part 18
சிவகுமாரும்
கமலஹாசனும்
எஸ். சங்கரநாராயணன்
அவ்வளவில், ஒரு திரைக்காட்சி போலவே நான் சில சமயம் சிறுகதைகள்
எழுதிப் பார்த்திருக்கிறேன். அதில் ஒன்று என் சிறுகதை ‘மூங்கில் பல்லக்கு.’ சாவியில்
வெளிவந்தது. அதை வாசித்துவிட்டு ஒருவர் ‘உங்களை குருநாதராக ஏற்றுக்கொண்டு எழுத வருகிறேன்’
என்று கடிதம் எழுதினார். ராஜகுமாரன் என்கிற அவர் இப்போது எழுத்தாளர், இயக்குநர்.
எனது நாவல் ‘மற்றவர்கள்’ எழுதியபோது அதில் காட்சிகளை நிறைய
இடங்களில் திரைப்படம் பார்க்கிற அடையாளம் காட்ட முனைந்து செய்தேன்.
பாலு மகேந்திரா நான்கு கதைகள் தேர்வு செய்து எடுத்து வைத்திருந்தார்.
அவற்றில் இரண்டை சன் தொலைக்காட்சி ‘கதைநேரம்’ பகுதியில் குறும்படங்களாக்கித் தந்தார்.
அவருக்காகவே நான் பின்னர் எழுதிய ‘வம்சம்’ கதையும் நினைவு வருகிறது. அதுவும் குறும்படம்
ஆக காலம் கூடி வரவில்லை, என்பதில் வருத்தம் உண்டு.
எல்லாவித கலை வடிவங்களும் மற்ற கலை வடிவத்தை ஊக்குவிக்கவே
செய்யும். இடையூறு செய்யாது, என்று நானே அநேக உதாரணங்கள் சொல்ல முடியும்.
யுத்தத்தின் உக்கிரத்தை விளக்க தார்க்கோவ்ஸ்கியின் ஒரு காட்சியை
முன்பே பதிவு செய்தேன். தனித்த வீடு. வீடுதிரும்பும் ராணுவ வீரன், நிலைப்படி மாத்திரமேயான
தன் வீட்டை வந்து பார்க்கிறான்... என்ற காட்சியை அவனது முகத்துக்கு நெருக்கமாக காமெராவை
வைத்துக்கொண்டு மெல்ல பின் நகர்த்துகிறார் தார்க்கோவ்ஸ்கி. அவன் ஒரு வீட்டு நிலைப்படியில்
இருக்கிறது காட்சிக்கு வரும். இன்னும் பின்னே நகர நகர நிலைப்படி மாத்திரமே அங்கே இருப்பதும்,
வீடே இல்லை என்பதும் காட்டித் தரப்படும். சூழலின் பயங்கரத்தைப் பின்னணி துக்கயிசையுடன்
கேட்க வேண்டும்.
ஒரு சிறைக்கைதி எத்தனை வன்முறையுடன் அடித்து நொறுக்கப் பட்டிருப்பான்,
என்று உணர்த்த ஒரு நுட்பமான காட்சியைத் தார்க்கோவ்ஸ்கி வடிவமைத்திருப்பார். கைதி படுத்திருப்பான்
சிறையில். அவனைக் காட்டும் காமெரா மெல்ல சுவரைக் காட்டியபடியே மேலே ஏறும். நாலைந்து
விநாடிகள் வரை அமைதி. அந்த அறையின் ஆக உயரத்தைக் காமெரா காட்டும்போது, அங்கே ஒரு ரத்தக்கறையைக்
காட்டுவார். பின்னணியில் அதிர்ச்சி இசை வரும். அவ்வளவு உயரத்தில் ரத்தம் தெறிக்கும்
அளவு அவன் அடிவாங்கியதாக நாம் உணர்ந்து அதிர்கிறோம்.
கதை திரைக்கதை வசனம் - எதுவுமே இல்லாமல் கதை சொல்ல வல்லவர்
தார்க்கோவ்ஸ்கி. யுத்தம் பற்றிய கொடூரத்தை அவர் சொல்லும் முறையே அற்புதமானது. அண்ணன்
ராணுவத்தில் பணி புரிகிறவன், விடுப்பு எடுத்து வீட்டுக்கு வந்திருப்பான். எல்லையில்
யுத்தம் என்பதாக உடனே அவனைத் திரும்ப வரச் சொல்லி தந்தி வந்திருக்கும். அண்ணன் லேசான
உள்க் கலவரத்துடன் முக இறுக்கத்துடன் அந்தத் தந்தியை வாசிப்பான். அருகில் இருக்கும்
அவனது சிறு வயதுத் தம்பி, “நானும் உன் கூட யுத்தத்துக்கு வருவேன். வந்து நம் எதிரிகளை
டப் டப்பென்று சுட்டு வீழ்த்துவேன்” என்று தோள் பூரிக்கப் பேசுவான். அண்ணன் ஒரு இறுக்கத்துடன்,
மரண பயத்துடன் தம்பியின் தோளை அழுத்துவான்.
நினைவின் பரணில் தூசி தட்டி விவரங்கள் எழுதுகிறேன். அதுதான்
எனக்குப் பிடிக்கும். மீண்டும் ஒருமுறை ‘ரெஃபர்’ பண்ணி சரிபார்த்தபடி எழுதுவது வேண்டாம்.
புள்ளி விவரங்கள் அல்ல, விஷயம், அதன் வீர்யம் முக்கியம்... ஆமாம், தமிழில் பாலச்சந்தரிடம்
இப்படி நுட்பங்களை, காட்சிகளை மீறி இயக்குநராக அவர் ஜொலித்த இடங்களைக் கண்டிருக்கிறேன்.
புன்னகை மன்னன் திரைப்படத்தில் இயற்கையை ரசித்தபடி கமல் ஃபோட்டோக்கள்
எடுத்துக் கொண்டிருப்பார் ஒரு தோட்டத்தில். அவரைக் காதலிக்கிற ரேவதி கமலைப் படம் பிடிப்பார்.
கமல் படம் எடுப்பதுபோன்ற காட்சி ஃபிரேம் ஃப்ரீஸ் ஆகும். பிறகு ரேவதியைக் காட்டுவார்கள்.
படம் எடுக்கிறவனைப் படம் எடுக்கிறாள்!
சினிமா ஷுட்டிங் என்று தன் குழந்தையை வாடகைக்குத் தந்திருப்பாள்
ஒருத்தி. அந்தக் குழந்தை தீயில் மாட்டிக் கொள்வதாகவும், கதாநாயகி பதறுவதாகவும் திரைக்காட்சி.
சினிமாத் தாய் பதறுவதைக் காட்டியபடி, ஷுட்டிங் பார்த்துக் கொண்டிருந்த குழந்தையின்
தாய், அவள் பதறுவதையும் அதே ஃப்ரேமில் காட்டுவார் பாலச்சந்தர். (படம் ஒருவீடு இருவாசல்.)
இதைவிட எனக்குப் பிடித்த காட்சி. படம் வறுமையின் நிறம் சிவப்பு.
பிரிந்து போன கமலைத் தேடிக் கொண்டிருப்பார், பூர்ணம் விசுவநாதன் அப்பா. அவர் ஒரு கர்நாடக
சங்கீதப் பாடகர். அவன் டெல்லியில் இருப்பது தெரியாது. ஆனால் பூர்ணத்துக்கு டெல்லியில்
ஒரு கச்சேரி. கமலின் நண்பன் ஓவியர் பரணி ஒரு விபத்தில் அடிபட்டுக் கிடப்பான். அங்கேயிருந்து
பூர்ணம் கச்சேரியில் பாடும் பாடல் “நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில்
எறிவதுண்டோ” என்று இசை ஓவர்லேப் ஆகி, பாடகரிடம் வந்து, பின் அதே டெல்லியில் வேறொங்கோ
இருக்கும் கமலைக் காட்டும்.
அபார்ஷன் பற்றிய என் ஒரு கதையில், அவள் மருத்துவர் அறைக்கு
வெளியே காத்திருப்பாள். சுவரில் ஒரு குழந்தைப் படம். கூட வசனம். MY TOMORROWS ARE
WITH YOU. அத்தோடு அங்கே குழந்தையை வயிற்றில் சுமந்தபடி மனம் நிறையக் கனவுகளுடன் அவள்
அருகில் ஒரு பெண் அமர்ந்திருப்பதாக முரண் காட்சி வைத்திருப்பேன்.
கதையின் நுட்பமான ஒரு புள்ளியை, கதை எழுதும்போது எட்டிவிட
முடிந்தால் எத்தனை உற்சாகம் ஆகிவிடுகிறது. பிற எழுத்தாளர்களின் உதாரணங்கள் சொல்லலாம்
இப்போது. தமிழ்மகனின் ஒரு சிறுகதை. வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய கதை. ஒரு மில்லில்
வேலைக்கு ஆள் எடுப்பார்கள். அன்றைய வேலைக்கு மில்லில் தேவை இருபது ஆட்களே. என்றால்
நூறு பேருக்கு மேல் வந்து காத்திருப்பார்கள். அதில் கதாநாயகனும் இருப்பான். ஒரு மேஸ்திரி
வந்து அந்த நூறு பேரில் ஒவ்வொருவராய்த் தன் பக்கம் அழைப்பான். ”நீ வா. நீ வா.” கதாநாயகன்
”ஐயோ என்னை விட்டுவிடுவானோ?” என்று மனசில் படபடப்பாய் உணர்வான். மேஸ்திரி அவனையும்
தன் பக்கம் “நீ வா” என அழைத்து விடுவான். ஒரு விநாடி ஆசுவாசப் பட்டவன், ஐயோ தன் பக்கமாய்க்
கூப்பிட்டு விட்டு எங்களை வேண்டாம் என வெளியே அனுப்பி விடுவானோ, என்று திரும்ப பயப்படுவான்!
வெகு நாட்களுக்கு முன் கணையாழி இதழில் வாசித்த ஒரு கதை. எழுத்தாளர்
பெயர் நினைவில் இல்லை. கண் ஆஸ்பத்திரி ஒன்றில் இளம் பெண் ஒருத்தி. அவள் கண்ணுக்கு மருந்து
ஊற்றியிருப்பார்கள். புடவையை இழுத்து இழுத்து மார்பு மேல் மூடிக் கொண்டே யிருந்தாள்
அவள், என்று குறிப்பிட்டிருந்தார் எழுத்தாளர்.
இளமைவேகமும் துடிப்புமான அந்தக் காலகட்டத்தில் தீபம் இருபதாண்டு
நிறைவு சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றேன். ‘இயேசுவின் சிலுவையை இறக்கி வையுங்கள்’
என்ற அந்தக் கதையில் ஒரு வரி. வைரமுத்து மேடையிலேயே பாராட்டிய வரி. ”அம்மா புதிதாய்
வரும் என் நண்பன் முன்னால் முந்தானையை இழுத்திப் போர்த்துக் கொண்டு அவனை அவமானப் படுத்துவாள்.”
இந்தக் கதை இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் கண்டது. டாக்டர் சேஷன் இந்தியில்
தந்தார். ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஓய்வுபெற்ற மாஜிஸ்ட்ரேட் எம்.எஸ். ராமசாமி.
அந்தத் தலைப்பு, இயேசுவின் சிலுவையை இறக்கி வையுங்கள், அதை என் ‘அட்சரேகை தீர்க்கரேகை’
புத்தகத்தில் ஸ்டார் போட்டு ஆங்கிலப்படுத்தி யிருந்தேன்.
RELIEVE JESUS OFF THE CROSS. அது எம்.எஸ். ஆருக்கு ரொம்பப்
பிடித்திருந்தது.
•
கதை எழுதுகையிலேயே உணர்வு ரீதியான ஒரு மூழ்குதல் எழுத்தாளனுக்குக்
கிட்டினால் அதை வாசகனும் பெற்றுக் கொள்கிறான்.
எழுதும் போக்கில் பிரச்னையின் சிக்கலில் ஒரு நுட்பமான அடையாளத்தைக்
காட்ட முடிவது சிறந்த கதை யாகிறது. சர்க்கஸ் ஒன்று போதிய வரவேற்பு இல்லாமல் நொடித்துப்
போகிறதாக என் ஒரு சிறுகதை. (கலைஞன்.) சாப்பாட்டுக்கே பிரச்னை என்றாகிற நிலையில், இருக்கும்
மிருகங்களில் அதிகப் படியான மிருகங்களை விற்று விட முடிவு செய்வார்கள். இரண்டு குதிரைகளில்
நல்ல ஆரோக்கியமான குதிரையை சர்க்கசுக்கு வைத்துக் கொண்டு, நலிந்த அடுத்த குதிரையை விற்க
முனைவார்கள். வாங்க வந்தவர்கள் நல்ல குதிரையை விலைக்குக் கேட்பார்கள், அதைத் தந்தபின்
சர்க்கஸ் நிலை இன்னும் மோசமானது!
இப்படி விஷயங்களை பிற முக்கியஸ்தர்களோடு பேசுவதும் பெரும்
உற்சாகம் அளிப்பதாய் இருக்கும். டாக்டர் ஔவை நடராசன் அவர்களுடன் ஒரு காலத்தில் தினசரி
மாலைகளில் நான் உலா போவேன். சென்னை அண்ணா சாலை சாந்தி தியேட்டர் எதிரில் இருந்த தந்தி
அலுவலகத்தில் காலை ஏழு மணி பணிமுறை எனக்கு. மதியம் இரண்டு மணி வாக்கில் பணி முடிந்து,
தலைமைச் செயலகம் போய்விட்டால், டாக்டர் ஔவை நடராசன் அலுவலகம். அப்போது அவர் அரசுச்
செயலர். அவரது வேலைகளுக்கு நடுவே உலக விஷயங்கள் பேசுவது விவாதிப்பது. என் எழுத்தின்
சிறப்பான கட்டங்களை நான் பகிர்ந்தால், அவரது படிப்பு ஆளுமையுடன் அநேக விஷயங்களை என்னுடன்
பகிர்வார் அவர். என் ஒரு வரி. மரணம் பற்றிய கதை. ‘காலம் மனிதனைப் பறக்க விட்டு இறகுகளைக்
கத்தரிக்கிறது’ என நான் எழுதியிருந்தேன். அவர் சொன்னார். “பட்டினத்தார் சொல்கிறார்,
சாகப் போகிற பிணங்கள் செத்த பிணத்தைத் தூக்கிச் செல்கின்றன.’’
கிருஷ்ணனைக் கேலி பேசுகிறாப் போல நான், அன்று கோபியர்களிடம்
ஆடை பறித்துக் கொண்டவன் கண்ணன். திரௌபதிக்கு ஆடை அளித்தான், என்று குறிப்பிட்டேன்.
“அட இங்க வாங்கி அங்க குடுத்துட்டான்னு சொல்லணும்” என்றார் அவர் சிரித்தபடி.
டாக்டர் ஔவை அவர்களின் நகைச்சுவை எனக்குப் பிடிக்கும். அவற்றில்
ஒன்று.
நாம் எல்லாரும் உயரமான இடத்தில் அமர்ந்தபடி தாழ்வான இடத்தில்
உணவை வைத்துக்கொண்டு சாப்பிடுவோம். பலகை போட்டு அமர்ந்துகொண்டு தரையில் இலை போட்டுச்
சாப்பிடுவோம். வெள்ளைக்காரன் தாழ்வான இடத்தில் அமர்ந்தபடி உயரமான இடத்தில் சாப்பிடுவான்.
நாற்காலியில் அமர்வான். மேசையில் சாப்பிடுவான்.
என் வீட்டுக்கு ஒரு வெள்ளைக்காரன் வந்தான். அவனுக்கு பலகை
போட்டு இலை போட்டோம்.
இலைல உட்கார்ந்திட்டான்.
எழுதியதும் வாசித்ததுமாக, கலந்துரையாடுகையில், நாமே உயரம்
என நினைத்த கணங்களில், அதைவிட உயரங்கள் தொட்ட கணங்களை இப்படி எடுத்துத் தர பெரியோர்
அருகில் கிடைப்பது ஒரு வரம்தான்.
சரிந்து இறங்கிய பறவை
கீழே போட்டது
நிழலை.
இப்படி ஒரு கற்பனை நான் சொன்னபோது, ஒரு தமிழ் ஆசிரியர், கம்பர்
இதை இதைவிட உச்சமாகச் சொல்லி விட்டார். “எத்தனை உயரம் பறந்த போதும் அந்தப் பறவையால்
தன் நிழலைக் கீழே போட முடியவில்லை,” என்று எனக்கு எடுத்து சசொன்னார். கவிச் சக்கரவர்த்தி
அல்லவா!
மனிதன் பிறந்த பின் கடவுள் பிறந்தார், என ஒரு கதைக்கு நான்
தலைப்பு வைத்திருந்தேன். அப்புறம் பார்த்தால் என் ஞான ஆசான் பகவான் ஸ்ரீ அரவிந்தர்
சாவித்திரியின் முதல் வரியை இப்படி அமைக்கிறார். “கடவுள் கண் விழிக்கு முன்னான அதிகாலை...”
ஆசானுக்கு வணக்கம்.
•
வெளிநாட்டுத் திரைப்படங்கள் ஒரு காலத்தில் நிறையப் பார்ப்பேன்.
இப்போது இருக்கும் கண்ணசதியில் வாசிக்கவே முடியாது திகைப்பாய் இருக்கிறது. அந்தக் காலத்தில்
பார்த்த படங்களில் எத்தனை காட்சிகள், எத்தனை ஃப்ரேம்கள், மணிரத்தினமோ, பிற இயக்குநர்களோ
அப்படியே கையாண்டிருக்கிறார்கள், என அலசிப் பார்ப்பது வேடிக்கையான பொழுது போக்கு. கே.
பாலச்சந்தர் அவர்களிடம் இதுபற்றி நிறையப் பேசவும் அந்நாட்களில் வாய்த்தது. தன் அனுபவம்
சார்ந்த நிறைய நுட்பங்களை அவர் பகிர்ந்து கொண்டதும் உண்டு. அவரிடம் நிறைய கற்றுக் கொள்ள
முடியும். எனது ‘சராசரி இந்தியன்’ நூலுக்கு அவர் முன்னுரை தந்தார். அவர் ஆசிரியராக
இருந்து தயாரிதத குமுதம் இதழிலும் நான் சிறுகதை பங்களித்தேன். பின்னாட்களில் நான் அவரை
விட்டு விலகி வந்திருந்தேன். அடிக்கடி சென்று பார்த்து அந்த நட்பைப் புதுப்பித்திருக்க
வேண்டும். விட்டு விட்டது. அவரை எப்பவுமே எத்தனையோ பேர் சூழ்ந்து வலம் வந்து கொண்டுதான்
இருப்பார்கள். இதில் அவர் நினைவில் நான் கரைந்து போயிருக்கலாம்.
பாலகுமாரன் அவரது உதவியாளராக இருந்த சமயம் ‘சிந்து பைரவி’
திரைப்படம் வந்தது. பொதுவாக தன் கதைகளை உதவி இயக்குநர்களிடம் அவர் விவாதிப்பதே இல்லை.
ஷுட்டிங் நடக்கையில் நாமாக கணக்குகள் போட்டு இந்தப் பாத்திரம் இந்த சமபவங்கள், பிறகு
இப்படி கதை நகரும்... என நாமே யூகித்துக் கொண்டே வர வேண்டும். “கர்நாடக இசைக் கலைஞர்
சிவகுமாருக்கு சங்கீதம் தெரியாத மனைவி. ராகம் ஒன்றை முனைந்து அவர் சாதகம் செய்து கொண்டிருப்பார்.
கிர்ர் என்று மிக்சியில் மிளகாய்ப் பொடி அரைப்பாள் அவள். “ரசனை கெட்ட ஜென்மம் லதா மங்கேஷ்கர் பாடிய பாட்டு. இப்படி கர்ண கடூரமா
நடுவுல மிக்சிச் சத்தம்” என்று கோபப் படுவார் சிவகுமார். “லதா மங்கேஷ்கரா உங்களுக்கு
இட்லி மிளகாப் பொடி அரப்பா?” என்று கேட்பாள் சுலக்சணா.
சிவகுமாருக்கு தன் ரசிகை என அறிமுகமாகும் சுகாசினியோடு ஒரு
நட்பு வந்து வளர்ந்து காதலாகி... கதை அப்படி நகர்கிறது. “இதை எப்பிடி முடிக்கலாம்,
என்று பாலகுமாரனிடம் கேட்டன்ப்பா...” என்று பாலச்சந்தர் என்னைப் பார்த்துப் புன்னகை
செய்தார்.
“பேசாம ரெண்டு பேரையும் அவன் கல்யாணம் பண்ணிக்கட்டுமே சார்...
அதனால என்ன?..ன்றான்...” என்று சிரித்தவர், பிறகு என் பக்கம் குனிந்து சொன்னார்.
’‘அவன் திரும்ப முதல் மனைவியோட வந்து சேர்ந்துக்கறான். அதான் முடிவு. அதுக்காகத்தான்
நான் சிவகுமாரை வெச்சி கதை சொல்றேன். ரெண்டு பேரையும் அவன் கல்யாணம் பண்ணிண்டா அது
கமலுக்கான கதை இல்லையோ?” என்றார்.
வெற்றியின் சூட்சுமங்கள்!
இன்னொரு சம்பவம் கூட நினைவில் வருகிறது. அது கருப்பு வெள்ளை
திரைப்பட காலம். அப்பவே சொல்லத்தான் நினைக்கிறேன் எடுத்தார் அவர். ஒரு கதநாயகன். ஒரே
வீட்டில் கல்யாணம் ஆகாத நாலு பெண்கள். நாலு பேருமே அவனை விரும்புவார்கள்... என்று கதையமைப்பு.
“கிராமத்து மணலில் டூரிங் டாக்கிசில் படம் பார்க்கிற பெண்கள், என்னதான் இருந்தாலும்
இந்த நாலு பொண்ணுகளும் இப்பிடியா கல்யாணத்துக்கு அலையும்னு முகம் சுளிக்கலாம்னு நான்
எதிர்பார்த்தேன்” என்றார் பாலச்சந்தர். “அதனால் தான் முதல் காட்சியிலேயே அந்த நாலு
பெண்களின் அப்பாவான எஸ். வி. சுப்பையாவை கை நிறைய லாட்டரி டிக்கெட்டுகளுடன் அறிமுகம்
செய்தேன்.” இந்தச் சீட்டெல்லாம் பரிசு விழுந்திட்டா என் அத்தனை பொண்ணுக்கும் நான் கல்யாணம்
பண்ணிருவேன், என்ற வசனமும் வைத்தார் அவர். எத்தனை கவனமான காய் நகர்த்தல்.
குறைந்த பட்சம் ஒரு தொலைக்காட்சித் தொடராவது அவருடன் நான்
செய்திருக்க வேண்டும். வாய்ப்பு வந்தது. நழுவி விட்டது. (ஜெயில் - என தலைப்பிட்டு நான்
சொன்ன கதை அவருக்குப் பிடித்திருந்தது.)
கே. பாலச்சந்தருடன் வெளிமொழி, வெளிநாட்டுப் படங்களை நிறையப்
பேசுவேன். ஒருமுறை அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது பின்னணியில் கதரி கோபால்நாத்தின்
இசை. “வெள்ளி உருகி ஓடுவதுபோல் எத்தனை அற்புதமாய் இருக்கிறது இந்த இசை. இதை அவசியம்
பயன்படுத்திக் கொள்ளுங்கள் சார்” என்றேன். அதனால் தானோ என்னவோ, டூயட் படத்தில் அவர்
பயன்படுத்தினார். அவர் முன்பே யோசித்தும் இருக்கலாம். நான் சொன்னபோது அந்த யோசனை அவருக்கு
சரி என்றும் பட்டிருக்கலாம்.
ஒருமுறை வேடிக்கை போல மிருணாள் சென்னின் ஒரு படம் பற்றி அவரிடம்
பேசிக் கொண்டிருந்தேன்.
ஒரு ஏழை இளைஞன். நன்றாகப் பாடுவான். அவனது பணக்கார நண்பன்.
ஒரு கச்சேரியில் அவன் பாடியதைக் கேட்டு இளம் பெண், பெரும் பணக்காரி அவனைக் காதலிக்க
ஆரம்பிக்கிறாள். கச்சேரி முடிந்து நண்பரின் காரில் இந்த ஏழைப் பாடகன் வந்து ஏறுகையில்,
அவள் அது பாடகனது கார்தான், என நினைத்துக் கொள்கிறாள். அதன்பின் பாடகனுக்கு அவள்முன்
தான் பணக்காரன் என்றே காட்டிக்கொள்ள, வேஷம் போட வேண்டியிருக்கிறது.
ஒருநாள் அவள் தன் தந்தையுடன் அவன் வீட்டுக்கு வரப்போவதாகச்
சொல்கிறாள். பாடகன் நண்பனிடம் கெஞ்சி ஒரு ஒருமணி நேரம் அவன் வீட்டை தனக்குத் தன் வீடாக
நடிக்கத் தரச் சொல்லிக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறான். கார்க்கார நண்பனின் தாய், தந்தை
வீட்டில் இல்லை. நண்பன் சம்மதிக்கிறான். நண்பனின் அறையில் அவன் தலைக்கு மேல் இருக்கிற
அவனது தாய் தந்தை படத்தை எடுத்துவிட்டு, தன் படத்தைப் பாடகன் மாட்டி வைக்கிறான். மறக்காமல்
அவனது கார்ச் சாவியை வாங்கி வைத்துக் கொள்கிறான். நண்பனது கார் டிரைவரிடம் சொல்லி,
அவனைத் தன்கீழே வேலை செய்கிற டிரைவர் என்று நடிக்க சம்மதம் வாங்கிக் கொள்கிறான்...
எல்லா முன்னேற்பாடுகளும் தயார்!
இப்போது கதாநாயகியும் அவள் தந்தையும் அவனைப் பார்க்க வருகிறார்கள்.
அப்போது அது அவன் வசிப்பிடம் அல்ல என்கிறாப் போல அவன் மாட்டிக் கொண்டு முழிக்க வேண்டும்.
அதற்கு ஒரு பொருளை (பிராபர்ட்டி) மிருணாள் சென் பயன்படுத்துகிறார். அது என்ன?
- என்று பாலச்சந்தரிடம் ஒரு வேடிக்கை போல நான் செக் வைத்தேன்.
மூன்று நிமிடங்கள் கூட எடுத்துக் கொள்ளுங்கள். அவரே தனக்குள் பேசிக்கொண்டாப்போல இங்கே
அங்கே நடந்தார். தன்னைத் தானே தலையாட்டி மறுத்துக் கொண்டார். பிறகு ஒரு குழந்தையின்
ஆர்வத்துடன் என்னிடம் “அது என்ன பொருள்?” என்னிடம் கேட்டார்.
பெரும் பணக்கார நண்பன். எப்பவும் அவன் சிகெரெட் பற்ற வைக்க
என்று லைட்டர் வைத்திருப்பான். அப்போது அதை அவன் கையோடு எடுத்துப் போயிருப்பான்.
உள்ளே வந்து பெண்ணின் அப்பா, வாயில் சிகெரெட் வைத்தபடி,
“லைட்டர்?” என்று அவனிடம் கை நீட்டுவார். எத்தனை முன் தயாரிப்புடன் அவன் இருந்தாலும்,
சட்டென அந்தக் கேள்வியால் அவன் திக்குமுக்காடி மேசையில், டிராயர்களில் காகிதங்களுக்கு
அடியில் என்று ஒரு திக்கென்ற மனசுடன் தேடும் காட்சி பார்க்க கன வேடிக்கையாய் இருக்கும்.
“அடாடா அருமை” என சந்தோஷப் பட்டார் அவர்.
இன்னொரு சந்தர்ப்பம். நான் பார்த்த அநேக வெளிநாடடுப் படங்களின்
பல ஃப்ரேம்கள் அப்படியே நம் தமிழ் சினிமாவில் வருவதைப் பற்றி அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
மணிரத்தினத்தின் ஒரு திரைப்படம். வைக்கோல் பரப்பிய ஒரு குதிரை வண்டி நிற்கிறது. அந்த
வைக்கோல் குப்பென்று தீ பற்றிக் கொள்கிறது. குதிரை மிரண்டு ஓடுகிறது. காமெரா அருகில்
இருந்து வண்டி கிளம்பி ஒரு புள்ளி போல மறைகிறது. திரையில் பார்க்க கண்கொள்ளாக் காட்சி.
இந்த ஃப்ரேம் வந்த வெளிநாட்டுப் படம் பற்றி பாலச்சந்தரிடம்
உற்சாகமாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். யுத்தப் படம். வேறு நாட்டு ராணுவ வீரர்களின்
ஆக்கிரமிப்பில் ஊரே அல்லோல கல்லோலப் படுகிறது. வெறி கொண்ட ராணுவக் கூட்டம். குதிரைகளில்
சர்ர் சர்ரென்று கையில் நீண்ட குச்சிகளில் தீப் பந்தங்களுடன் வீதியெங்கும் ஆவேசமாய்த்
திரிகிறார்கள். தோன்றியபடி அவர்கள் ஊரையே கொளுத்திக் கொண்டு போகிறார்கள்.
எதிரிகளின் படையெடுப்பால் ஊரை விட்டு வெளியேறும் கூட்டம்.
வேறு ஊருக்கு நகர்கிறார்கள். ஒரு பதினைந்து இருபது பேர். அதில் ஒரு பதின்வயசு ஜோடி.
ஓர் இளம் பெண். ஒரு வாலிபன். அப்போது தான் அந்தத் துயரத்தின் நடுவே மற்றவர்களுக்கு
ஒரு நம்பிக்கையின் கிரணம் கிடைக்கும், என்ற அளவில். நமக்கும் கதையை கவனிக்க ஒரு பிடிப்பு
வரும்... என்பதாக.
இரவுகளில் அவர்கள் குழுவாக நடந்து பக்கத்து ஊரை அடைகிறார்கள்.
அந்த இளம் ஜோடி க்ளுக் க்ளுக் என்று சிரித்தபடி வருவது அவர்கள் எல்லாருக்குமே பிடித்திருக்கிறது.
பக்கத்து ஊரில் உள்ள ஒரு சர்ச்சில் அவர்கள் இரா தங்குகிறார்கள். ஆனால் அந்த ஊரையும்
எதிரிகள் கைப் பற்றி விட்டார்கள். வெளியே ஒரே கலவரச் சத்தங்கள். அப்படியே அடங்கி ஒடுங்கி
முடங்கிக் கிடக்கிறார்கள்.
கடும் இரவு. சப்தங்கள் அடங்கி மெல்ல அமைதியாக விடிகிறது காலை.
(இந்த ஷாட்களை யெல்லாம் மணிரத்னம் எங்காவது வைத்திருக்கிறாரா, நான் பார்க்கவில்லை.)
அந்த இளம் பெண் சர்ச்சின் பின் வாசல் வழியே வெளியே வருகிறாள். இடுப்பு உயரத்துக்கு
வளர்ந்த புல். இளம் வெயிலின் மினுமினுப்பு. கண் கொள்ளாக் காட்சி. உற்சாகமாய் அவள் அந்தப்
புல்வெளி நோக்கி லுலுலுலு என்று ஓடுகிறாள். போகாதே, போகாதே... என்று மற்றவர்கள் எச்சரித்துச்
சத்தம் போடுவதை அலட்சித்து அவள் ஓடுகிறாள். இடுப்பு உயரமான புல்வெளியில் அவள் உருவம்.
டப். குண்டுச் சத்தம். அவள் புல்வெளிக்குள் சரிந்து விழுகிறாள்.
காதலன் ஊ..வென அலறி புல்வெளிக்கு ஓடுகிறான். அவனைப் போகாதே,
போகாதே, என எச்சரிக்கிறார்கள் எல்லாரும். அந்தப் பெண்ணைத் தூக்கி வாரியெடுத்துக்கொண்டு
அழுதபடி வருகிறான் காதலன். இறந்த அவளை சர்ச்சுக்குள் கொண்டு வருகிறார்கள். ஒருநாள்
இரண்டுநாள் என நாள் கடக்கிறது. வெளியே எதிரி ராணுவக்காரர்களின் அட்டகாசம் அதிகரித்திருக்கிறது
இப்போது. எத்தனை நாள் இவளை இப்படி வைத்துக் கொள்வது, இவளை நல்லடக்கம் செய்ய வேண்டும்,
நான் கிளம்புகிறேன்... என்கிறான் காதலன். இப்போது வெளியே போவது ஆபத்து... என்கிற எச்சரிக்கைகளையும்
மீறி ஒரு குதிரை வண்டியில் வைக்கோல் படுக்கையிட்டு அவளை ஏற்றிக் கொண்டு சர்ச்சுக்கு
வெளியே வருகிறான்.
குதிரையொன்றில், நீளமான குச்சியில் தீப் பந்தம் ஏற்றிய ஒரு
ராணுவ வீரன் அங்கே வந்து வண்டியில் கிடத்தப் பட்டிருக்கும் காதலியின் கவுனைக் குச்சியால்
தூக்கி அவளது பெண்குறியைப் பார்க்கிறான். இதனால் ஆத்திரம் அடைந்த காதலன் அவனைத் தாக்கப்
பாய்கிறான். வீரன் அவனைத் தன்னிடம் உள்ள கயிற்றால் கட்டி குதிரையோடு தரையில் தரதரவென்று
அவனை இழுத்துப் போகுமுன்...
திரும்பி அந்தத் தீப் பந்தத்தை குதிரைவண்டியின் வைக்கோலுக்கு
எறிகிறான்.
குப்பென தீ பற்றியெரிகிறது. குதிரை மிரண்டு விர்ரென்று அந்த
ஃப்ரேமை விட்டு, உள்ளே உள்ளே சிறிதாகி புள்ளியாகி மறைகிறது. (மணிரத்தினம் பயன்படுத்திய
அதே ஷாட்.)
நான் பாலச்சந்தரிடம் கேட்டேன். ”காதலனைக் கயிற்றில் கட்டி
குதிரையோடு வரும்படி தரதரவென்று இழுத்துச் செல்கிறான். சரி. அந்த வண்டிக்குத் தீ வைக்க
வைண்டிய அவசியம் என்ன? அந்த ஃப்ரேம் சினிமாவில் காட்ட நல்லா யிருக்கு. அதனால் தான்
மணிரத்தினம் அதே ஷாட்டைப் பயன்படுத்துகிறார். ஆனால் எனக்கு இது வக்கிரமா இருக்கு,”
என்றேன்.
பாலச்சந்தர் சிரித்தபடி, “இல்லப்பா... இதுவரை கதை காதலனையும்
காதலியையும் சுத்தி வந்தது இல்லியா? இனிமே கதை என்னாவும், அவனை இழுத்துப் போகிறார்கள்.
துன்புறுத்துகிறார்கள்... இப்பிடி மாறப் போகுது. அப்ப அந்தப் பொண்ணு? அதை அப்பிடியே
தெருவுல விட்டுட்டுப் போக முடியாது. அவள் கதைக்கு ஒரு முடிவு வேணாமா? அதுக்கு தான்
அந்த தீப்பந்தம் எறிகிற காட்சி. ரொம்ப கரெக்டாப் பண்ணியிருக்கான் அந்த டைரக்டர்” என்றார்
பாலச்சந்தர்.
அகக் கண் விழித்த கணம் அது. அதன்பின் நானும், கதை என எழுதினாலும்
அந்தக் காட்சியில் இடம் பெறும் பிற பாத்திரங்களின் உணர்வுகளையும் மனதில் கொண்டு அங்கே
ஓர் உலகத்தை சிருஷ்டி செய்ய ஆரம்பித்தேன்.
இன்னொரு விஷயம் மாத்திரம் மறக்காமல் இங்கே சொல்லி விட வேண்டும்.
கதை எழுதுகையில் ஒரு பாத்திரத்தோடு மனசை இயங்க வைத்து அவனது உணர்ச்சிகளோடு கதையை முடித்து
ஒதுங்கிக் கொள்ளலாம். ஆனால் திரையில் அப்படி முடியாது. திரையில் ஒரு காட்சியில் உலா
வரும் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஓர் உலகம் உண்டு. அதை, மற்ற பாத்திரங்களின் சூழலை
கவனம் செய்தாக வேண்டும்.
‘மதிலுகள்’ கதையில் வைக்கம் முகம்மது பஷீர், சுதந்திரப் போராட்டக்
கைதி, சிறைச் சுவரின் அந்தப் பக்கத்துப் பெண்ணோடு காதல்வயப் படுவார். அவளை நேரில் சந்திக்கிற
வாய்ப்புக்குப் பரபரப்புடன் காத்திருப்பார். மறுநாள் மருத்துவர் வந்து கைதிகளை சந்திப்பார்
என்று சொல்லி, அந்தப் பெண் அவரையும் மருத்துவரைப் பார்க்க வருகிறாப் போல வரச் சொல்வாள்.
ஆனால் முந்தைய மாலையே அவரை விடுதலை செய்து விடுவார்கள். பெரும் சோகமாய் அவர் விடுதலையை
வாங்கிக் கொள்வார்... என கதாபாத்திரத்திடம் நெருங்கி வந்து கதையை பஷீர் முடித்து விடுவார்.
மம்முட்டி நடித்து வந்தது ‘மதிலுகள்’ திரைப்படம். ஆனால் திரைப்படம்
என்று வருகையில் அந்த முடிவு எனக்குப் போதவில்லை. ஏனெனில் விடுதலை பெற்றுவிட்டாலும்,
மறுநாள் பார்வையாளர் என்ற முறையில் மனு கொடுத்து அவரால் அவளைப் பார்க்க முடியுமே, என்று
தோன்றி அந்த அவரது சோகம் வம்படியானது, என்று எனக்குப் பட்டது.
மதிலுகள், கதை அடிப்படையில் மிக முக்கியமான வரவு என்று நினைக்கிறேன்.
அதன் ருசியில் நான் சமைத்தது ‘ஜெயில்’ - சிறைச்சாலை பற்றிய வேறொரு கோணத்திய பார்வை
அது. கே.பி. சாருக்குப் பிடித்திருந்தது. ஜெயில், என்ற பின்னணியில் வேறு என்னென்ன கதைகள்
வந்திருக்கின்றன, என்று திரைப்பட நடிகர் ராஜேஷிடமும், நடிகர் சிவகுமாரிடமும் கேட்டுக்
கொள்கிறேன். அடுத்து நாம் இதைத் தொலைக்காட்சிக்காகப் பண்ணலாம் என்றார்.
அது பலிதம் ஆகவில்லை. ராஜேஷோடும், சிவகுமாரோடும் அவர் விவாதித்தாரா
தெரியாது.
இந்தக் கட்டுரை வெளியாகிற போது, திருமதி ராஜம் பாலச்சந்தர்,
அவரும் இயற்கை எய்தினார் என்று செய்தி வருகிறது. (26,11,2018) அவர் பரிமாறச் சாப்பிட்டிருக்கிறேன்.
அவர்களுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலி.
*
storysankar@gmail.com - mobile 91 97899 87842