முகாம்கள்
பாசறைகள்
(சென்ற வாரத்
தொடர்ச்சி)
-
எழுத்து வாசகனைத் தேடி, ஆனால் காத்திருக்கிறது. அது தேடிப்போக
முடியாது. அதன் அழகு காத்திருப்பது. வாசகன் தான் சுய தயாரிப்புடன் அதைநோக்கி வந்துசேர
வேண்டும். வரட்டும், என அது, எழுத்து ஆர்வமாய்க் காத்திருக்கிறது. வரும்வரை காத்திருக்கிறது.
சுய ஆர்வம் இல்லாத, முன் தயாரிப்பு இல்லாத வாசகனுக்கு எழுத்து பயன் தராது. அவனுக்கு
அக்கறை இல்லாத போது எழுத்தினால் அவனுக்கு உதவ முடியாது. இது ஒரளவு கடவுள் நம்பிக்கை
போல என்று கூடச் சொல்லிவிடலாம். ஒரு வாசகன் தன் தேடலின் மூலம் நல்ல எழுத்தைக் கண்டுகொண்டு,
அங்கு வந்தடைந்து தன் தரத்தையும், அந்த எழுத்தின் கௌரவத்தையும் உயர்த்துகிறான். ஒரு
தேடல், ஒரு காத்திருத்தல் - நியாயம் செய்து கொள்கின்றன பரஸ்பரம்.
வாசகனின் பங்கு ஆகவே முக்கியமானதொரு விஷயம். அது வாசகனை அலட்சியப்
படுத்தி விடாத எழுத்து.
எந்த எழுத்தாளனும் அடிப்படையில் தன் எழுத்தினும் அதிகத் தகுதியான
படைப்புகளின் அருமையான வாசகன் தான். எழுத்தின் எத்தகைய கருதுகோள்களைச் சார்ந்து அவன்
இயங்கினாலும், வாசிப்பில் கிணற்றுத் தவளை அல்ல அவன். மாற்றான் தோட்டத்து மல்லிகையை
நுகர அவன் தவறுவதே இல்லை. அது தன்நிலையை தனது கருத்துகளை மேலும் வளப் படுத்தும், தனது
எழுத்து-நியாயங்களை மேலும் செழுமைப் படுத்தும் என அவன் அறிவான். தன்னை மாற்றிக் கொள்ள
வேண்டிய சூழல் ஏற்பட்டால் மாறிக் கொள்ள அவன் தயக்கம் காட்டுவது இல்லை. அவனது வளர்ச்சி
நிலையே அது, என அறிந்து தெளிந்தவன் அவன்.
வாசக உலகம் எத்தனை அற்புதமாய் இருக்கிறது. எழுதியும் வாசித்துமே
ஒரு படைப்பாளன் தன் வாழ்நாள் முழுதும் கழித்துவிட முடிகிறது. உலகத்தின் சிறந்த ஓவியங்கள்,
அற்புதமான திரைப்படங்கள், பிற கலை வடிவங்கள்... எல்லாமே அவனுக்குப் பெரும் உணர்வு உந்துதல்
தருகின்றன. வான்கோவின் ஓர் ஓவியம், ‘பாலங்கள்’ என்ற ஜெர்மானியச் சிறுகதைக்கு, வித்திடுகிறது.
(இதே கதையை அடியொற்றி, வான்கோவை தமிழில் க.நா.சு. பாத்திரமாக மாற்றி நம்ம அசோகமித்திரன்
ஒரு கதை ‘செய்திருக்கிறார்.’) ருஷ்ய இ,யக்குநர் தார்க்கோவ்ஸ்கியின் ‘தியாகம்’ திரைப்படத்தின்
தாக்கத்தில் மயங்கி நான் ‘தாத்தாவின் பொய்கள்’ சிறுகதை எழுதினேன். முதுமையின் தத்தளிப்பு
இடைநாதமாய் அமைந்த கதை இதுவும். அதில் நடை எர்னஸ்ட் ஹெமிங்வேயின் பரபர நடையாக அமைத்துக்
கொண்டது நினைவுக்கு வருகிறது. (இம்மாதிரி உந்துதல்கள் மூலக்கதையோடு சம்பந்தம் இல்லாமல்
எழுத்தாளனின் தனித்தன்மையை உயர்த்திப் பிடிக்கிறதாக அமைந்து விடும்.)
ஒரு படைப்பு உள்ளே உசுப்பி விட்ட அளவில் வேறொரு படைப்பு கிளர்ந்தெழுகிறது.
அந்தப் படைப்புக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கக் கூட இருக்காது. பல சந்தர்ப்பங்களில்
எழுத்தாளன் விளக்கிச் சொன்னாலொழிய அதை மற்றவர்கள் சாயல்கண்டடைவது சிரமந் தான். அசோகமித்திரனின்
‘பூனை’ கதை நகர இட நெருக்கடி பற்றிச் சொல்கிறது. ஹைதராபாத்தில் ஓர் அப்பார்ட்மென்ட்டில்
பத்தாவது மாடி தாண்டிய மொட்டை மாடியின் ஒரு ஓரத்தில் கூரைப்பெட்டி போன்ற அறையில் இரவைக்
கழிக்கிற ஒருவனுக்கும், அங்கே ஒதுங்க முயற்சிக்கிற பூனை ஒன்றுக்குமான இடப் போராட்டம்.
அதன் மன அலைக் கழிப்பில் நான் ‘ஸ்தலபுராணம்’ சிறுகதை எழுதினேன். ஆனால் ‘ஸ்தலபுராணம்’
பாம்புகள் பற்றிய மூட நம்பிக்கைகளையும், தலைமுறை இடைவெளியையும், பணம் சார்ந்த உலகத்தையும்
சொல்லும் கதை. ‘ஸ்தலபுராணம்’ அவசியம் நீங்கள் வாசிக்க வேண்டும், ‘பூனை’ அசோகமித்திரனை
விட்டுவிட்டாலும்!
இலக்கியத்தில் ஒரு படைப்பை அடிநாதமாகக் கொண்டு அதைச் சார்ந்தும்,
அதன் எதிர்த்தளத்திலும், மறு வாசிப்புப் படைப்புகள், இயல்பானவையே. ஹென்ரிக் இப்சனின்
‘மக்களின் பகைவன்’ நாடகத்தை உள்வாங்கி சத்தியஜித் ரே ஒரு திரைப்படம் எடுத்தார். ஷேக்ஸ்பியரின்
‘லீயர் அரசன்’ ஏற்படுத்திய தாக்கத்தினால் குரோசோவா, கோடார்ட், பெர்க்மென் போன்ற உலகத்தர
திரைப்பட இயக்குநர்கள் படங்கள் தந்துள்ளார்கள். இவை மூலப் படைப்பின் அஸ்திவாரமும்,
தங்களின் தனி ஆளுமையும் கொண்டவையாக விளங்குகின்றன.
வாசகனாக, ஒரு நாணயத்தின் இரு பக்கங்களையும் விளக்கும் வெவ்வேறு
படைப்புகளை வாசிப்பது தனி அனுபவம். பேர்ள் எஸ் பக் என்கிற அமெரிக்கப் பெண்மணி (நோபல்
பரிசு பெற்ற புனைவாளர்) உலகத்தின் காலை நாங்கள் சொன்னால் தான் விடியும், என அமெரிக்காவின்
அணுகுண்டு சோதனை வெற்றியைக் கொண்டாடி எழுதிய ‘கமான்ட் தி மார்னிங்’ நாவலும், ஹிரோஷிமாவில்
குண்டு வெடித்தபின், அந்தப் பகுதியின் துயரத்தை நேரில் கண்டு சொன்ன ‘ஹிரோஷிமா’ புத்தகமும்
எனக்கு ஒருசேர வாசிக்க அமைந்தது சுவாரஸ்யமானது.
மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலின் அற்புதமான முதல் ஐம்பது
பக்கங்கள், தொழிலாளி வர்க்கம் பற்றிய அவரது விவரிப்பு. உலகின் சிறந்த இலக்கியப் பக்கங்கள், என என்னை வசிகரித்தன
அவை. அதேசமயம், ‘ஃபார் ஹும் தி பெல் டால்ஸ்’ எழுதிய ஹெமிங்வே மற்றொரு சித்திரத்தை,
சமுதாயப் புரட்சி என்பது முதலில் எப்படி ஊர் நன்மைக்காக என்று அறிவுஜீவிகளால் துவக்கப்
பட்டு, பின் வெகு சுருக்கில் காலிகளால், சமூக விரோதிகளால், அயோக்கியர்களால் கையில்
எடுத்துக் கொள்ளப் பட்டு திரிந்து போகிறது, என்கிற சித்திரத்தை ஆழமாய்ப் பதிக்கிறார்.
உலக இலக்கியத்தில் இன்னொரு முக்கியப் பதிவு, ‘ட்டு ஹேவ் அன்ட்
ஹேவ் நாட்’ நாவலில் கிழவன் ஒருவன் மரணத் தருவாயில் என்னென்னவோ சொல்ல நினைத்து நினைவுகள்
பல ஒரே சமயம் முட்ட, பல விஷயங்களை ஒரே சமயத்தில் சொல்ல முயன்று குழம்பி, பிதற்றிவிட்டுச்
செத்துப் போகிறதை, அவன் உரையாடல்களாய்த் தந்த இடம். எழுத்தில் அத்தனை உயரங்களை தரிசித்தது
அந்த வயதில் என் பேறு என்பேன்.
ஒருமுறை மனநல மருத்துவர் டாக்டர் ருத்ரனிடம் இப்படி உச்சம்
தொட்ட படைப்புகளை சிலாகித்துப் பேசியபோது, அவர் தான் வாசித்த சில உதாரணங்களையும் சொல்லி,
“அதனால் தான் நான் புனைவு எழுதுவதைக் கையில் எடுக்காமல் விட்டேன்” என்று புன்னகைத்தார்.
மாற்றுத் தரப்பு விவாதங்களைக் கூட தெளிவுடன் உள் வாங்கிக்
கொள்ளப் பழகிக் கொள்வது, எழுத்தை வளர்த்துக் கொள்ள உதவி செய்கிறது. லா.ச.ரா. எழுதிய
‘கறந்தபால்’ சிறுகதையில் அவரது பக்தி சிலிர்ப்பு அப்படியே நம்மை எட்டுகிறது. கடவுளை
மறுக்கிற கந்தர்வனின் ‘சீவன்’ இதற்கு சளைத்தது அல்ல. ஆச்சர்யகரமாக, ஹெப்சிபா ஏசுதாசனின்
‘அநாதை’ சிறு நாவல், ஆகா தமிழுக்கு நோபல் பரிசு தரலாமே இதற்கு, என்று என்னைக் கிறங்கடிக்கிறது.
உலகம் என்பது என்ன, கடைசியில் தோல்விகள் தானே, என்று அவர் தன் முன்னுரையை முடிக்கிற
போது பகீரென்றது. ஆனால் அதை அவர் ஒரு வாழ்க்கையாக எழுதிக் காட்டிய விவேகம் மறுக்க முடியாதது.
எழுத்து காலந்தோறும் அந்தப் படைப்பாளனை வளர்த்து வருகிறது,
என அறிகிறேன். ஒரு படைப்பில் இருந்து அடுத்த படைப்பை வித்தியாசப் படுத்திக் காட்ட,
புதிய வளாகங்களில் சஞ்சாரம் செய்ய அவன் முயற்சி செய்கிறான். கூறாததைக் கூறவும், கூறியதில்
கூறாததைக் கூறவும் அவன் அவாவுறுகிறான். அதற்காய் அவன் தன்னை ஓயாமல் புதுப்பித்துக்
கொள்ள வேண்டியிருக்கிறது. அவனது அடுத்த எழுத்தை அவன் நியாயம் செய்தாக வேண்டும். எனவே
அவன் தொடர்ந்து தன் வாசக நிலையிலும், சாமான்ய பொதுஜன நிலையிலும் தக்கவைத்துக் கொள்ள
வேண்டி யிருக்கிறது.
தமிழில் அற்புதமான விஷயங்கள் எழுதப்பட்டுக் கிடைக்கின்றன.
உலகின் தொன்மையான மொழியில் அன்றே பெரும் காப்பியங்களை நாம் கொண்டிருக்கிறோம். எழுத்தைப்
பாதுகாத்தல் என்ற அளவில் கூடாமல், வாய்வழி செவிவழி பரிமாற்றங்களுக்கு செய்யுள் வடிவம்
உவப்பானது, மனதில் தங்கும் என அவர்கள் நினைத்தார்கள். அகநானூறு, புறநானூறு காட்டும்
வாழ்வியல் சித்திரங்கள் குறியீட்டு அளவிலும், பின்புல நுட்பங்களிலும் நவீனத்தன்மை கொண்டவை.
வாழ்வின் பல்வேறு உணர்வுத் தளங்களை, நிலத்தை ஐந்திணைகளாகப் பிரித்து வாழ்வோடு பொருத்திக்
காட்டுகிற நுண்மை வேறு எந்த மொழியில் இருக்கிறது?
அதிலும் கதை சொல்லுதலில் நாம் எவ்வளவு முன்னேறி யிருக்கிறோம்,
என்பதே வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது எனக்கு. ராமாயண மகாபாரதம் சார்ந்து
எத்தனை குட்டிக் கதைகள், பழமொழிகள், சொல் வழக்குகள்
நம்மிடையே இன்றும் புழங்கி வருகின்றன. கிருஷ்ண லீலா கதைகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.
மண்ணைத் தின்ற கண்ணனை வாயைத் திறந்து காட்டச் சொல்ல, அவன் வாய்க்குள் உலகத்தையே பார்த்து
மகிழ்ந்தாளாம் யசோதா. அரக்கியொருத்தி கிருஷ்ணனை எடுத்து தாய்ப்பால் என மார்பில்
விஷப்பால் ஊட்ட கிருஷ்ணன் அவள் உயிரையே உறிஞ்சிக் குடித்தான். குறும்பு தாங்காத கிருஷ்ணனைத்
தாய் உரலில் கட்டிப் போடுகிறாள். குழந்தையோ உரலையே சேர்த்து உருட்டிக்கொண்டு தோட்டத்துக்கு
வந்துவிட, இரு நெருக்கமான மரங்களிடையே அது தவழ்ந்து போனதில் உரல் மரங்களிடையே மாட்டிக்
கொள்கிறது. அதைவிட இரண்ய வதம். அவன் பெற்ற வரம் விசித்திரமானது. இரவிலும் எனக்குச்
சாவு வரக் கூடாது. பகலிலும் வரக் கூடாது. மனிதனாலும் நான் சாகக் கூடாது. மிருகத்தாலும்
சாகக் கூடாது. வீட்டுக்குள்ளும் சாகக் கூடாது. வெளியிலும் சாகக் கூடாது. உயிருள்ள பொருளாலும்,
உயிரற்ற பொருளாலும் என் சாவு அமையக் கூடாது. அப்படி வரம் பெற்ற இரண்யனை கடவுள், சிம்ம
முகமும் மனித உடலுமாய் வந்து, அந்தி நேரத்தில், வீட்டு வாசல் நிலைப்படியில் வைத்து,
நகங்களால் கீறிக் கிழித்து வதம் செய்கிறார், என்பது எத்தனை அருமை!
பள்ளிக்
காலத்திலேயே தமிழில் நான், நோபல் பரிசு பெற்ற சில கதைகளை வாசித்திருக்கிறேன். எங்கள்
ஊர் ஸ்ரீவைகுண்டத்துப் பொது நூலகத்தில் அவை வாசிக்கக் கிடைத்தன. ஜான் ஸ்டீன்பெக்கின்
‘நிலவு வந்து பாடுமோ’, ‘முத்து’, அப்புறம் ஜாக் லண்டனின் ‘கானகத்தின் குரல்’ போன்ற
அருமையான மொழிபெயர்ப்புகள், அவற்றின் தரம் புரியாவிட்டாலும் சுவாரஸ்யத்தோடு வாசித்திருக்கிறேன்.
முத்து பதிப்பகம் என அன்றைய நாளில் அருமையான மொழிபெயர்ப்புகள் தமிழில் கொண்டு வந்தார்கள்.
இப்போது சற்று விவரம் தெரிந்த வயதில் அந்தப் புத்தகங்களை ஆங்கிலத்தில் வாசிக்க வாய்க்கும்
போது தான் அவற்றை நான் முன்பே தமிழில் வாசித்த நினைவுகள் மகிழ்ச்சியுடன் அலையடிக்கின்றன.
காலம் காலமாக
என் எழுத்து மாறுதல் கண்டே வந்துள்ளதாகத் தோன்றுகிறது. என்னிடம் கதைகேட்டு வெளியிடுகிற
நிலையில், அது சிற்றிதழா வணிக இதழா என நான் பேதம் பாராட்டுவது இல்லை. கதைகளில் என்
தரம் என்கிற ஒரு அளவுகோல் கட்டாயம் இருக்கும். கதை கேட்கிற பத்திரிகையாளர்களும் அதை
என்னிடம் எதிர்பார்க்கிறார்கள் என்பது எத்தனை நல்ல விஷயம்.
என் ஆரம்பகாலக்
கதைகள் என் சூழலை ஒட்டி அமைந்தவையே. என் ஜாதி சார்ந்து நான் அறிந்த சிறு வட்டத்து மனிதர்களை
அடையாளங் காட்டி வந்தேன். அதைத் தவறாகவும் நினைக்கவில்லை. எனக்கு நடக்கக் கற்றுத் தந்தவர்கள்
அவர்கள். என்னிடம் ஒரு எழுத்துநடை இருந்தது. எனது வாசிப்பு அனுபவம் யார் மாதிரியும்
எழுதாத விதத்தில் என் எழுத்தை அமைத்துக் கொடுத்தது. ஹெமிங்வே போல, லாசரா போல, தி. ஜானகிராமன்
போல நான் எழுதிப் பார்த்திருக்கிறேன். அவை வேண்டுமென்றே முயற்சி செய்தவை. சில எழுத்தாளர்களின்
சில படைப்புகளைத் தொட்டும் விரித்தும் கடந்தும் கதைகள் புனைந்திருக்கிறேன். அதுபற்றி
வேறொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்.
என் கதையில்
நான் பிரயோகப் படுத்தும் வார்த்தைகள், அதில் சொல்லிச் செல்லும் பாத்திரங்களின் சூழல்,
அறிவுத் தளங்களை அடியொற்றி அவர்களது கிரகிக்கும் திறன் சார்ந்து அமைத்துக் கொள்கிறேன்
நான். பாத்திர வார்ப்புகள் என் கதையில் முக்கியம். இதை என் விமரிசகர்களே கவனித்து என்னிடம்
என் அடையாளமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
அதேபோல ஒரு
பத்தியில, அந்தப் பத்தியில் உணர்த்தப்படும் உணர்ச்சி, அதன் தீவிர அடிப்படையில் அந்தப்
பத்தியின் நீளம் அமைகிறது. உணர்ச்சித் தீவிரமான ஒரு நெடிய பத்தி அமைந்தால், அதன் கடைசி
வரியை, ஓரிரு வார்த்தைகளாக, அந்த உணர்ச்சியை வெளியே எடுத்துத் தந்து விடுவதும், என்
பாணி.
என்னுடைய
ஒரு படைப்பு போல இன்னொன்று இருப்பதை நான் விரும்பவில்லை. அதில் என் அடையாளம் என் கலை
ஆளுமைதான். சொல்லும் திறன் மாத்திரம் தான். ஒரு கதை சொல்வதில் பல்வேறு வகை உத்திகள்
உள்ளன. புதிதாகவும் தோன்றிக் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றிலும் நான் இயங்கிப் பார்க்க,
மூழ்கி முத்தெடுக்க ஆசைப் படுகிறேன். ஒரு படைப்பு அதை வெளிப்படுத்தும் உத்தியைத் தானே
தேர்வுசெய்து கொள்கிறது என்றுதான் தோன்றுகிறது. அப்படியல்லாது வேறு முறையில் சொல்லப்பட்டால்
அந்தக் கதை இத்தனை வீர்யம் பெறாது என்று தோன்றும் படி அந்தக் கதையில் வியூகம் அமைக்கப்பட
நான் முயற்சி செய்கிறேன்.
ஆரம்பகால
எனது எழுத்தில் ஜிம்மிக்ஸ், வார்த்தைக் குறும்புகள் அதிகம் ஊடாடி வந்தன. வயசும் அப்படி.
நானே யாரோடும் அப்படியான துள்ளலுடன் தான் பழகி வந்தேன். இப்போது இந்த வயதில் வாழ்விலும்
எழுத்திலும் எனக்கு அவை துறுத்தித் தெரிகின்றன. ‘குதிரை மீதொரு ராஜகுமாரன்’ கதையில்
ஒல்லியான அப்பா என்றால், அவரை விட அவர் கைத்தடி குண்டாய், என எழுதுவேன். இந்த வீட்டில்
தான் நாளாக நாளாக ரூபாயின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது, என எழுதுவேன். இப்போது
‘மற்றவர்கள்’ நாவலில் பையன் சைக்கிளை ஓட்டி வருகிறான். நேர்ப்பார்வைக்கு அவன் மாத்திரமே
வருகிறாப் போலிருக்கும். வீட்டருகே வந்து அவன் சைக்கிளை நிறுத்த பின்னே யிருந்து அப்பா
இறங்குவார், எனச் சொல்லியிருக்கிறேன். அய்யனார் சிலைக்குக் கீழே கால்கட்டிய இரு கழுதைகள்
தலை குனிந்து மௌனமாய் நிற்கும். குதிரைக்குக் கிடைத்த அங்கீகாரம் தங்களுக்கு இல்லையே,
என அவை முறையிடுவதாக அதைச் சொல்லி யிருப்பேன். அந்தந்த நேரத்து மன எழுச்சியில் கதையில்
கிளம்பும் அலைகள்.
பின்னாளில்,
இந்த வார்த்தைக் குறும்புகள் பிடி மாறி, கதையின் கருவை முக்கியமான ஒரே வாக்கியத்தில்
கதைக்குள் எடுத்துத் தர முன்வந்தேன். ‘மிஸஸ்’ என்றொரு கதை. ‘வேலைக்காரியிடம் பேசுவதோ,
பிச்சைக்காரியின் குழழந்தையைப் பார்த்துச் சிரிப்பதோ என் மனைவிக்குப் பிடிக்கவில்லை’
என்பது அந்தக் கதையின் மந்திர வரி. ‘கனவு தேசத்து அகதிகள்’ என்றொரு கதையின் வரி. ‘அவனது
தேவைகளை அவனைவிட அவள் அறிந்திருந்தாள். இதுகுறித்து அவளுக்குப் பெருமிதம் இருந்தது.’
முரண் அம்சங்களை
நுணுக்கமாக அடுக்கிச் சித்தரிப்பதும் சுவாரஸ்யத்துக்கு உதவுகின்றன. அதேபோல கச்சிதமான உவமைகளைக் கையாள்வது எனது சொத்து என நான்
தலைப்பட்டேன். காலையில் பால் வந்து இறங்கியதும் பால்காரனைச் சுற்றி நீட்டப்ட்ட ஏராளமான
பால் கார்டுகள். பிரேக்டவுன் ஆன பஸ் கண்டக்டர் போல அவன் திணறினான், என எழுதியது நினைவு
வருகிறது.
ஷேவிங் சோப் போட்டுக்கொண்ட கன்னத்துடன் அவன் பார்க்க கிறிஸ்துமஸ்
தாத்தா போல இருந்தான்.
முரண் அம்சம் என்றால், ஒருவன் தற்கொலை செய்து கொள்கிறான்.
அதைக் கண்டு அந்த அறைக்குள் போனவன் அந்த உடலைத் தூக்குக் கயிற்றில் இருந்து கீழே இறக்க
வேண்டும், எப்படி என்று பதட்டத்துடன் நிற்கிறான். அறைக்கு வெளியே யிருந்து அப்போது
கேட்ட பிற மனிதக் கூக்குரல்கள் அவனுக்கு, கூட ஆட்கள் இருக்கிற ஆறுதல் தந்தன. வாழ்க்கையே
முரண்களால் ஆனது. அதைக் கண்டுகொள்வதும் எழுத்தாக்குவதும் தனி அனுபவம். நல்ல நகைச்சுவையும்
அதில் காணக் கிடைக்கும். உப்பு விக்கப் போனால் மழை பெய்தது, மாவு விக்கப் போனால் காத்தடிச்சது,
எனப் பழமொழி கேள்விப் பட்டிருக்கலாம்.
ஆடிட் செய்ய வந்தவர் முந்திரி வறுவலை எடுத்து வாயில் போட்டுக்
கொண்டே, இந்த மூவாயிரத்துக்கு என்னய்யா கணக்கு, என்று கேட்கிறார். எந்த மூவாயிரம்,
என கணக்குப்பிள்ளை கண்ணாடியைச் சரிசெய்தபடி எட்டிப் பார்க்கிறார். அவர் கண்ணாடி உடைந்து
ஆறு மாசம் ஆகிறது. அதைச் சரி செய்ய கையில் காசு இல்லை, என எழுதிக் காட்டியது நினைவு
வருகிறது. கண்ணாடி வாங்க அவருக்கு உதவாத முதலாளி, ஆடிட்டருக்கு முந்திரியுடன் சீராட்டு
செய்கிறான்!
கருத்து அடிப்படையில் அல்லாமல், கொள்கை அடிப்படையிலும் அல்லாமல்
வாழ்க்கையை சந்திப்பது, அதை எடுத்துரைப்பது என்பது முக்கியம். எனக்கு மாற்றான கருத்துகளைக்
கூட பாத்திர அடிப்படையில் நான் சித்தரிக்கலாம். அதன் பாத்திர வார்ப்பு நியாயத்துடன்
அது அமைகிறது. அப்படி நாம் விலகி பாத்திரங்களை உண்மை சொரூபமாக, கருத்துக் குறுக்கமாக
அல்லாமல் காட்டும்போது, அது நல்ல சமூக அடையாளமாக, சில சமயம் சமூக விமரிசனமாகவும் ஆகிக்
கொள்கிறது. முகாம்களிலும் பாசறைகளிலும் எந்த நல்ல எழுத்தும் அடைபட்டுக் கொள்ள முடியாது.
ஆனாலும் அவை தேவைதான், என்பதில் மறுக்க ஒன்றும் இல்லை. வெறும் யதார்த்தச் சித்தரிப்புகளே
கூட, எழுத்தாளனின் சிந்தனைக் குவிப்பு அடிப்படையில் பெரும் ஆவேசத்தை, உள் தூண்டலை நிகழ்த்தி
விடக் கூடும். கமலாதாஸ் போல பலர் அதை சாதித்துக் காட்டி யிருக்கிறார்கள். சொல்லும்
திறனை மேம்படுத்திக் கொண்டு, வாழ்வின் யதார்த்தங்களை எந்தப் பக்கமும் சாராமல் கதை கூறுதல்
ஆகச் சிறப்பான இலக்கியம் என்பேன். அதில் இருந்து மொத்த மானுடமும் எடுத்துக் கொள்ளக்
கிடைக்கிறது. ‘ஃபேர்வெல் டு ஆர்ம்ஸ்’ எழுதி ஒரு தனி மனித சோகத்தை ஒட்டுமொத்த மானுடத்துக்கே
ஏற்றிக் காட்ட முடிந்தது ஹெமிங்வேக்கு. வாழ்வின் எல்லைவரை போய்விட்டுத் திரும்பிய தாஸ்தயேவ்ஸ்கி
‘பியூட்டி வில் சேவ் தி வேர்ல்ட்’ என்று அறைகூவல் விடுத்தான், என்பதில் உள்ள நியாயத்தை
புறக்கணிக்க முடியாது. அவன் கலைஞன் என்பதால் அப்படி அவனுக்கு சாத்தியப் பட்டது.
கலைஞனுக்கு வாழ்க்கை அற்புதமானதொரு அனுபவம். உடல் குளிரக்
குளிர உன்னைக் கடந்து ஓடிக் கொண்டே யிருக்கும் நதி அது. அவன் பார்க்கும் வாழ்க்கை முகமூடி
வழியே அல்ல. கடிவாளம் கொண்டது அல்ல அவன் பார்வை. கணந்தோறும் புதிதாய்ப் பிறக்கிற அனுபவமே
வாழ்க்கை. வாழ்வின் பிரம்மாண்டத்தில் தன் சார்ந்து அதைக் குறுகிய அளவில் உள்ளங்கை நீர்
என, எண்ணுவது பேதைமை.
‘குமுதம்’ பேட்டியில் ஒருமுறை இப்படிச் சொன்னேன். எழுத்தாளன்
உங்களுக்கு உங்களைக் காட்டித் தருகிறான். ஒரு மருத்துவத் தாதி போல அவன் உங்களை உங்களிடமிருந்து
எடுத்து உங்களுக்குக் காட்டுகிறான்.
குஷ்டரோகிப் பிச்சைக்காரனுக்கு ஒருத்தி பிச்சை போடுகிறாள்.
பிச்சையைப் பார்க்காமல் அவளைப் பார்க்கிற பிச்சைக்காரன்.
ஒண்ணரைக் கண் பெண் கூட கண்ணுக்கு மை தீட்டி அழகு படுத்திக்
கொள்கிறாள். அழகாய் உணர்தல், அதுதானே முக்கியம்.
பார்க்கும் காட்சிகள், விழும் படிமங்கள், நிழலும் வெளிச்சமுமாய்
அவன் மனசில் பிம்பங்கள் மாறி மாறி விழுகின்றன. அவனுக்குத் தோல்விகள் இல்லை. வாழ்வின்
அனுபவங்கள் தோல்விகள் ஆகா. பிறிதின் நோய் தன் நோய் என உணர்கிறவன் அவன். பிறரின் மகிழ்ச்சியும்...
ஆகவே, அவன் தன் நோய்க்கு அல்லல் உறுவதே இல்லை.
எழுத்தை விட வாழ்க்கை அற்புதமானது.
ஆனால் அதை நமக்கு எடுத்துச் சொல்ல ஓர் எழுத்தாளன் தேவை.
•
திசம்பர் 30, 1995 - திருவண்ணாமலை
மாவட்ட தமுஎச மாநாட்டில் சிறப்பு விருந்தினராக வாசித்தளித்த உரை.
storysankar@gmail.com 91 97899 87842