புதமாக முடிக்கிறார் அந்தக் கதையை. பிணத்தை எடுத்த அளவில் அவர் கையில் தட்சிணையாக ஓர் ஆயிரம் ரூபாய் தந்தனுப்புகிறார்கள். ஓதுவார் ஆனந்த அதிர்ச்சியில் திகைத்துப் போகிறார். “அட ஈஸ்வரா உன் முன் அமர்ந்து இத்தனை நாள் பாடியதில் ஒருநாள் கூட இத்தனை பெரிய தொகையை நான் பார்த்ததே யில்லையே!”
கிண்டல் என்று நகைச்சுவைப் படாமல் ஆனால் உக்கிரப்பட்ட கதை கந்தர்வனின் ‘சீவன்.’ தருணம், என்கிற என் சிறுகதைத் திரட்டில் இடம் பெற்ற கதை அது. இந்தப் பகுதிக்கான நகைச்சுவை உதாரணம் அல்ல அது. என் பதின்ம வயதுகளில், ஆச்சர்யம் கலைமகள் அந்தக்கால இதழ் ஒன்றில் ஒரு சிறுகதை வாசித்திருக்கிறேன். இப்போது 40 வருடங்கள் தாண்டியும் அது நினைவில் இருக்கிறது. ஒரு ‘ஸ்டோர்’ பாணி கொத்து வீடுகள். அதில் முதல் வீட்டில் இளம் பெண் ஒருத்தி வசிக்கிறாள். அவள் வீட்டைத் தாண்டி இளைஞன் ஒருவன் போக வேண்டும். அதேபோல அந்தக் குடியிருப்புகளைக் கடந்து தனியே எல்லாருக்குமான பொதுக் குளியல் அறை. அவன் ஒருநாள் அந்தப் பெண்ணின் வீட்டைத் தாண்டிப் போகையில் அவள் வீட்டு வாசல் கதவு திறந்திருக்கிறது. தற்செயலாக உள்ளே பார்த்தால் உள்ளே அரையிருளில் இருந்து அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஒருவேளை நம்மையே அவள் வேண்டுமென்றே பார்க்கிறாளோ, வேண்டுமென்றே கதவைத் திறந்து வைத்திருக்கிறாளோ என்று இருக்கிறது அவனுக்கு. பிறகு இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒருமுறை குளியல் அறையில் அவள் இருக்கும் போதும் கதவு சரியாகத் தாளிடப் படவில்லையோ என்னவோ, பார்த்துவிட நேர்கிறது. அவளாக அவனுக்காக இப்படி எதுவும் முயற்சி செய்கிறாளா என்ன? என்ன இந்தப் பெண் இத்தனை மோசமானவளா, என அவளைப் பற்றி அவன் மனதில் தவறாக நினைக்க ஆரம்பிக்கிறான். ஒருமுறை வெளியே கோவிலில் அவளைத் தன் தோழியுடன் அவன் பார்க்கிறான். அவர்கள் அறியாமல் பின்னால் அவன் நடக்கிறபோது அவள் தோழியிடம் பேசுவதைக் கேட்கிறான். “எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற பையன் ரொம்ப மோசம்டி. காம்பவுண்டுக்குள்ள நுழையும்போதே எந்த வீடு திறந்திருக்கும், உள்ள எட்டிப்பாக்கலாம்னு நோட்டம் பாத்துக்கிட்டே வருவான் போல. ஒருநாள் பாத்ரூம் கதவு லேசாத் திறந்திருந்தது. அதை எப்பிடித் தெரிஞ்சிக்கிட்டானோ... அங்கேயே வந்து என்னை உத்துப் பாக்கறான். ரொம்ப தான் அலையறான்டி அவன்...” அவளைப் பற்றி அவன் என்ன நினைத்திருந்தானோ அதே கருத்தை அவள் அவனைப் பற்றிச் சொல்வதாக ஒரு கதை. ஆச்சர்யமான கற்பனையாக அந்த வயதில் என்னை ஈர்த்தது.
சுஜாதா கதைகளைப் பற்றி யோசிக்கையில், வித்தியாசமான கற்பனை என்று அவர் யோசிக்கிறார். ஒருவனைக் குதிரை கடித்து விடுகிறது. டாக்டரிடம் போனால் அவர் அறிந்த அளவில் குதிரைக்கடி என்று அவரிடம் யாரும் வந்ததும் இல்லை. அவர் படித்த வரையில் அதற்கு மருத்துவமும் இல்லை... என்கிற குழப்பத்தைச் சொல்லும் கதை. இன்னொரு கதையில் ஓர் இளைஞன். வீணை வாசிப்பதில் அபூர்வத் திறமை கொண்டவன். அவனது அநாயாசமான சங்கதிகள் எல்லாரையும் அயர்த்தும். பெரிய கச்சேரி போன்ற வாய்ப்புகள் அவனுக்குக் கிடைக்கவில்லை. கிடைத்தாலும் கூட்டத்தின் ரசனைக்கு அவனால் தீனி போட முடியாமல் போகிறது. அவனது ஆழ்ந்த திறமையை ரசிக்க ஆளே இல்லை என்று எழுதி வருவார் சுஜாதா. கடைசியில் ரேடியோவில் வரும் ஒரு விளம்பரம்... அதன் இடைப்பட்ட சிறு நேரத்தில் ஓர் அபூர்வ வீணை கேட்கிறதே. அதை வாசிக்கிறவன் அவன்தான், என முடிப்பார்.
கதை யமைப்பிலேயே எழுத்தாளர் மனதில் உற்சாகம் ததும்ப எழுதும் படைப்புகள், அப்படி சுஜாதாவிடம் எனக்கு சட்டென்று உதாரணம் கிட்டவில்லை.
3
விட்டல்ராவ் எழுதிய ‘மரமத்து’ என்றொரு சிறுகதை. ஓர் அரசு அலுவலகத்தில் எதோ மராமத்து வேலைகள் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி போடப்படும் ஓர் ஆணை. அந்த தட்டச்சு எழுத்தர் தவறுதலாக ‘மராமத்து’ என்ற வார்த்தையை ‘மரமத்து’ என்று தட்டச்சு செய்துவிடுகிறார். அதிகாரியும் அந்த ஆணையில் கவனமின்றிக் கையெழுத்து இட்டுவிடுகிறார். அதை அப்படியே ஏற்றுகொண்டு அரசுத்துறை உடனே மரமத்து ஒன்றைத் தயார் செய்கிற வேலையில் ஈடுபடுகிறது. மரமத்து சார்ந்து காவியங்களில் இருந்து மேற்கோள்கள் அலசப் படுகின்றன. அரசின் இந்தச் செயலால் அது வரலாற்றில் இடம் பெறும், என்று ஜால்ராக்கள் புகழ் பாடுகின்றன... என நகரும் கதை. இதே பாணியில் பாவண்ணனின் கதை ஒன்று புத்தக வெளியீட்டு விழாவுக்கு நாள் பார்த்து இடமும் பார்த்து விடுவார்கள். புத்தகம் அச்சிட்டு வந்திருக்காது. வெள்ளைத் தாளை பைன்ட் செய்து புத்தகம் போல வெளியிட்டு விடுவார்கள். அந்தப் புத்தகம் பற்றி நான்கு பேர் உரையாற்றவும் செய்வார்கள்... என்கிறதாக ஒரு கதை.
உண்மையிலேயே நடந்த ஓர் உதாரணம். ஒரு பெரிய தொழிலதிபர் எழுதிய புத்தகம், work is worship, செய்யும் தொழிலே தெய்வம், என்பார்களே அதுதான் தலைப்பு. ஓர் அமைச்சர் அதை வெளியிட்டுப் பேசினார். நானும் அந்த விழாவுக்குப் போயிருந்தேன். அமைச்சர் பேசினார். work is workshop, அருமையான புத்தகம், நான் பலமுறை வாசித்து மகிழ்ந்தேன். (ஒருதடவை கூட புத்தகத்தின் தலைப்பைப் பார்க்கவில்லை போலும்!)
‘மரமத்து’, அதைவிட எனக்கு விட்டல்ராவின், முஸ்லிம் விஞ்ஞானி ஒருவர் பற்றிய கதை, தினமணி கதிரில் வெளியானது, பிடித்திருந்தது. தன்னைச் சுற்றியுள்ளவர் யாரிடமும் அதிகம் பழகாமல், தான் உண்டு தன் வேலை உண்டு, என ஒரு விஞ்ஞானி. வெளிநாடுகளில் போய் ஆய்வுக் கட்டுரைகள் எல்லாம் சமர்ப்பித்து வருவார் அவர். காரில் கதவுகளை ஏற்றிவிட்டபடி அவர் வெளியே போவார். அந்தத் தெரு சனங்களில் யாரும் விஞ்ஞானியைப் பார்த்தது, பழகிப் பரிச்சயப் பட்டது கிடையாது. அவர் வீடு காம்பவுண்டு எடுத்து வாசலில் ஒரு வாச்மேன் இருப்பான். முஸ்லிம் விஞ்ஞானி வீட்டில் ஆடு ஒன்றை வளர்ப்பார். அந்த ஆட்டை அநேகமாக வாசலில் கட்டிப் போட்டிருப்பார்கள். அடிக்கடி அந்த ஆடு கயிற்றை அவிழ்த்துக்கொண்டு தெருவுக்கு ஓடிவிடும். பக்கத்து, எதிர் வீடுகளில் வாசலில் வளர்த்திருக்கும் செடி கொடிகளின் இலைகளைச் சாப்பிட்டு விடும். அந்தப் பகுதிப் பெண்கள் வாசல் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களில் யாராவது ஆடு மேய்வதைப் பார்த்து விட்டு எழுந்து வந்து சத்தம் போடுவார்கள். வாச்மேன் ஓடிவந்து ஆட்டைப் பிடித்துக் கொண்டு போவான்.
அந்த விஞ்ஞானி இறந்து விடுவார். அந்தச் செய்தியே பக்கத்து வீடுகளுக்கு, அந்தத் தெருவில் யாருக்கும் தெரியாது. அவரை அறியாதவர்கள் தானே அவர்கள். அந்தத் திண்ணையரட்டைக் கூட்டத்துப் பெண்களில் ஒருத்தி செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருப்பாள். அவள்தான் செய்தித்தாளில் இரங்கல் செய்தி பார்ப்பாள். விஞ்ஞானயின் படம் போட்டு, கீழே முகவரி இருக்கும். “அடியே நம்ம தெருடி” என்று கூவுவாள். இங்க யாருடி விஞ்ஞானி, நம்ம தெருவுல? கதவு எண் 13 எங்க இருக்குடி... என்று கேட்பாள். அதற்கு மற்றவள், அதாண்டி அந்த ஆடு, அடிக்கடி அவுத்துக்கிட்டு நம்ம வாசல் பயிரைக் கடிக்க வரும் இல்லே? அந்த வீட்டுக்காரர்டி... என்று அடையாளம் சொல்வாள். உலகறிந்த விஞ்ஞானிக்கு அந்தத் தெருவில் அடையாளம் அவர் வளர்த்த ஆடு, என்கிற நுட்பமான கிண்டல்!
கதைக்களம் என்று முற்றிலும் புதுசாய் எழுதிப் பார்த்த கதைகள் எனக்கு வாசிக்க எப்பவும் பிடிக்கும். அசோகமித்திரனின் கதை ஒன்று. தலைப்பு சரியாக நினைவில் இல்லை. ஒருவன் பழைய புத்தகக் கடையில் தனக்குப் பிடித்த புத்தகம் ஒன்றை சகாய விலையில் வாங்கி வருவான். அன்றைக்கு இரவு ஓய்வு நேரத்தில் வாசிக்கலாம் என்று அந்தப் புத்தகத்தைப் பிரிப்பான். அதில் முதல் பக்கத்தில், சிவகாமிக்கு அன்புடன் அருணாசலம் என்று கையெழுத்திட்டு தேதியிடப் பட்டிருக்கும். யாரோ ஒரு சிவகாமி. அவளுக்கு யாரோ ஒரு அருணாசலம் பரிசளித்திருக்கிறான் என்று நினைத்துக் கொள்வான். ஏன் அவன் அவளுக்குப் பரிசளிக்க வேண்டும்? அதுவும் எத்தனையோ பரிசுகள் இருக்க, புத்தகம் ஒன்றை அவளுக்கு அவன் பரிசளித்திருக்கிறான் என்றால் ஆச்சர்யம் தான், என் நினைத்துக் கொள்வான். இப்படியே யோசனை செய்ததில் நேரம் கடந்துவிடும், புத்தகத்தை மூடிவிட்டு விளக்கணைத்துப் படுத்து விடுவான்.
இரண்டு மூன்று நாள் கழித்து திரும்ப அந்தப் புத்தகத்தை வாசிக்கக் கையில் எடுப்பான். முதல் பக்கத்தில் அந்த அன்புடன்... வரிகள். மனம் திரும்ப கிளை விரிக்கும். யார் அந்த சிவகாமி? அவளுக்கும் இவனுக்கும் என்ன உறவு? சிவகாமி அவனது தோழியா? அக்காவா? அம்மா? காதலியாக இருக்குமா? காதலில் யாராவது, காதலிக்கு யாராவது புத்தகம் பரிசளிப்ர்களா? ஒருவேளை அவள் நல்ல ரசிகையாக இருக்கலாம். அவள் இந்த எழுத்தாளரை விரும்பி வாசிக்கிறவளாக இருக்கலாம். எதிர்பாராமல் அவளுக்குப் பிடித்த எழுத்தாளரின் ஒரு புத்தகத்தை அவன் பரிசாக அளித்து அவளை சந்தோஷப்படுத்த நினைத்திருக்கலாம்... என்கிற அளவில் சிந்தனைகள் படரும். கொட்டாவி விட்டபடியே மணி பார்த்துவிட்டு, புத்தகத்தை மூடிவைத்துவிட்டு உறங்கிப் போவான்.
பிறகு பல நாட்கள் புத்தகம் நினைவு கூட வராது. அடாடா புத்தகத்தை வாங்கி இத்தனை நாள் ஆகிவிட்டதே, என உறுத்தலாகி மீண்டும் புத்தகத்தை ஓர் இரவில் பிரிப்பான். அந்த அன்புடன் வரிகளைக் கடக்கையில் அது பரிசளிக்கப் பட்ட நாளைப் பார்ப்பான். அந்தத் தேதியில் முக்கியமாக அவளுக்கோ அவனுக்கோ என்னவோ கவனம் இருக்கிறது. அது அவளின் பிறந்த நாளோ? அவர்கள் கல்யாணமான தம்பதியாக இருக்குமோ? அன்றைய தினம் அவர்களின் கல்யாண நாளாக இருக்குமா?... நினைவுகள் பிடி நழுவிப் பறக்க ஆரம்பித்து அன்றைக்கும் அவனால் புத்தகத்தை வாசிக்க வாய்ப்பு இல்லாமல் போகும்.
மறுநாள் அலுவலகத்தில் வேலை செய்கையிலேயே அந்தப் பத்தகம் நினைவு வரும். வீட்டுக்கு வந்து எப்படியும் புத்தகத்தை வாசிக்கத் தீர்மானம் எடுத்துக் கொள்வான். இரவில் மற்ற வேலைகளை விரைவாக முடித்துக்கொண்டு உட்கார்ந்து புத்தகத்தை விரிப்பான். முதல் பக்கத்தைப் பார்ப்பான். அன்புடன்... என்கிற எழுத்துகளைப் பார்ப்பான். சர்ரக் என்று அந்தப் பக்கத்தைக் கிழித்து குப்பையில் எறிவான். பிறகு புத்தகத்தை வாசிக்க ஆரம்பிப்பான்.
இந்தக் கதையை இந்தியா டுடே இதழில் வாசித்திருக்கிறேன். எனது ‘யானைச்சவாரி’ திரட்டிலும் அவர், அசோகமித்திரனின் அனுமதியுடன் பயன்படுத்திக் கொண்டேன்.
4
இது தவிர இன்னொரு வகை இருக்கிறது. அது எழுத்தாளனே தன் பாத்திரத்தைக் காலை வாரிவிட்டு மகிழ்வது! அதை என்னமாய் ரசித்து எழுத முடிகிறது... பாட்டை விசிலில் பாடுவது போல!
பத்திரிகைகளில் நிறைய நகைச்சுவைத் துணுக்குகள் எழுதும் சிலரைப் பார்த்திருக்கிறேன் நான். அத்தனை உற்சாகமான வாழ்க்கையல்ல அவர்களுடையது, என்றும் கவனித்திருக்கிறேன். எப்படியும் நம் பெயர் பத்திரிகையில் வந்தால் போதும், என்று பொன்மொழிகள் எழுதி யனுப்பும் சிலர், கீழே அதைச் சொன்ன பிரபலத்தின் பெயரைப் போடுவார்கள். யார் சொன்னது, என்று தெரியாதவர்கள், கீழே ‘யாரோ’ என்று போட்ட துணுக்குகள் அனுப்புவது உண்டு. யாரோ, என்ற தலைப்பில் நான் கணையாழியில் ஒரு கதை எழுதினேன்.
எப்பவும் ‘என்னடா வாழ்க்கை இது, தற்கொலை பண்ணிக்கலாம் போலருக்கு...’ என வெறுப்பேற்றிக் கொண்டிருக்கும் ஒரு பெரியவர். வயது அறுபதைத் தாண்டி. பத்திரிகைத் துணுக்கு எழுத்தாளர். அறையில் இரண்டு மெடிக்கல் ரெப்புகளுடன் கூட அவரும் இருப்பார். அவர் சமையல் நன்றாகச் செய்வார்... என்று வேறு வழியின்றி அவரைக் கூட வைத்துக் கொண்டிருப்பார்கள். எப்பவுமே சலித்தபடி இருப்பார் அவர். அத்தனை வயதிலும் அவர் ஒண்டிக்கட்டை. இளம் வயதில் அவர் ஒரு பெண்ணைக் காதலித்தார். அந்தப் பெண்ணிடம் நாணிக் கோணி அவர் தன் காதலைச் சொன்னபோது அந்தப்பெண், உன் மூஞ்சிக்குக் காதல் ஒரு கேடா?.. என்றுவிட்டாள். அதைச் சொல்லி வருத்தப் படுவார் அடிக்கடி. நண்பர்களான ரெப்புகள் தங்களுக்குள் சிரித்துக் கொள்வார்கள், என்றாலும் அவரிடம் காட்டிக் கொள்ள மாட்டார்கள். அநேகமாக அவள் மறுத்த பிறகுதான் அவர் அடிக்கடி, என்னடா வாழ்க்கை, நான் தற்கொலை செஞ்சிக்கப் போறேன், என்று ஆரம்பித்திருக்க வேண்டும். இத்தனை வருடங்களாகப் புலம்பலுக்குக் குறைச்சல் இல்லை. அவர் தற்கொலை செய்து கொள்ளவும் இல்லை.
சமையலுக்குக் காய்கறி வாங்க ஒருநாள் பெரியவர் மார்க்கெட் போகிறார். ஆச்சர்யம். அங்கே அவள். அவரது காதலி. உடம்பே மெலிந்து ஒடுங்கி நடந்து போகிறாள். இப்போது அவள் முதியோர் இல்லத்தில். அவளது கணவர் இறந்து போய்விட்டார். ஐயோ, என்றார் அவர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு. ஒரே பையன். அவன் அவளை வைத்துக் கொள்ளாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டான். மிகுந்த மன பாரத்துடன் அவர் அறை திரும்பினார். நண்பர்களிடம் தன் காதலியை சந்தித்ததாகவும் அவள் இப்போது முதியோர் இல்லத்தில் இருப்பதாகவும் சொல்லி, என்ன வாழ்க்கைடா இது... என்று முடிக்கிறார். பிறகு நண்பர்களிடம் தானும் அந்த முதியோர் இல்லத்தில் போய்ச் சேர்ந்துகொள்ளப் போவதாகச் சொல்கிறார். அவர்களுக்கு அவரைப் பிரிய வருத்தம், இருந்தாலும் அவரை வாழ்த்தி அனுப்பி வைக்கிறார்கள்.
ரெண்டே நாளில் அவர் திரும்பி வந்துவிடுகிறார். வாயில் அதே சலிப்பு. என்னடா வாழ்க்கை இது. தற்கொலை பண்ணிக்கலாம் போல வருது எனக்கு. நடந்தது இதுதான். மொட்டைமாடி. தனிமை. அவர் அவளை, தன் காதலியை தனியே வரச்சொல்லி அழைத்து மிகுந்த கனிவுடன், இப்பகூட நீ கலைப்படாதே இவளே. உன்னை நான் நல்லா வெச்சிப்பேன். உன்னை இப்பவும் நான் காதலிக்கிறேன், என்கிறார். அவள் அந்த அறுபது வயதில் இரண்டாவது தடவையாக அதே பதிலைத் திரும்பவும் சொல்கிறாள். உன் மூஞ்சிக்குக் காதல் ஒரு கேடா?
தி.ஜானகிராமனின் ‘மாடியும் தாடியும்’ என்ற ஒரு சிறுகதை. ஒரு கிராமத்து அக்கிரகாரத்து மனிதர். நிலத்தைக் குத்ததைக்குக் கொடுத்துவிட்டு வெட்டியாகப் பொழுது போக்கிக் கொண்டு வீட்டுத் திண்ணையில் காலாட்டியபடி உட்கார்ந்திருப்பவர். காலையில் இருந்து மாலை வரை அவருக்கு வேலையே இல்லை. அவர் ஒருநாள் மொட்டைமாடியில் இருக்கையில் ஓர் அம்மாளும் அவளுடன் சிறுவன் ஒருவனும் மாடியேறி வருவார்கள். அதுவரை அவரிடம் யாரும் எந்தக் காரியமாகவும் வந்து நின்றதே கிடையாது. அவர்கள் எதற்கு வந்திருக்கிறார்கள் என்று அவருக்குத் திகைப்பாய் இருக்கும். அந்த மாமி சிறுவனிடம் மாமாவை நமஸ்காரம் பண்ணிக்கோடா, என முதுகில் தள்ளி விடுவாள். இருக்கட்டும் இருக்கட்டும்... என அவர் கூச்சத்துடன் காலை நகர்த்திக் கொள்வார். எனக்கா இத்தனை மரியாதை... ஆகாவென்றிருக்கும். மாமி அவரிடம், இந்தப் பிள்ளை எப்ப பாரு விளையாட்டு தான். படிக்கவே மாட்டேங்கறான். ஒருவேலையும் செய்ய மாட்டேங்கறான். யார் சொல்லியும் கேழ்க்க மாட்டேங்கறான்... அதான். ஊர்ல பெரிய மனுசா, (நானா?... என திரும்பவும் அவருக்கு ஆனந்த அதிர்ச்சி.) நாலு வார்த்தை நல்லதா எடுத்துச் சொல்லுங்கோ குழந்தைக்கு... என்கிறாள் மாமி.
தொண்டையைச் செருமிக் கொள்கிறார். குழந்தே பெரியவா எது சொன்னாலும் உன்னோட நல்லதுக்கு தான் சொல்வா. அவா சொல்றதைக் கேழ்க்கணும். இப்ப உனக்கு அதோட அருமை தெரியாது. பின்னால நீ பெரியவனா ஆகும்போது நினைச்சிப் பார்த்தா தான் அவா சொல்றதெல்லாம் எத்தனை சரின்னு உனக்குப் புரியும்...
நன்னா சொல்றேள். பெரியவான்னா சும்மாவா, என்று அந்த மாமி சந்தோஷமாய்ப் பேசுவாள். சுப்ரமணிய மாமாவப் போய்ப் பாருன்னு ஊர்ல எல்லாரும் சொல்றான்னா சரியாத்தான் இருக்கு... என்கிறாள். சுப்ரமணியா, பக்கத்து வீடு... என்கிறார் அவர். அடாடா, மன்னிக்கணும். தப்பா வந்திட்டோம், என்றபடி மாமி சிறுவனை அழைத்துக் கொண்டு கீழே போகிறாள் - என முடிகிறது கதை.
வழக்கமான பாணியில் இருந்து ஓர் எழுத்தாளன் இப்படி வெளியே வந்து அடையாளப் படுவது முக்கியம் என்றே நான் கருதுகிறேன். செய்த வேலையையே திருப்பிச் செய்யாத அளவில் அவன் தன்னை ஒருவேளை புதுப்பித்துக் கொள்ள நினைக்கிறானோ என்னவோ? நண்பர் இரா.முருகவேள் கூட நாவலில் அல்ல, சிறுகதை என்ற அளவில் தன்னைப் புன்னகையுடன் தளர்த்திக் கொள்வதாகவே தெரிகிறது. சாளரங்களைத் திறந்து வைத்துக் கொண்டு அவர்கள் இயங்குகிறார்கள். இயல்பாகவே உணர்வுகள் உள்ளே புகையென நடமாடி உருவங் கொள்கின்றன அப்போது.


சனிக்கிழமை தோறும் தொடர்கிறேன்
storysasnkar@gmail.com
91 9789987842 - 91 9445016842