Friday, December 28, 2018


PART 22

கமலாம்பாள் சரித்திரம்
“கமலாம்பாள் சரித்திரத்தை வெகு ஸ்வாரஸ்யமாகச் சொல்லுவாள் அம்மா. பாப்பா பட்டியகத்து வெட்டரிவாளைப் பற்றியும், பேயாண்டித் தேவர் திருவுலாவைப் பற்றியும் பேசுவோம். இப்பேச்சு முடியும்பொழுது, நம்ம ராஜம் மாதிரி இனி யார் எழுத முடியும் என்று அம்மா சொல்லுவாள்…” ‘என் கதை,’ கட்டுரையில் பி.எஸ்.ராமையா இப்படிக் குறிப்பிடுகிறார். இதனை ஒரு முக்கியமான விமரிசனமாக நாம் கொள்ள வேண்டும். காரணம் ஓர் எழுத்தாளன் விமரிசகனை எதிர்நோக்கியல்ல, தனது இலக்கிய ஸ்தானத்தை எதிர்நோக்கியுமல்ல, வாசகனை நினைத்தே மிகுந்த ஆர்வத்துடன் தன் படைப்புகளை சபைக்கு அனுப்புகிறான். வாசகனைக் கவர்வதே, வாசகனோடு பகிர்ந்து கொள்வதே – அவனது நோக்கமும் பயனுமாக இருக்கிறது. அதுவே அவனது நிலைத்த வெற்றியுமாகிறது. விமரிசனமோ இரக்கமற்றது. அறிவு சார்ந்தது. தன்னுள் தனக்கென மிகக் கண்டிப்பான விதிமுறைகளை உள்ளடக்கியது அது. படைப்பும் ரசனையும் அப்படியல்ல; அது உள்ளன்போடு கூடிய, ஆத்ம ஒளியோடு இணைந்த, அறிவின் உணர்ச்சிபூர்வமான வெளிப்பாடு. எழுதுகிறவன் உணர்வுரீதியாய் இயங்குகிறான்; எழுதுமுன்னும் எழுதும்போதும் தன் பாத்திரங்களை அந்தரங்கத்தின் பிரத்யேகத்தில் முப்பரிமாணச் சித்திரங்களாய் அவன் காண்கிறான். தன் வாழ்க்கையையோ, தான் அறிந்த வாழ்க்கையையோ, அல்லது தான் அடைய விரும்பிய வாழ்க்கையையோ கொண்டு, தன்னொத்த அல்லது எதிரான குணாம்சங்களுக்கு வண்ணந் தீட்டி, தனது பாத்திரங்களுக்கு ஊனும் உயிரும் உணர்வும் தந்து உலவ விடுகிறான்.
‘கமலாம்பாள் சரித்திரம்’ இலக்கிய வடிவமும், நடையழகும், விஷயத் தீவிரமும், பாத்திரங்களின் அதீதமற்ற வண்ணங்களும் கூடிய முழுமையான நாவல். தமிழில் நாவல் இலக்கியத்தின் முன்மாதிரியாக அமைந்த இந்நாவல் இத்தனை அழகோடும் தத்துவ வீச்சோடும் கச்சிதமான உருவ அமைப்போடும் அமைந்தது ஒரு பெரிய சாதனைதான். இது 1893-ஆம் ஆண்டு ‘விவேக சிந்தாமணி’ மாத இதழில் தொடர்கதையாகத் தொடங்கப்பட்டு, இரண்டு வருடங்கள் வெளிவந்தது. 1896-இல் நூல்வடிவம் பெற்றது. இத்தொடர் துவங்கும்போது ‘அநியாய அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம்’ என்று பெயரிடப்பட்டது. இரண்டாவது மாதத்தில் தலைப்பு ‘ஆபத்துக்கிடமான அபவாதம்’ என்று மாற்றப்பட்டுப் பின்னர் ‘கமலாம்பாள் சரித்திரம்’ எனவே அறியப்பட்டது. நாவலுக்கு இரண்டு தலைப்புகள் வைப்பதை முதலில் ராஜமய்யரே அறிமுகம் செய்கிறார். ‘சரித்திரம்’ என்ற பதம் நல்ல ஆழமும் வீச்சும் விசாலமும் கொண்டது. உண்மையின் எதிரொலியை உள்ளடக்கிய தொனி அதற்கு உண்டு என்பதனால் மட்டும் இத்தொடருக்கு ராஜமய்யர் ‘கமலாம்பாள் சரித்திரம்’ என்று பெயர் வைத்துவிட்டதாகக் கூறவியலாது.
அதைவிட முக்கியமான விஷயம் தொடராகப் பல பகுதிகளாக எழுதப்பட்டுள்ள இந்நாவல் – நாவலின் பின்பகுதி சற்று துரித கதியில் ஓடுவதாலும், பின் பகுதியில் காணப்படும் அடுக்கடுக்கான தொடர்ந்த சம்பவங்களாலும் இதை அறிய முடியும்* (* நாவலின் பிற்கூற்றாக ஆசிரியர் எழுதும்போது ‘இக்கதை பெரும்பாலும் பலவித மனோசஞ்சலத்தின் மத்தியில் எழுதப்பட்டதாதலால்…’ என்று குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.) – தொடர்பு சிறிதும் சிதையாமலும், தனித்தனிப் பகுதிகள் தன்னளவில் முழுமை பெற்றும், இறுதிவரையிலான அடித்தளத்தின் ஊடுசரம் சிதையாமலும், மொத்தத்தில் நூல் வடிவம் பெறுகையில் ஒரு நாவலின் ஒட்டுமொத்த உருவின் இலக்கணச் சிறப்புடனும் வியக்கத்தக்க முறையில் அமைந்துள்ளது.
இதே காலகட்டத்தில் இதற்குமுன் வெளியான ஸூ.வை.குருஸ்வாமி சர்மாவின் ‘பிரேமகலாவதியம்’ நாவலிலிருந்தும், பின்னர் வெளியான அ.மாதவையாவின் ‘பத்மாவதி சரித்திர’த்திலிருந்தும் இந்நாவல் எப்படி வேறுபட்டும் தனித்தன்மையுடனும் விளங்குகிறது என அறிவது அவசியமாகும். தம் வாழ்நாளில் – இருபத்தியாறு வருடங்கள் - இது தவிர ராஜமய்யர் என்கிற சிவசுப்ரமணிய ஐயர் வேறு நாவல்கள் எதுவும் நமக்குத் தரவில்லை. இதன்பிறகு ஆங்கிலத்தில் ஒரு நாவல் எழுதி பாதிவரை அது வளர்ந்தபோது அவர் காலமானதாகத் தெரிகிறது.
அடிப்படையில் ராஜமய்யர் மென்மையானவர். சிறந்த ரசனையுள்ளவர். கவிதையுள்ளம் நிரம்பியவர். தமிழில் வசன நடையின் முழு வீச்சையும் புரிந்துகொண்டு, புரியவைத்தவர். கம்பனிடத்தில் மனத்தைப் பறிகொடுத்தவர். அவர் தமது மிகப் பிரியமான லட்சுமி என்ற பாத்திரத்தைக் கம்பராமாயணப் பாடல்களை அபாரமாய்ப் பாடுவதாக அமைத்துக் கொள்கிறார். கம்பனையும், மாணிக்கவாசகரையும் மிகுந்த விருப்பமுடன் பல விதங்களில் பல இடங்களில் அவர் பயன்படுத்திக் கொள்கிறார். இந்த ரசனை, அடிப்படையில் நாவலின் பெரிய பலமாக அவருக்குக் கைகொடுத்தது. (படைப்பாளன் – வாசகன் என்ற இரு நிலைகள் உண்மையில் நெருங்கிய தொடர்புடையன. பொதுவாக எழுத்தாளர்கள் எல்லாருமே தங்கள் எழுத்தின் தரத்துக்கும் மேம்பட்ட வாசகர்கள் என்பதையும் இங்கு நினைவு கூர்வோம்.) காட்சியமைப்புகள் மற்றும் சம்பவ வர்ணனைகள் நிறைய இடங்களில் அமைந்துள்ளன.
இந்நாவலில் பாத்திரங்களின் குணச்சித்திர வர்ணனைகளும் சம்பவங்களின் யதார்த்த சித்தரிப்புகளும் ராஜமய்யரின் தனி ஆளுமை கொண்டவை. இவ்விதத்தில் பாத்திரங்களின் வாழ்வியல் கவர்ச்சி வாசகனைப் பெரிதும் ஈர்த்து மறக்க முடியாதபடி கட்டிப்போட்டு விடுகிறது. இந்த ஒரு திறனில் ராஜமய்யர் குருஸ்வாமி சர்மாவையும், மாதவையாவையும் பெரிய அளவில் விஞ்சி நிற்கிறார். தவிரவும் பாத்திரங்களில் எவ்வித அதிதத்தன்மையும் இலட்சிய நோக்கும் முன்னே துருத்தித் தெரியவில்லை. பாத்திரப் படைப்பு ரீதியில் எழுது முன்னரான இந்த சிந்தனையே அந்தக் காலகட்டத்தில் அவரது பெரிய வெற்றியாகும்.
தமது பாத்திரங்களை – குறிப்பாக நாயக நாயகியைச் சித்தரிக்கையில் காவிய நடையிலும் செய்யுளின் சுழிப்புகளுடனும் அற்புத நவிற்சியாய் எழுதுகிறார் குருஸ்வாமி சர்மா. நாயகன் நாயகி கலாவதியை முதன்முதலில் சந்திக்கும் கட்டத்தில் நாயகியைத் தாமே வர்ணித்துத் தோளில் ஏற்றிக்கொண்டு கூத்தாடுகிறார் குருஸ்வாமி சர்மா, அதேபோல நாயகனையும் (பிரேமகலாவதியம், அதிகாரம் 9, பக். 115,116). இது காவிய மரபாக நமக்கு அறிமுகமான விஷயந்தான். ராஜமய்யரின் உத்தி இங்கே புதுமாதிரியாய் உருவாகிறது. தமது பாத்திரங்களின் சிறப்பை விளக்க அவர் மற்ற பாத்திரங்கள் பேசுவதாகக் கோடிகாட்டுகிறார். கமலாம்பாளைப் பற்றியும் முத்துஸ்வாமி ஐயரைப் பற்றியும் வேறு இரு கிழவர்கள் இப்படிப் பேசிக் கொள்கிறார்கள்:
“முத்துஸ்வாமியும் மனிதர்கள் பேரில் அபிமானம், விதரணை இதெல்லாமுடையவன். அவன் சம்சாரம் அதைவிட. நான் போய்விட்டேனானால் ‘மாமா மாமா’ என்று செய்யும் ஆசார உபசாரம் சொல்லி முடியாது. ஊர் யோகக்‌ஷேமம் விசாரிக்கிறதும், எதிராளி நோக்கத்தைக் கண்டு நடக்கிறதும் அவளிடத்தில் நிரம்ப நன்றாயிருக்கும். இரைந்த சொல் கிடையாது…” (ப.9) என்று குணச்சித்திர வர்ணனையாக அமைவதையும் இங்கே கவனிக்க வேண்டும் (லட்சுமி ஸ்ரீனிவாசன் திருமணத்துக்குப் பிறகு இருவருடைய அங்க லாவண்யங்களையும் விவரிக்கிற கட்டம் வந்தாலும் அப்பகுதி முற்றிலும் உரைநடை வீச்சுடன் அமைந்து சிறப்பாய்ப் பொலிகிறது (பக்.75-76)).
இந்த நாவலிலேயே அவருக்குப் பிடித்த பாத்திரங்களான லட்சுமியும் ஸ்ரீனிவாசனும்தான் எத்தனை அற்புதமாகவும் மென்மையாகவும் உலவுகிறார்கள். இவர்களது கணவன் – மனைவி உறவு நிலைகளில்கூட எவ்விதச் சிக்கலையும் ராஜமய்யர் உருவாக்கவில்லை. கமலாம்பாள் – முத்துஸ்வாமி ஐயரின் முதிர்ந்த தாம்பத்தியம் சற்று உணர்வுச் சலனங்களில் ஆட்படுகிறது, கதையின் தேவைப்படியும், முத்துஸ்வாமி ஐயரின் இயல்புப் படியும். லட்சுமி – ஸ்ரீனிவாசனின் இளமைக் காதலோ முற்றிலும் கறையற்ற தூய்மையுடன் விவரிக்கப் பட்டுள்ளது. லட்சுமி பாத்திரத்தையும் ஸ்ரீனிவாசன் மூலமாகவே விளக்கத் தலைப்படுகிறார் ஆசிரியர். தம் அபிமானத்தையும் ஸ்ரீனிவாசனின் அபிமானத்தையும் இப்படியாக ஒரே சமயத்தில் சொல்லிவிட அவருக்கு முடிகிறது. ஸ்ரீனிவாசனும் அவன் நண்பன் சுப்பராயனும் லட்சுமி பற்றி இப்படி உரையாடுகிறார்கள் (பக்.54-55).
ஸ்ரீனிவாசன்: “(சிறு குளத்தில்) ஒரு அகத்தில் ‘தடிவியம்’ போட்டார்களாம். அங்கே ஒரு சிறு பெண் தம்பூர் வைத்துக் கொண்டு பாட்டுப் பாடினாளாம். கேள், கம்பராமாயணம் என்ன, தாயுமான சுவாமி பாடல் என்ன, தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி, கப்பற்பாட்டு, ஜாவளி இப்படி தினுசுக்கு ஐந்தாறு ஜமாய்த்து விட்டாளாம். ஏகக் கூட்டமாம். புருஷர்களும் பெண்களும் அதுவும் கம்பராமாயணம் பாடுகிறபோது – கங்கைப் படலத்து முதற்பாட்டுகள் போல இருக்கிறது – குதிக்காதவர்கள் பாவம். தாயுமானவர் பாடல் பாடுகிறபோது உருகி அழாதவர்கள் பாவமாம். சொல்லுகிறான் சொல்லுகிறான், அதி அற்புதமாக இருக்கிறது. சொல்லுகிறதிலேயே அவனுக்கு (சிறுகுளம் போய் வந்து சொன்ன ஸ்ரீனிவாசனின் நண்பனுக்கு) ஆனந்தம் பொங்குகிறது. அந்தப்பெண்தான் என் அகமுடையாள்.”
சுப்பராயன்: “ஓ அப்படியா! அவ்வளவு பாட்டா? உன் அகமுடையாளா! பத்து வயதுக் குட்டியல்லவோ?”
... என்று மூன்று பக்கம் நீளுகிறது உரையாடல்.
ஸ்ரீனிவாசன் இளைஞன். குழந்தை மனம் மாறாதவன். மென்மையானவன். “எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் சிறு குழந்தையானதினால் உலகத்தை அறியான். பெண்டாட்டி என்றால் ‘பாக்குக் கொடுத்த பாக்கியவதி, புஷ்பம் கொடுத்த புண்ணியவதி, சந்தனம் கொடுத்த சரஸ்வதி’ என்ற இவ்வித எண்ணந் தவிர, வேறொன்றும் அறிய அவனுக்கு வயது போதாது…” (ப.59) என்று அவனைப் பற்றி எழுதுகிறார் ராஜமய்யர்.
அவசரமில்லாத நிதானத்துடன் ‘கமலாம்பாள் சரித்திரம்’ ஆரம்பிக்கிறது. “மதுரை ஜில்லாவில் சிறுகுளம் என்ற ஒரு கிராமம் உண்டு. அந்தக் கிராமத்தின் நடுத்தெருவின் மத்தியில் ‘பெரிய வீடு’ என்ற பெயருள்ள ஒரு வீடு இருந்தது…” என்று துவங்குகிறது. கதையின் நாயகனாகிய முத்துஸ்வாமி ஐயர் தூங்கியெழுந்து உட்கார்ந்து மனைவியுடன் உரையாடும்போது தம் பெண் கல்யாணியின் (லட்சுமி) திருமணப் பேச்சை எடுக்க அவரது தம்பி பையன் மூலம் வாத்தியார் அழைத்து வரப்படுவதுடன் முதல் அத்தியாயம் முடிகிறது. சற்று பெரிய பரந்த விஸ்தாரத்தைக் காட்டி மெதுவாய்க் கதைக்குள் புகுவது ராஜமய்யரின் இயல்பாகவுள்ளது. பின்னால் ஸ்ரீனிவாசன் கல்யாணம் பற்றிச் சொல்ல வரும்போது, பக்கத்துக் கிராமங்களில் இருந்தெல்லாமான மக்களின் வருகை சுவாரஸ்யமாகச் சுட்டப்படுகிறது. மாப்பிள்ளை வீட்டிலிருந்து வண்டிகளிலான இரவுப் பயணம் அற்புதமாய் இன்று வெளியான நாவல் போலச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
“இம்முப்பது வண்டிகளும் விடிந்து பத்து நாழிகைக்குப் பயணம் புறப்பட ஆரம்பித்து, அஸ்தமிக்கப் பத்து நாழிகைக்கு ஊரைவிட்டு நகர்ந்ததையும், அவைகள் இராத்திரி இருட்டில் போகும்போது கிருஷ்ணய்யர் ‘லாந்தரை’க் கையில் பிடித்துக்கொண்டு யார் என்ன சொல்லியும் ‘உங்களுக்குத் தெரியாது’ என்று சொல்லிவிட்டுச் சேவகர்களுடன் வண்டிப் பாதையைப் பார்த்துக்கொண்டு போனதையும், நொடிகள் பார்த்து வண்டிக்காரர்களுக்கு அவர் எச்சரிக்கை கொடுத்ததையும், கள்ள ஊராகிய நகரி என்ற கிராமம் சமீபிக்கவே, ஓரிருண்ட தோப்பின் வழி போகும்போது வெளிச்சங்களையெல்லாம் மறைத்துக் கொண்டு குழந்தைகள் வாயைப் பொத்திக்கொண்டு ‘பேசாதே, பேசாதே’ என்று மெதுவாய் எல்லோரும் பேசியதையும், மரத்துக்கு மரம் கள்ளனிருப்பதாகப் பயந்து வண்டிக்காரர்கள்கூட மாட்டை இரைந்து அதட்டாமல் வண்டியை வேகமாய் விட்டதையும், அவ்வூர் தாண்டிய உடனே ‘ஜோ’ என்று மழை பெய்ததுபோல் எல்லோரும் இரைந்து பேசியதையும், வனதேவதைகள் கோவில்தோறும் எல்லோரும் இறங்கி சேவித்துச் சென்றதையும், மறுநாள் ஒரு பெரிய சோலையில் தங்கிச் சாப்பாடு செய்ததையும்…” (ப.65) சித்தரிப்பில் இடத்துக்கேற்றபடியும் உணர்வுக்கேற்றபடியும் வார்த்தைகளைக் கையாள்கிறார் ராஜமய்யர்.
தமக்கு முன்னே வேதநாயகம் பிள்ளையும், குருஸ்வாமி சர்மாவும் கவனம் செலுத்திய நகைச்சுவை கலந்த நடையை ராஜமய்யரும் தம் தேவைப்படி கையாள்கிறார். ஆனால் குருஸ்வாமி சர்மாவின் நகைச்சுவை கற்பனை சார்ந்து, கதைப்போக்கில் சுவாரஸ்யமூட்டும் அம்சமாய் மட்டுமே பயன்பட்டது. ராஜமய்யரின் நகைச்சுவை தனிச் சிறப்புடையது. பாத்திரங்களின் குணாம்சமாயும் கதையில் யதார்த்தமாயும் அது அமைவது தவிர, முற்றிலும் தமக்குச் சாதகமான ஓர் உத்தி என ராஜமய்யர் இதைப் பயன்படுத்திக் கொள்கிறார்.
பிற்பாடு பல்வேறு அடுத்தடுத்த துன்பங்களைச் சந்திக்கிற முத்துஸ்வாமி ஐயரையும் கமலாம்பாளையும் ஆரம்பத்தில் காட்டும்போதே சற்றே நகைச்சுவை கலந்த அந்நியோன்யத்துடன் அறிமுகம் செய்கிறார் ராஜமய்யர். தாம் அடுத்துக் கொணரவுள்ள கதைச் சிக்கல்களாலும் அவலச்சுவை மிக்க சம்பவங்களாலும் வாசகனை இம்முறையில் அதிகம் கவரலாம் என அவர் முன்பே கணித்துவிட்டார். அத்தோடு ஆடுசாபட்டி அம்மையப்ப பிள்ளை முற்றிலும் நகைச்சுவை கலந்த பாத்திரம். சமகால விமர்சனப் பார்வையை நல்ல ஆளுமையுடன் அம்மையப்ப பிள்ளை மூலம் முன்வைக்கிறார் ராஜமய்யர். இது தவிர முத்துஸ்வாமி ஐயரின் தயாள குணத்தை விளக்கவும், பின்னால் கதையின் இறுக்கத்தில் நாவல் துரிதமும் அவலமுமாய் உருவெடுக்கும்போது வாசகனை மீண்டும் சமநிலைப் படுத்தவும், உணர்வுகளை மீறிய நிலையில் சம்பவங்களைப் புரிந்துகொள்ளவும் வைக்க, இடையே ஓர் அத்தியாயத்தில் (31) அம்மையப்ப பிள்ளையைக் கொண்டுவந்து கதையின் போக்கோடு பிணைப்பதும் நாவல் பற்றிய ராஜமய்யரின் ஞானமும் ஆளுமையும் கலந்த மேதைமையைப் புலப்படுத்தும். நாவல் என்ற வடிவமே அப்போது அறிமுகம், சரிவர அறிமுகம் ஆகாத காலத்தின் சாதனை அல்லவா இது?
இதேபோலவே நல்ல வசீகரத்துடன் வளர்ந்துவரும் ஸ்ரீனிவாசனின் திருமண வைபவங்களில் ’பாப்பா பட்டி யகத்து வெட்டரிவாள்’, ’குப்பிப் பாட்டியின் அபசகுனம்’ போன்ற ஊடே சீறி உரத்து ஒலிக்கும் வசைமொழிகள் (அத்தியாயம் 9, ப.66. முகூர்த்தம் ஆனபிறகு ஆசீர்வாதத்துக்கு எத்தனமாய் எல்லோரும் வந்திருக்கும் தருணத்தில் திடீரென்று, “ஐயோ ஐயோ ஐயோ! நீ நாசமாய்ப் போக, நீ கரியாகப் போக, உன் அப்பன், ஆத்தாள், மாமன், மச்சினன், பிள்ளை, பேரன், பேத்தி, அத்தான், அம்மாஞ்சி (அம்மான்சேய்) எல்லோரும் பூண்டோட நாசமாய்ப் போக! ஐயையோ ஐயையோ!” என்றபடி ஓர் பெரிய கூக்குரல் உண்டாக, எல்லோரும் திடுக்கிட்டு வெளியே ஓடினார்கள். (ஸ்ரீனிவாசன் பாத்திரம் ஆசிரியரின் பிரியத்தோடு உருவானது. எனவேதான் ‘முகூர்த்தம் ஆனபிறகு’ இந்த சகுனத்தடையை ஏற்படுத்துவதாக யூகிக்கலாம்.) அற்புதமான சித்திரங்களாகும்.
காலத்தால் இதற்கு முந்தைய, ஸூவை. குருஸ்வாமி சர்மாவின் ‘பிரேமகலாவதியம்’ பல விதங்களில் சிறப்பு வாய்ந்த நாவலாகும். தமிழின் ஆரம்ப நாவலாசிரியர்கள் எல்லோருமே ஓரளவு தனித்தன்மை வாய்ந்தவர்களாய் இருந்ததும் இங்கே கவனங் கொள்ளத்தக்க நல்ல விஷயம். எல்லோருமே மகிழ்வூட்டலும் அறிவூட்டலுமே நாவலின் தேவை என்கிற முடிவுடன் இயங்குகின்றனர். பெண்களைப் பற்றிய பல மோசமான பழமை பாராட்டும் மதிப்பீடுகளை முன்வைக்கிற குருஸ்வாமி சர்மா, பெண் கல்வியை ஆதரித்துப் போற்றுகிறார். கல்வி, ஆசிரியரின் இலக்கணம், பள்ளிகளின் இலட்சணம், கல்வியின் தரம், நமக்கு அவசியமான தேசாபிமானம், மத அபிமானம், மொழியபிமானம் என அவ்வப்போது உரையாடல் வடிவிலோ ஆசிரியர் கூற்றாகவோ தயங்காமல் இடைப்புகுந்து உபதேசிக்கிறார். (கதைக்களமாய் மன்னராட்சிக் காலத்தை எடுத்துக்கொண்டு தேச, மத, மொழியபிமான தற்காலப் பிரச்சினைகளை குருஸ்வாமி சர்மா பொருந்தாமல் பேசுகிறார்.) அ.மாதவையாவும் இதேபோலத் தம் கருத்துகளைத் தனி நீண்ட பத்திகளாய்த் தரத் தயங்குவதில்லை. இதனால் நாவலின் கதையோட்டமும் அது சார்ந்த சிந்தனையோட்டமும் தடைப்படுகின்றன. நாவலில் பிரச்சார தொனியின்றி கருத்துக்களை முன்வைப்பதை ராஜமய்யர் அறிந்திருக்கிறார். குருஸ்வாமி சர்மா தம் நாயகனைக் கொண்டு நாயகிக்குக் கல்வி பயிற்றுவிக்கிறார். அ.மாதவையாவும் இப்படியே. ஆனால் ராஜமய்யரோ தம் இரு முக்கியப் பாத்திரங்களை – லட்சுமியையும் கமலாம்பாளையும் – கல்வியறிவு நிரம்பியவர்களாகவே, சங்கீதமும் இலக்கியமும் (கம்பராமாயணமும்) பரிச்சயமுள்ளவர்களகவே படைக்கிறார். இது தற்செயல் அல்ல. ஏனெனில் அரைக்கல்வி யறிந்த பொன்னம்மாளும், கல்வியறிவற்ற பிற ‘வம்பர்மகா சபை’யின் பெண்களும் மோசமாகவும் கொடிய செயல்கள் புரிகிறவர்களாகவும் உருவாக்கப் பட்டிருக்கிறார்கள். கதையமைப்புப் படி பின்னால் முத்துஸ்வாமி ஐயர் தம் மனைவி கமலாம்பாளின் நடத்தையில் சந்தேகம் கொண்டு (அத்தியாயம் 24) தற்கொளை முயற்சி செய்கிறார். இதனை யதார்த்தமாய்ச் சொல்கிற பிரயத்தனத்தில் ஆறாம் அத்தியாயத்திலேயே முத்துஸ்வாமி ஐயரின் இயல்பாக, பெண்களைப் பற்றிய முத்துஸ்வாமி ஐயரின் கருத்துகளாக “பெண்களுக்கே கலகம்தான் தொழில்” என்றும், “… இப்படித்தான் கோளும் புரளியும் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்,” என்றும் ஐயர் கமலாம்பாளுடன் கோபப்படுவதாக உரையாடல் அமைக்கப்பட்டுள்ளது (ப.32). இதனோடுகூடவே முத்துஸ்வாமி ஐயரின் பெண்களைப் பெருமை பாராட்டாத இயல்பினையும் கூறுகிறார் ஆசிரியர். “பெண்களே கெட்டவர்கள் என்பது அவர் (முத்துஸ்வாமி ஐயர்) அருமையாகப் பாராட்டி வந்த அபிப்பிராயங்களில் ஒன்று.” (ப.33)
இதனால் தம் கதைப் பின்னலை இப்படி இறுக்கமாயும் யதார்த்த பூர்வமாயும், தருக்க முறைப்படியும் பின்னால் அமைத்துக்கொள்கிற ராஜமய்யரின் ஆழ்ந்த கவனம் பெரிதும் மதிக்கத் தக்கதா யிருக்கிறது. தொடராக அநேக பகுதிகளாக எழுதப்பட்ட போதிலும் இந்த சிந்தனை நேர்த்தி ராஜமய்யரின் பலம். அவரை இலக்கிய ஆளுமையுடன் அது அடையாளஞ் சொல்லுகிறது. இந்த இடத்தில் பெண்களைப் பற்றிய தம் அபிப்பிராயங்களாக (மேற்கூறிய ‘கெட்டவர்கள்’) அதே விஷயத்தைச் சொல்லாததையும் கவனிக்க வேண்டும். மாதவையாவும், குருஸ்வாமி சர்மாவும் ‘கொள்கை விளக்க’க் கதைகளை எழுதினார்கள். உத்திகள் என்று பூடகமாய்ச் சொல்வதை அவர்கள் விரும்பவில்லை. அதை அவர்களின் இயல்பாகவே கொள்ளவேண்டும். ராஜமய்யரின் உத்திரீதியான ஞானமே நமது இப்போதைய கவனமாகும்.
ஒரு வேடிக்கையும் நாம் காண முடிகிறது. ராஜமய்யரும், மாதவையாவும் ஒரே கல்லூரியில் (பிரசிடென்சி, சென்னை) படித்தவர்கள். ஒரே காலம் தான். ஒருவரை மற்றவர் இலக்ககிய ருசி அளவில் அறிந்தவராய்த் தான் இருப்பார்கள். கமலாம்பாள் சரித்திர முன்னுரையில ராஜமய்யர், தாமே முதலாவதாக நாவல் என்கிற வகைமையைக் கைக்கொள்வதாகக் குறிப்பு தருகிறார். மாதவையா நாவல் காலத்தால் பிந்தியது. ஆனால் மாதவையா தனக்கு முன்னால் ராஜமய்யர் ஒரு நாவல் எழுதியதைக் குறிப்பிடவே இல்லை. தன் நாவலே முதலாவது என்பது போல அவர் பதிவு செய்கிறார்.
அதேபோலவே படிக்கிற காலத்திலேயே ‘இளமை மணம்’ தவறு என்று குருஸ்வாமி சர்மாவும் (கல்யாணம் செய்ய வேண்டிய முறைமை அடியோடு தப்பிப் போய்ச் சிறுவயதிலேயே படிப்பாவதின் முன் செய்வதும், அதனால் சிறுவர்கள் கெடுவதுமாயிருக்கிறது (பிரேமகலாவதியம், ப.161)) மாதவையாவும் (இல்லறத்தில் அதிக ஈடுபாடு கொண்டதால் கோபாலன் தேர்வில் தோற்றுப் போவதாக மாதவையா ‘பத்மாவதி சரித்திரத்’தின் கதையையே அமைத்துக் கொள்கிறார்.) வலியுறுத்துகிறார்கள். இதை ராஜமய்யர் ஏற்றுக் கொள்ளவில்லை. இளமை மணத்தை அவர் ஆதரிக்கிறார். ஸ்ரீனிவாசன் – லட்சுமியின் ஐந்து நாள் கல்யாணத்தையும் வைபவ ரீதியாய் மிகுந்த ஆர்வத்துடன் விஸ்தரித்து விவரிக்கிறார் அவர். அதுவும் காணாமல், பின்பகுதியில், ‘நமக்குள் தற்காலத்தில் சில சிறுவர்கள் ஸ்திரீகள் இருபது வயதுக்கு மேற்பட்டு மணம் செய்தால்தான் புருஷனுடன் சுகித்து வாழக்கூடும் என்று நினைக்கிறார்கள். ஸ்ரீனிவாசன் – லட்சுமி இவர்களுடைய நேசத்தை அறிந்த எனக்கு அப்படித் தோன்றவில்லை’ (ப.155) என்று தனியாகவே, வெளிப்படையாகவே குறிப்பிடுகிறார்.
இந்நாவலுக்கு ‘கமலாம்பாள் சரித்திரம்’ என்ற தலைப்பு பொருத்தம் தானா என்பது தவிர, தமக்கு முந்தைய நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திரத்’தைப் பார்த்து இத்தலைப்பு வைத்தாரா என்பதும் யோசிப்பது தவிர, கதை முழுக்க முத்துஸ்வாமி ஐயரை மையமிட்டே இறுதிவரை ஓடியும், பெண்கள் மேலும், தமது இரு (கமலாம்பாள், லட்சுமி) பெண் பாத்திரங்கள் மீதான அபிமானத்தினாலும் இத்தலைப்பை அவர் சூட்டியிருக்கலாம் என்று படுகிறது. கதையமைப்புப் பிரகாரம் ‘அநியாய அல்லது ஆபத்துக்கிடமான அபவாதமான’ மனைவியை முத்துஸ்வாமி ஐயர் சந்தேகிப்பதை ராஜமய்யர் முக்கியமான திருப்பமாக அமைத்துக் கொண்டாரெனினும், அவரது சிந்தனை வீர்யமும் ஞானமும் இந்த ‘சந்தேகத்தை’ அவ்வளவாக மதிக்கவில்லை. இதனை அவரது மேதைமையின் உச்சமாக நாம், அந்தக் காலகட்டத்தை வைத்துப் பாராட்ட வேண்டும். கதையின் மையம் எது என்பதை அவர் தெளிவாகவே வரையறுத்துக் கொண்டிருக்கிறார். பிற்பாடு பின்பகுதிகளில் இந்த ‘சந்தேகத்தை’ அவர் வளர்த்தவுமில்லை; ஓரிடத்திலேனும் பிரஸ்தாபிக்கவுமில்லை. தலைப்பினையும் அதனாலேயே ‘அபவாதம்’ என்பதைக் ’கமலாம்பாள் சரித்திரமா’ய் அவர் மாற்றியிருக்கக்கூடும்.
குருஸ்வாமி சர்மா பாத்திரங்களை – அதன் குணாம்சங்களை விளக்க ஓர் உத்தியைக் கொண்டாடினார். பாத்திரங்களின் இயல்புப்படி அவற்றுக்குப் பெயர் வைத்தார். பிரேமநாதன், கொடுமுகி, ஆத்திரேயன், தயாநாதர் – இப்படி. இந்த உத்தியின் யதார்த்தமற்ற செயற்கைத்தன்மை ராஜமய்யரிடம் வேறு பாணியில் பரிணமிக்கிறது. நம் வழக்கப்படி பாட்டியின் பெயர் (லட்சுமி) வைக்கப்பட்டவள் கல்யாணி என்று அழைக்கப்படுவது தவிர, பிற பாத்திரங்களுக்கு நகைச்சுவை அம்சமாய் ராஜமய்யர் எள்ளல் தொனியில் பட்டப் பெயர்கள் வைக்கிறார். பாப்பாபட்டியகத்து வெட்டரிவாள், வம்பர் மஹாசபை அக்கிராசனாதிபதி, சம்சார ஸ்திரீகள், தமிழ் வித்துவான் ஆடுசாபட்டி அம்மையப்ப பிள்ளை, தெனாலிராமன், லேடி, பெருந்தீனி வைத்தி, மாம்பழம், ஷோக் சங்கரன் – இப்படி. இதனால் பாத்திரங்கள் வாசகர்களால் ஒரு நெருக்கத்துடன் அடையாளங் காணப்படுகிறார்கள். அ.மாதவையாவும் இதை ரசித்து பள்ளி மாணவர்களைப் பட்டப்பேர் வைக்கும் பழக்கமுடையவர்களாய்ச் சித்தரிக்கிறார் (குண்டுமணி நாரதர், சிச்சீ நாணு – பத்மாவதி சரித்திரம். பக்.39, 40). அவரே பிற்பாடு சங்கு என்ற பாத்திரத்துக்கு அவுட்டுப்புலி டால் – ஜோடி ஸபாஷ் சங்கரையர் என்ற பட்டமளிக்கிறார்.
அதேபோலவே சுப்ரமண்ய ஐயரை ஏமாற்றி, அவருக்கு வசிய மருந்து தரப் பொன்னம்மாள் வரும்போது மெட்டிகள் ‘பராக் எச்சரிக்கை பராக் எச்சரிக்கை’ என்று கட்டியங்கூறுவதாய் ராஜமய்யர் (ப.90) வர்ணிக்கிறார். இதே பாணியை மாதவையாவும் பத்மாவதியின் கரிக்கிட்டுவுடனான திருமணத்துக்கு முன்பாக (அது நடக்கவில்லை. கரிக்கிட்டு கதைப்படி திருமணத்துக்கு முன் செத்துப்போனான்.) அலங்காரங்களைச் சொல்லி அவள், நடக்கையில் சில நகைகள் ’ஐயோ ஐயோ’ என்றும், சில நகைகள் ‘பாவம் பாவம்’ என்றும் முறையிடுவதாய் வர்ணிப்பதும் (பத்மாவதி சரித்திரம், அத்தியாயம் 10, ப.59) குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
இது நிற்க, வேதநாயகம் பிள்ளையும், மாதவையாவும் ‘சரித்திரம்’ என்று கூறி முனைவர் சுயவரலாறு போலவும், பின்னவர் வாழ்க்கை வரலாறு போலவும் தம் நாவலைப் படைக்கலாயினர். மாதவையா அது நடந்த கதை என நிறுவவும் பிரயத்தனிக்கிறார் (அந்த வருஷம் ஆடி மாதம் பன்னிரண்டாந்தேதி திங்கட்கிழமையன்றிரவு, திருநெல்வேலி வடக்குக் கோபுர வாயிலில் நரசிங்கராயர் நாடகக் கொட்டகை தீப்பட்டதும், அதிலுண்டான உயிர்ச் சேதமும் உலகமறிந்த விஷயமே… (அத்தியாயம் 28,ப.138).
இதில் ராஜமய்யர், கமலாம்பாள் இராமனை அடைவதையும், முத்துஸ்வாமி ஐயர் சிவனைச் சென்றடைவதையும் கவனித்தால் சைவர் வைஷ்ணவர்களின் தேவையற்ற விரோதம் நீக்கி ஒற்றுமையை வலியுறுத்த ஆசிரியர் முயன்றதாகவும் கொள்ளலாம்.
அ.மாதவையா பெண் கல்வியை அநேகமாகத் தமது எல்லாப் படைப்புகளிலும் வலியுறுத்தி வருகிறவர். ‘பத்மாவதி சரித்திர’த்தின் சிறப்பான பகுதிகளில் ஒன்று பத்மாவதி நாராயணனுக்குக் குறைக் கல்வியுடன் தப்பும் தவறுமாய்க் கடிதம் எழுதும் பகுதியாகும். ‘யெந்நோட,அத்தான் நாணு உக்கு னாந்னம்ஷ்காறம் பன்நறேன். இங்கே, னான் சவிக்கமாயிருக் கென்னீயும் அத்தனும் சவிக்கமா யிருக்கேளா.’ (என்னுடைய அத்தான் நாணுவுக்கு நான் நமஸ்காரம் பண்ணுகிறேன். இங்கே நான் செளக்கியமாயிருக்கிறேன் நீயும் அத்தையும் செளக்கியமா யிருக்கிறீர்களா?.. பத்மாவதி சரித்திரம், ப.36)
ரசனைக்குரிய இதே முறைக் கடிதத்தை ராஜமய்யர் மாதவையாவுக்கு முன்பே கையாள்கிறார். ஸ்ரீனிவாசனின் மூன்றாம் நாள் கல்யாணத்தன்று லட்சுமி எழுதியதாய் ஒரு குறும்புப் பெண் தானே எழுதி ஸ்ரீனிவாசனிடம் கொடுக்கிறாள். “…எந்நை இடிக்கச் சொல்லிருக்கோ. இந்நமே அப்படி இடிக்கப்படாது. எல்லா குட்டிகளுக்கும் எதெரிக்க எந்நோடு பேசலாமா, சீ இது எந்ந லெட்சைக் கூத்து-” ப.80)
இப்படித் தமக்கு முன் வந்த நாவலைக் கடந்தும் தம் அடுத்து வந்த நாவலைப் பாதித்தும் ராஜமய்யரின் நாவல் அமைந்துள்ளதை அறியலாம். இளமைப்பருவ விளையாட்டுகள் பற்றியும், கதைப் போக்கிலான ஒரு சம்பவமாய்த் தீவிபத்து ஒன்றினையும் விரிவாய் குருஸ்வாமி சர்மா எழுதுகிறார் (பிரேமகலாவதியம், அதிகாரம் 3, பக்.29-35 மற்றும் (தீ விபத்து வர்ணனை - அதிகாரம் 6, பக்.78,79). ராஜமய்யரின் நாவலிலும், அவசியம் என்று கூறமுடியாமல், ஸ்ரீனிவாசன் ‘பலீன் சடுகுடு’ விளையாடுவதும், (இங்கிலீஷ் படிப்பு வர வர, நம்முடைய விளையாட்டுக்களைக்கூட நாம் மறந்து விட்டோம், ப.121) வைக்கோற்போர் தீப்பற்றி எரிவதும் (ப.95) இடம் பெறுகின்றன. இதேபோல மாதவையாவும் தம் நாவலில் போகிற போக்கில் நாடகக் கொட்டகை தீப்பற்றி எரிந்ததாய்ச் (பத்மாவதி சரித்திரம், அத்தியாயம் 28, ப.138 முதல் பாகம்) சொல்லிச் செல்கிறார்.
குருஸ்வாமி சர்மாவின் ‘பிரேமகலாவதியத்தில்’ ராஜமய்யரைப் பெரிதும் பாதித்தது நரபலியாகவே தோன்றுகிறது. குருஸ்வாமி சர்மா நரபலி பற்றியும் அதன் களமான காளி கோவில் பற்றியும் விரிவாக எழுதியும், தாமே நரபலியைக் கண்டித்தும் குறிப்பிடுகிறார் (பிரேமகலாவதியம் – அதிகாரம் 4, பக்.41-45 மற்றும் அதிகாரம் 8, பக்.111, 112). ராஜமய்யரின் நாவலிலும் நரபலியின் களமான காளி கோவில் பற்றியும் விவரங்கள் இடம் பெறுகின்றன (ப.141).
மேற்கூறியவற்றால் எந்தவொரு எழுத்தாளரையும் நாம் தனியே உயர்த்தியோ விமர்சித்துப் பேசுவதாகவோ கொள்ளல் கூடாது. தம் காலகட்டத்தில் மூவருமே சந்தேகமில்லாமல் சாதனை புரிந்தவர்கள் என்பது தெளிவு. தவிரவும் நாவல் என்கிற முற்றிலும் புதிய அம்சத்தை இவர்கள் கையாண்டு வெற்றி பெற்றதே தனிச் சிறப்பாய்ப் போற்றப்பட வேண்டியதாகும்.
மாயூரம் வேதநாயகம் பிள்ளையும், அ.மாதவையாவும், ராஜமய்யரும் தமது நாவலுக்கு ‘சரித்திரம்’ என தலைப்பு வைத்தபோது, ஸூ.வை. குருஸ்வாமி சர்மா, நாயகன் பிரேமநாதன், நாயகி கலாவதி இணைந்த அளவில் பிரேமகலாவதியம், (பிரேம கலாவதி இசம்) என நாவல் தலைப்பைப் புதிதாக சிந்தித்ததைப் பாராட்டாமல் எப்படி?
‘கமலாம்பாள் சரித்திரம்’ அமைப்பில் மிகுந்த தனித்தன்மை கொண்டது. இன்றுவரையும் (2018 திசம்பர்) கருவினால் இதனோடு பேசக்கூடிய மற்றொரு நாவல் எழுதப்படாததே அதன் சிறப்பாகும். மானுட வாழ்வின் அநேக சோதனைகளைக் கண்டும் கடந்தும் ஆத்மா இறைவனை அடைகிறது. நிலையற்ற அமைதியற்ற மனது அலைந்து திரிந்து இறைவனை அடைந்து அடங்குகிறது. பொறுமையும் அமைதியும் பிரம்மானந்தத்தைத் தருகின்றன. இதை எளிய நடையில் வாசகர் உள்ளங் கொள்ளும் வகையில் முற்றிலும் சமகால வாழ்வின் சிக்கல்களாலும் மெலிதான நகைச்சுவை மற்றும் சுவாரஸ்யமான கதைப்பின்னலாலும் தந்துள்ளார் ராஜமய்யர்.
வம்பர் மஹா சபையின் சுப்புவின் ‘ர’கரம் வராத பேச்சு மகாத்மியம், கல்யாண வீட்டில் ஸ்ரீனிவாசனிடம் ஊர்ப் பெண்டுகள் அடிக்கிற கொட்டம், மாணவர்கள் ஆடுசாபட்டியாரைப் படுத்தும் பாடு, அவரது தமிழ் வித்வத்துவம், பேயாண்டித் தேவர் உலா - என்று கதையை எடுத்துப் போகிற நேர்த்தி அருமை, எந்தவொரு பாத்திரமும் சோடைபோகாமல் எதையும் மறக்க முடியாமல் அமைத்த திறம் – ஆகியவை ஆசிரியரின் எழுத்து வன்மைக்குச் சான்றுகள். நிலவையும் கடலையும் ரசித்து மனமொன்றி விவரிக்கிறார் ராஜமய்யர். கடற்கரையில் ஸ்ரீனிவாசனும் லட்சுமியும் இயற்கையின் அற்புதங்களை ஆழ்ந்த உணர்வுடன் பிரஸ்தாபிப்பதை, கதையின் அவலச்சுவை திரண்டு விம்முகையில் இடையில் கொணர்ந்திருப்பதையும் கவனிக்க வேண்டும். ரயில் விபத்தின் சித்தரிப்பும், முன்பு சொன்ன இருட்டு வழி வண்டிப் பயணம் போலவே நல்ல வீச்சுடன் கைவந்துள்ளது.
‘கமலாம்பாள் சரித்திர’த்தில் பல நிகழ்ச்சிப் போக்குகளை ஆசிரியர் முன்பே கோடிகாட்டுவதைக் குறிப்பிட்டாக வேண்டும். ‘ஆருத்ரா தரிசன’ நாளன்று தம் குழந்தையைப் பறி கொடுத்த முத்துஸ்வாமி ஐயர், மூன்று ஆண்டுகளுக்குப் பின் தம் மனைவியின் நடத்தையை சந்தேகித்து தற்கொலை செய்துகொள்ள முயல்கிற நாளும் சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசன நாளாக ஆசிரியர் கொண்டுவருகிறார். இதன் மூலம் குழந்தை தொலைந்த பழைய நாளை வாசகர் மனத்தில் நிழலாடச் செய்கிற உத்தி சிறப்பானதாகும். அதேபோல முத்துஸ்வாமி ஐயர் தம் குழந்தை நடராஜனைக் கொஞ்சுகையில், இது நிலைக்குமா - என ஐயுறுவதும், பிற்காலத்தில் பிரிகிற முத்துஸ்வாமி ஐயர் துறவறம் பூணுவதாகக் கமலாம்பாள் கனவு காண்பதும், கதையின் கவர்ச்சியைத் தூண்டுகின்றன (டாக்டர் இரா.தண்டாயுதம், சமூக நாவல்கள், பக்.177,178).
கோள் சொல்ல வருகிற சுப்பு நெருப்புக் கேட்டு வருவதும், நாயும் திருடனும் சிலேடையைக் கேட்டுக்கொண்டே ஆண்டியொருவன் அம்மையப்ப பிள்ளையின் பணத்தை உருவியபடி “நாய் தன்பாட்டில் குலைக்கிறது. திருடனும் தன்பாட்டில் திருடுகிறான்” என்று ஓடுவதும் நயமான பகுதிகள்.
‘கமலாம்பாள் சரித்திரம்’ முற்பகுதி நாவல், பிற்பாதி கனவு – என்கிறார் புதுமைப்பித்தன். அதை அடியொற்றியே கைலாசபதியும் “ஜீவப் பிரம்ம ஐக்கியம் ஒன்றே நாவலின் நோக்கம் என்பதையும், அதை வாழ்வு மூலம் சொல்வதில் ராஜமய்யர் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதையும் நம்மால் உணர முடிகிறது. தவிரவும் நாவலாசிரியனை இப்படி எழுது என்று முன்மொழிவதும் சரியாகாது அல்லவா? ஒரு பிரத்யேக வாழ்வனுபவத்தை அறியத் தருகிறபோது அதனை முற்றிலும் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டியது வாசகனின் கடமையும் கட்டாயமும் ஆகும்.
முற்பகுதியில் சீராய்ச் செல்கிற நாவல் சுருதி பிசகி சற்று துரிதமாய் உச்சத்தை எட்டி, பின் உணர்வின் கூர்த்தன்மையுடன் முடிகிறது. அடுக்கடுக்கான துயர சம்பவங்கள் பின்பகுதியில் கதைத் தன்மையுடன் திருப்பங்களாய் நிகழ்ந்தாலும், முடிவென்ற தெளிவை நெருங்குகிற ஆசிரியரின் பரவசமும், ஞானமும், தீவிரமும், எழுத்து வன்மையும் பிரமிக்கத்தக்க அளவில் கைகொடுத்து உதவுகின்றன. அந்த உணர்வுச் சுழல் சாதாரண யதார்த்த வட்டத்திலிருந்து, கூரிய ஓர் ஆன்மிக வட்டத்துக்குள் வாசகனை இழுக்கிறது. இதை ஆசிரியர் நன்கு உணர்ந்து கொண்டே நல்ல நிதானத்துடன் மேற்கொண்டு கதையைத் துடுப்பு போட்டுச் செல்கிறார். குரு சிஷ்ய மனோபாவத்தை விளக்கும் ஓர் அத்தியாயத்தில் (10) ‘கதையை மட்டும் கவனிப்பவருக்கு இது அத்தியாவசியமுமன்று’ என்று தெளிவாய் அடிக்குறிப்பும் தருகிறார்.
‘கமலாம்பாள் சரித்திரத்’தைப் பற்றி எத்தனையோ பார்வைகள் வெளியாகி விட்டன. தமிழ் நாவல் இலக்கிய வரலாறு எழுத வரும், அறிய வரும் எவருமே ‘கமலாம்பா’ளை விட்டுவிட முடியாது.
நமது கணிப்பில் ராஜமய்யர் கவிதையுள்ளம் கொண்டவர். வாழ்வியலின் கூறுகளைச் சற்று உயர்த்தி, தம் சிந்தனையின் கவர்ச்சியேற்றியே அவர் கூறுகிறார். முதல் பகுதியில் கமலாம்பாள் - முத்துஸ்வாமி ஐயர் தம்பதியின் உரையாடலிலிருந்து – வம்பர் மகா சபை –வித்துவான் அம்மையப்ப பிள்ளை - பேயாண்டித்தேவன் – நரபலி - கடலைப் பார்த்துக் கவிதையாய் நெகிழ்தல் என்று கதையினைத் தம் பார்வை எல்லைக்குள்ளேயே இயக்கிச் செல்கிறார். அதனாலேயே பாத்திரங்களின் அழியாத்தன்மையும் வாசகனிடம் ஆசிரியரின் எழுத்து பற்றிய பிரமிப்பும் ஏற்படுகின்றன. ஆச்சரியகரமான விஷயம் என்னவென்றால் இதை முழுக்க உணர்ந்தே அவர் செய்கிறார். பின்பகுதியில் வரும் அடுக்கடுக்கான திருப்பங்களும் அவரது எழுத்தின் கவர்ச்சியை நம்பியே வரையப் பட்டவையாக அறியலாம்.
தவிரவும் நாவலுக்குப் புதிய எளிய வாசகர்களைத் தம் நோக்கத்துக்கு வெற்றிகரமாகக் கொண்டுவர இந்த சுவாரஸ்யமாய்க் கதை சொல்லும் அம்சத்தைக் கையாண்டார் ராஜமய்யர் எனலாம். யதார்த்தச் சித்தரிப்புகள் வளர வளர, இன்னும் சொல்ல வேண்டிய கதையின் தத்துவச் சரடுக்குள் நழையவே இல்லை, என அவர் கதைத் தடத்தை ஆன்மிகத்துக்கு நகர்த்திச் செல்ல முயன்றிருக்கவும் கூடும். நாவல் இன்னும் நூறு பக்க அளவில் கூட அவரால் வளர்த்தெடுத்திருக்க முடியும், என்ற நிலையில் வலைவீச்சை அவர் சுருக்க நேர்ந்திருக்கலாம். நாவலின் வழி தர்மத்தை வலியுறுத்துவதில் அவர் அக்கறை காட்டினார், எனலாம். கொடிய பாத்திரங்கள் எல்லாமே கடைசியில் அல்லலுறுகின்றன. அல்லது செத்துப் போகின்றன. வைத்தியநாதன் - (அத்தியாயங்கள் 15, 16, 17-களில் வருகிறான்) என்கிற துலுக்க பாஷை பேசுகிற வில்லன் பாத்திரத்தைப் பின்னால் அப்படியே விட்டுவிடுகிறார். பேயாண்டித் தேவனோ திருந்தி நல்வாழ்வு வாழ்கிறான். இதெல்லாம் தம் எளிய வாசகர்களைத் திருப்தி செய்வதற்காக அவர் கொண்டு வந்திருக்கலாம். தற்கால இலக்கியங்கள் ராஜமய்யரை விட்டு இரு நிலைகளில் விலகுகின்றன. முதலாவது, பாத்திரங்களின் வாழ்வும் திருப்பங்களும் முடிவுகளும் பாத்திரங்களையே சார்ந்தவை போன்ற நம்பகத் தன்மையுடன் ஆசிரியர்களால் படைக்கப் படுகின்றன. மற்றது, இந்த அறிவுரீதியாய்ப் படைப்பாளனின் ஆளுமை இன்றைய இலக்கியகர்த்தாக்களால் அநேகமாய்ப் பூரணமாய் மறைத்துக் கொள்ளப்படுகிறது. (உதாரணம் பூமணி, சா.கந்தசாமி, அசோகமித்திரனின் படைப்புகள். இவர்களது பாத்திரங்கள் தங்கள் சுய அறிவு மற்றும் சிந்தனை மற்றும் பலவீனங்களை மீறி இயங்க முடியாதவர்கள்.)
தம் அறிவினால் தரும் கவர்ச்சியம்சத்தையும் மீறி யதார்த்தமாய் ஸ்ரீனிவாசன் லட்சுமி இருவரையும் பூரண உள்ளன்போடு படைத்துள்ளார் ராஜமய்யர். குழந்தையுள்ளத்தை அவர் விரும்புகிறார் என்பதை மேலும் பல இடங்களில் கவனிக்க முடிகிறது. அன்றியும் ஸ்ரீனிவாசன் என்பது சிறுவயது ராஜமய்யர்தானோ என்னவோ?... இது இப்படியிருக்க, கதையில் யதார்த்தமாய்ச் சில கட்டங்களை அமைக்காமலில்லை அவர். முத்துஸ்வாமி ஐயர் அடிக்கடி (கடைசி வரை) உரையாடலின்போது ‘கழுதை’ என்ற சொல்லைப் பிரயோகிப்பதும், ஸ்ரீனிவாசன் திருமணத்துக்கான இரவுப் பயணமும், திருமண வைபவங்களும், தம் நாவல் நடக்கிற மதுரை ஜில்லாவின் தனிப்பழக்கமான ஜல்லிக்கட்டும், பிற்பாடான ரயில் விபத்தும் நல்ல நடப்பியல் சித்திரங்களே.
பி.எஸ்.ராமையாவின் அம்மா சரியாகவே சொல்லிவிட்டாள்.
டாக்டர் இரா. மோகன் தொகுத்து மணிவாசகர் நூலகம் வெளியிட்ட
‘தமிழ் நாவல் வளர்ச்சி’ திரட்டில் எனது கட்டுரை.
storysankar@gmail.com
*1 *7899 87842


Friday, December 21, 2018


21
இனி நம் முறை
எஸ். சங்கரநாராயணன்
வர்கள் இன்னும் நண்பர்களாகத் தான் இருக்கிறார்கள். என்றாலும் திடீரென்று எதோ அவர்களுக்கு ஆகிப் போகிறது. அல்லது நமக்கு திடீரென்று எதோ ஆகிவிட்டதாக அவர்கள் நினைக்கவும் செய்யலாம். பெரும்பாலும் எளிமையாய் இருந்து நாம் ஏமாந்த சந்தர்ப்பங்கள் அதிகம். எந்தக் காரணமும் இல்லாமல் நமக்கு எதிராக நாம் அறியாமல் வேலைகள் நடக்கின்றன. இதை ஊழ் என்பதா? திடுதிப்பென்று வானம் மூடி மழை கொட்டத் தொடங்கி விடுகிறது. முன்னரே எதிர்பார்த்திருந்தால் குடையாவது எடுத்துக் கொண்டு வந்திருக்கலாம். நம்மைச் சுற்றி நம்மைப் பற்றி வேறெதோ நடந்திருக்கிறது, என பின்னாளில் அறிகிற போது, நாம் எவ்வளவு வெள்ளந்தியாக இருந்திருக்கிறோம் என வெட்கமாய், வருத்தமாய் இருக்கிறது.
சந்திரசேகரை முட்டாளாக்கி வி.பி.சிங் பிரதமராகப் பதறி யேற்கவில்லயா? தேர்தல் வெற்றிக்குப் பின் (ஜனதாதளம்) வி.பி.சிங் தன் கட்சி சார்பில் பிரதமராக விரும்பினார். அப்போது கட்சிக்குள் பிரதமர் வேட்பாளர் என மேலும் இருவர் போட்டியிட ஆர்வம் காட்டினர். ஒருவர் தேவிலால். மற்றவர் சந்திரசேகர். இருவரையும் எப்படிச் சமாளிப்பது, என வி.பி.சிங் ஒரு திட்டம் தீட்டினார்.
தேவிலாலுக்கு துணைப் பிரதமர் பதவி தர அவரே தேவிலாலிடம் பேரம் பேசி ஒத்துக்கொள்ள வைத்தார். சந்திரசேகரிடம் இப்படிப் பேரம் பேச முடியாது. அதனால் ஒரு இரகசிய ஏற்பாடு செய்தார் வி.பி.சிங். மூவருமாய்க் கட்சிக்குள் பிரதமர் வேட்பாளர் தேர்தலுக்கு முன் பேசிக் கொண்டார்கள். கட்சி எம்.பி.க்கள் யாரைத் தேர்வு செய்கிறார்களோ அதன்படி கட்டுப்படலாம், என பொது முடிவு எடுத்தார்கள். பிரதமர் வேட்பாளருக்கு வி.பி.சிங்கை சந்திரசேகர் முன்மொழிய வேண்டும். சந்திரசேகரை பிரதம வேட்பாளராக வி.பி.சிங் முன்மொழிவார். பின் தேர்தல் நடக்கும்.
இந்த வலையில் சந்திரசேகர் வீழ்ந்தார். அவர் தன்னை முன்மொழிய வேறு யாரிடமும் கேட்டுக்கொள்ளவில்லை. கூட்டம் துவங்கியதும் வி.பி.சிங் தேவிலாலைத் துணைப் பிரதமராக முன்மொழிந்தார். மாற்றுக் கருத்து இல்லாமல் அந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டது. இனி பிரதமருக்கான தேர்வு. சந்திரசேகர் எழுந்து வி.பி.சிங் பெயரை முன்மொழிந்தார். அதற்கும் மறுப்பு கிளம்பவில்லை. இப்போது வி.பி.சிங் சந்திரசேகர் பெயரை, போட்டி வேட்பாளராக அறிவிக்காமல் மௌனம் காத்தார். போட்டியின்றி வி.பி.சிங் தேர்வு பெற்றதாக அறிவிக்கப் பட்டது!
என்ன மோசடி நடந்தது என்றே தெரியாமல் திகைத்துப் போய்விட்டார் சந்திரசேகர். காமெரா அவரை நெருக்கத்தில், அவரது உணர்வுகளை உலகம் பூராவுக்கும் காட்டியது. அப்போது அவர் சொன்ன வார்த்தைகளை நான் என் வாழ்நாள் முழுதும் மறக்கவே முடியாது. சந்திரசேகர் சொன்னார்.
“ஏமாறுவதில் என்ன கேவலம் இருக்கிறது. நான் ஒருவரை நம்பியது தவறா? ஆகவே ஏமாறுவது தப்பு இல்லை. ஆனால் ஏமாற்றுவது மோசமானது.”
காலம் அப்படி ஏமாற்றுப் பேர்வழிகளை, நம்பிக்கை துரோகிகளை அவ்வப்போது நமக்கு காட்டிக்கொண்டு தான் இருக்கிறது. அவர்கள் மாற மாட்டார்கள். முடிந்தால் நாம் தான் மாற வேண்டும். முடியுமா?
முன்பொரு பதிவில் கண்ணன் மகேஷ் பற்றிச் சொல்லவில்லயா, சும்மா இருந்தாலும் கிட்டவந்து குடிகார மோதல்கள்… லாரி தெருத் தண்ணியை வாரியடித்து உடையை நனைத்துவிட்டுப் போகிறது.
வெளிப்படையான வாழ்க்கை யாருக்குமே ஒத்துவராதோ என்னவோ. அப்படி அமையாதோ, என ஆதங்கப் படுவதைத் தவிர, வருத்தப்படுவதைத் தவிர வேறு போக்கு இல்லை. நாம் மாறிக் கொள்ளவும் முடியாது.
இப்படி நடந்து விட்டதைப் பின்னாளில் அறிகிற போது அந்த நிகழ்வுகளோடு அதைத் தொடரும் சந்தர்ப்பங்களில் ஒரு சுவாரஸ்ய ரகசியத்துடன் நாம் விளையாட ஆரம்பிக்கிறோம். பின் விளைவுகளின் வேடிக்கை ரசமானது. உன் கபட முகம் எனக்குத் தெரிந்து விட்டது, என நாம் சொல்லாமல் சொல்லி ஆடும் ஆடுபுலி ஆட்டம். அதில் சில சமயம் நாம் ஆடு. அது முதல் கட்டம். அவர்கள் பசுத்தோல் போர்த்திய புலி. பிறகு, அதன் அடுத்த கட்டம்… நாம் புலி. புலியாக மாறிய பசு. இப்போது நம் முறை.
இனி நம் முறை.
ஒரு பாம்புக்கு முனிவர், யாரையும் கடித்து விடாதே, அது பாவம், என்று அறிவுரை வழங்கப் போக, அது கடிக்காது என்று தெரிந்ததும் ஆளாளுக்கு அதைக் கல்லால் அடித்துச் சிரித்தார்களாம். அது உடலெங்கும் ரணகளமாக முனிவரிடம் வந்தபோது, அவர் அதனிடம், கடிக்காதே என்றுதான் சொன்னேன், சீறாதே என்று சொன்னேனா, என்று கேட்டதாக நம்மில் கதை உண்டு.
நானும் சீறி யிருக்கிறேன்!
சரித்திரக் கதைகள் என்று அவர் எதோ எழுதுகிறார். அவரை நான் கிண்டல் செய்திருக்கக் கூடாது. அது நோக்கமும் அல்ல. என் இயல்பு அது. நமது எளிமையும் முக பாவமும் சிறு அசைவுகளுமே நம்மைக் காட்டிக் கொடுத்து விடுகின்றன. அவற்றை மறைத்துப் பேசுதல் நமக்கு வழக்கமும் இல்லை. எனக்கு ஒரு தீவிரமான கருத்து உண்டு. முழுக்கவே எழுதி அதனால் வரும் வருமானத்தில் சாப்பிடுகிறவர்களை பொதுவெளியில் நான் விமரிசித்துவிட மாட்டேன். அது அவர்கள் தொழிலை பாதிக்கும் என்பது என் கருத்து. நம்மால் அப்படி நிகழ்ந்துவிடக் கூடாது, என்பதில் நான் கவனமாய்த்தான் இருக்கிறேன். இவரும் அப்படி ஒரு நபர் தான். இவரையே பாவம் என்கிறவன் நான். இவருக்குப் பத்திரிகை கொடுத்து வைத்திருந்தவன் மகான் அல்லவா?
அசோகமித்திரன், பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன், பா.ராகவன் இப்படி முழுநேர எழுத்தாளர்கள் என்னை ஆச்சர்யப் படுத்துகிறார்கள். தமிழ்மகன், சுந்தரபுத்தன், கதிர்வேலன்... இப்படிப் பாத்திரிகையாளர்களும் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், இப்ப... என்று நான் ஆரம்பிக்கையில் வேறு பத்திரிகையில் சேர்ந்து விட்டதாகச் சொல்வார்கள். ஒருமாதிரி தத்தளிப்பாகவே வாழ்கிறார்கள். எழுத்து சோறு போடுமா என்பதில் எனக்குத் தயக்கம் உண்டு. நான் இந்த பி.எஸ்.என்.எல் வேலைக்கு வந்ததே, சாப்பாட்டுப் பிரச்னையைத் தீர்த்துக் கொள்ளலாம், எழுத்து எனக்கு ஆதர்சம் என வரித்துக் கொள்ளலாம், என்கிற ஏற்பாட்டுக்குத்தான். அது ஓரளவு வெற்றிகரமாகவே தொடர்கிறது, என்றுதான் சொல்லவேண்டும். வரும் 2019 ஜுலை பணி ஓய்வும் ஆகப் போகிறது. என் முதலாளிக்கு விடுதலை.
எழுதிப் பிழைக்கிறவர்களை நான் அவர்கள் எழுத்தில் குறை கண்டு விமரிசனம் என்கிற கெடுபிடி கொண்டு பார்த்து கருத்திடுவது இல்லை, என்கிற வழக்கம் முன்பு இருந்தது. என்றாலும் பிரமைகள் எனக்கு சகிக்க வொண்ணாத விஷயம். தலைவீக்கம் அவலட்சணம் எனக்கு. நண்பர்கள் முன்னால் பாவனைகள், நடிப்புகள், போலிக் கொண்டாட்டங்கள் தேவையே இல்லை. நட்புக்கு எதிரானவையே அவை. அந்த இருவரையும் நண்பர்களாகக் கருத முடியாது. நடிப்பை நடிப்பென உரித்துக் காட்டா விட்டால் நமக்குத் தலையும் வெடித்து விடுகிறது. இந்த உலகத்தைத் திருத்துவதா நம் வேலை? இல்லை தான். குறைந்த பட்சம் அந்த நபரையாவது திருத்த முடியுமா? அது கூட அல்ல. உன் வேலையை என்னிடம் காட்டாதே, என்றாவது சொல்லாமல் எப்படி என்று தோன்றி விடுகிறது. சீண்டப்படும் போது சீற வேண்டி வந்து விடுகிறது. அதில் பல உத்திகளும் உள்ளன.
சரித்திரக் கதைஞருக்கு முன் வேறொரு சம்பவம் சொல்லி விடலாம். நாம் ஒன்றும் ஏமாளி அல்ல, ஏமாளி என்று நினைத்தால் நாம் யார் என்று அவர்கள் புரிந்துகொள்ளும் அளவில் அந்தச் சூழலைக் கையாளவும் நம்மால் ஆகும், என்கிற உதாரணம் இது.
அவர் என்னுடைய பதிப்பாளர்களில் ஒருவர். எனது எழுத்தில் மயக்கம் காட்டிய ஒரு வங்கி அதிகாரி எனக்கு வங்கிக் கடன் அளிக்க முன்வந்தார். “எனக்கு வேண்டாம். உங்கள் அன்புக்கு நன்றி. எனது பதிப்பாளருக்கு உதவி செய்யுங்கள்,” என்று சொல்லி அந்தப் பதிப்பாளருக்கு ஒரு பத்தாயிரம் வாங்கிக் கொடுத்தேன். ஐஓபி. 1995, 96 வாக்கில் நடந்திருக்கலாம் இது. கடனுக்கு நானும் பொறுப்புக்கடிதம் தந்திருந்தேன். அந்த மனுசன் பாருங்கள், முதல் மாதத் தவணையே கட்டவில்லை. முதல் மாதம் முடிந்து, கூட ஒரு மாதம் வரை பொறுமை காத்த வங்கி, அடுத்து எனது அலுவலக முகவரிக்கு, எனக்குக் கடிதம் அனுப்பினார்கள், கடன் பாக்கியைச் செலுத்துங்கள். அப்போது தான் எனக்கு இந்த மனுசன் முதல் தவணையே கட்டவில்லை என்பது தெரியும். இப்படி கடன் கட்டச் சொல்லி எனக்கே நோட்டிஸ் வருவது… புதிய அனுபவம் அது. என்னுடைய கடைசி அனுபவமும் அது தான். எதையுமே கடனாகவோ, தவணை வசதியுடனோ வாங்குவது எனக்கு அறவே பிடிக்காது. உடம்பு நடுங்கி விட்டது. சும்மா இருந்த அந்தப் பதிப்பாளரை, வாங்க, என அழைத்துப்போய் நாமதானே கடன் என்று பெரிய தொகை வாங்கிக் கொடுத்தோம். நமக்கு இது தேவையா, இந்த அவமானம்?... என்றாகி விட்டது. அவரை எப்படிப் பணத்தைக் கட்ட வைப்பது?
நான் அந்த நபரிடம் போனேன். “வங்கி மேலாளர் நம்ம மனிதர் தான். 10000 என்பது முதல்கட்ட சிறிய தொகை. இதை வாங்கின மாதிரி வாங்கிக் கொண்டு ஓரிரு மாதத்தில் முழுத் தொகையும் அடைத்து நல்ல பெயர் வாங்கிக் கொண்டால் 25000 என்று இதைவிடப் பெரிய தொகை அடுத்து கடன் வாங்கிக் கொள்ளலாம்” என்று பதிப்பாளர் காதில் போட்டேன். எங்கே எப்படிப் புரட்டினாரோ, மனிதன் வட்டியுடன் அந்த 10000 தொகையை அடைத்து விட்டார்.
அத்தோடு அவருக்கு வணக்கம் சொன்னது தான்.
ஔரங்கசீப் பற்றி ஒரு கதை சொல்வார்கள். அது நினைவு வருகிறது. ஔரங்கசீப்பின் மகன் ஒருவன். அவரோடு என்னவோ முரண்பட்டு அவரது எதிரிநாட்டு மன்னனோடு போய்ச் சேர்ந்து கொண்டான். ஒருவேளை இந்த நாட்டு ரகசியங்களை யெல்லாம் அவன் எடுத்துக் கொடுத்து தன் மீது படையெடுத்து எதிரி நாட்டு மன்னனை அழைத்துவந்து என்னை வென்று தான் ஆள நினைக்கிறானோ, என ஔரங்கசீப் யோசித்தார். அவர் மகனுக்கு ஒரு கடிதம் எழுதினார். “மகனே உன் திறமையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இருப்பினும் நீ ஜாக்கிரதையாக அந்த மன்னன் உன்னை சந்தேகிக்காதபடி நடந்து கொண்டு அந்த நாட்டு ரகசியங்களை எனக்கு அனுப்ப வேண்டும்.” அதை ஒரு ஒற்றன் மூலம் அவனுக்குக் கொடுத்தனுப்வுது போன்ற பாவனையில் அந்த ஒற்றனை எதிரியிடம் மாட்டிக் கொள்ளச் செய்தார். மீதிக்கதை? என்ன ஆகும், உங்களுக்குத் தெரியாதா?
இவர் பத்திரிகையாளர். சரித்திரக் கதைக்கும் சமூகக் கதைக்கும் எழுதுவதில் என்ன வித்தியாசம், என அவரிடம் ஒரு பேட்டியில் கேட்டார்கள். “சரித்திரக் கதைகளில் மின் கம்பஙகள் வராது” என்று அவர் சொன்னபோது அவர் முகத்தில் எத்தனை அறிவுக்களை. அவர் அதை நம்பிக் கொண்டிருப்பது தான் அதில் எனக்கு ஆச்சர்யம். வட்டங்கள் உள்ளும் புறமும், என நான் எழுதிய ஒரு சிறுகதையில் அவர் வருகிறார். அம்புலிமமா கதைகளை சரித்திரக் கதைகள் எனலாமா, என்றுதான் அதைத் துவங்குவேன்.
நண்பன் ரமேஷ் வைத்யா சிரித்தபடி சொல்வான் - விஜயபுரி என்ற நாட்டை விஜயன் என்ற அரசன் ஆண்டுவந்தான், என்று எழுதுகிறார்கள். அடேய் அவங்க ஐயா ஆண்டப்போ நாட்டுக்கு வேற பெயரா இருந்தது? ஆளு சாகச் சாக நாட்டோட பெயரை மாத்திக்குவாங்க போல!
ஒருநாள் அவருடன், சரித்திரப் புகழாளருடன் அவரது பத்திரிகை அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தேன். 1990 களில் ஒரு நிகழ்வு. எங்க பத்திரிகைலல்லாம் எழுத மாட்டீங்களா சங்கரநாராயணன்? நாங்க இலக்கியப் பத்திரிகை இல்லையா, என்று தன்மையாகத் தான் கேட்டார். என் கெட்ட நேரமா என்ன தெரியவில்லை. க்ளுக். அத்துடன் அந்தச் சிரிப்பை நான் அமுக்கி விட்டேன். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், இம்மாதிரி மனுசர்களுக்கு, யாராவது தங்களைக் கிண்டல் பண்ணினால் உடனே அது புரிந்து விடுகிறது. அதாவது நம்மைக் கிண்டல் செய்யப் போகிறார்கள், என அவர்கள் ஒரு தயாருடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்!
அவர் முகம் பாழடைந்து போனது. சரித்திர இருட்டு.
அவரது பத்திரிகையின் ஓர் இதழ் தயாரித்துக் கொடுத்தேன் நான். சில்வியாவின் சிறப்புச் சிறுகதை, நீலமணியின் ஒரு கவிதைநூல் அறிமுகம், புதுக்கவிதை பண்ணுவது எப்படி, என எனது கிண்டல் கட்டுரை எல்லாம் இருந்தது அதில். அவருக்கு இதழ் பிடித்திருந்தது. இதழ் தயாரிக்கும் போதுதான் இந்த உரையாடல் நடந்ததா தெரியாது. நினைவில்லை. அதன் பின்னால் அவர் வேறு பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியமர்ந்தார். முகம் சுருங்கிய அந்தக் கணத்தில் இருந்து என் கதைகளை வாசிக்காமலேயே நிராகரிக்கிறவராய் இருந்தார் அவர். பிற்காலத்தில் தானே ஒரு தனி இதழ் நடத்தினார். தற்போது அவர் உயிருடன் இல்லை. தனது சரித்திரக் கதாபாத்திரங்களோடு போய்ச் சேர்ந்திருக்கலாம் அவர்.
அவரது உதவியாசிரியர்கள் என் கதைகளை எடுத்து அவரது மேசையில் வைப்பார்கள்.  அதை மாத்திரம் அப்படியே திருப்பித் தருவார் அவர். வாசிக்க மாட்டார். “அவங்க நம்மள மதிக்க மாட்டாங்கப்பா. நாம ஏன் அவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்?” என அவர் சொன்னதாக ஓர் உதவியாசிரியர் என்னிடமே சொன்னார் வருத்தத்துடன். எனக்கு வருத்தம் எல்லாம் இல்லை. என் கதைகள் அதைவிடப் பெரிய இதழ்களில் எல்லாம் நல்ல பெயருடன் வருகின்றன. சிறப்பு அழைப்புகள். ஒரு வருடம் எட்டு தீபாவளி மலர்களில் கதை எழுத வாய்ப்பு கிடைத்தது. அதைவிட வேறென்ன மரியாதை வேண்டும் ஓர் எழுத்தாளனுக்கு.
வேறு வேறு சந்தர்ப்பங்கள் அவரை நான் சந்திக்கும்படி அமைந்தன. என்னைப் பார்த்த ஜோரில் அவரிடம் ஒரு ஜாக்கிரதை உணர்வு, உள் பம்மல் வருவதை ரசிக்க கண் கோடி வேண்டும். நான் வலியப் போய் அவரிடம் பேசுவேன். (முன்பொரு பதிவில் ஐராவதம் பற்றிச் சொன்னேன் அல்லவா? அதைப்போல எனக்கு இன்னொரு உறவு இவர். ஐராவதம் நம்பர் 2.)
ஒருமுறை ‘படகுத்துறை’ என்கிற என் சிறுகதைத் தொகுதி பரிசு பெற்றது. (என்.சி.அனந்தாச்சாரி அறக்கட்டளை.) அந்த விழாவில் அவரையும் பேச அழைத்திருந்தார்கள். அழைப்பிதழைப் பார்த்ததுமே அவருக்கு வாட்டம் கண்டிருக்கும். உள்ளே ஆட்டம் கண்டிருக்கும். விழா அரங்கத்தில் அவரை நோக்கி நேரே வந்தேன். நான் வரும்போதே அவர் காதில் அந்த முன் சம்பவம் நிழலாடும்படி அவரையே கூர்ந்து பார்த்தபடி வந்தேன். (“எங்க பத்திரிகை இலக்கியப் பத்திரிகை இல்லியா?” க்ளுக்- என்ற சிரிப்பு.) அதன் தொடர்ச்சி போல, அவரைப் பார்த்து, “நீங்க எப்பிடி இங்க?” என்று அழுத்தமாய்க் கேட்டேன். உடல் நடுங்க தூக்கிவாரிப் போட்டது அவருக்கு. “ஏன் நாங்கல்லாம் இங்க வரப்டாதா?” என்றார் பதட்டமாய்.
அவரைப் பொறுத்தமட்டில் க்ளுக்கின் கொடுக்கை நான் கடைசிவரை உள் மடக்கவே இல்லை.
பள்ளி கல்லூரிக் காலங்களின் அதே தலைபடியாத திமிர், இம்மாதிரி சில சந்தர்ப்பங்களில் என்னிடம் மேலெழுந்து வந்ததோ என்னவோ.
இது ஒரு பெண்மூலம் எனக்கு வந்த வினை. அவரும் கதை கவிதை என எழுதுகிறவர் தான். என்மேல் மிகுந்த நட்பும் மரியாதையும் உள்ளவர் தான். ஆனால் யாரிடம் என்ன பேசக் கூடாதோ அதை சட்டெனப் பேசி விடுவார். அவரது புத்தகத்துக்கு அட்டைப்படம் டிசைன் பண்ண என்று ஒரு நண்பரிடம் அழைத்துப் போகிறேன். அந்த நண்பரும் கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டவர் தான். நேரே அவரிடம் “உங்க கவிதைகள்ல விஷயமே இல்லியே?” என்று ஒருபோடு போட்டார் இந்த மகா கவி.
தற்போது கொடிகட்டிப் பறக்கும் இரு இலக்கியவாதிகள், ஒருவர் கதைஞர், ஒருவர் கவிஞர், மற்றும் பதிப்பாளர். இருவருமாக திருச்சியில் ஒரு எழுத்துப் பட்டறையில் இவரை, இந்தப் பெண்மணியை சந்தித்துப் பேசினார்கள். அந்தப் பெண்மணி கதைஞரிடம் அதிகம் பேசியது, கவிஞருக்குப் பொறுக்கவில்லை. தனியே அந்தப் பெண்ணை அழைத்து, “அவன்கூட அதிகம் பேச வேண்டாம்” என்கிறாப் போல, என்ன ஒழுக்க சிந்தனை, அறிவுரைத்திருக்கிறார். இந்தப் பெண் சும்மா இல்லாமல் என்னிடம் ஒரு தொலைபேசி அழைப்பில் இதைச் சொல்ல, நான் “இலக்கிய உலகம் பழகறதுக்கு அத்தனை நலல விஷயம் இல்லை போலிருக்கே” என்கிறதாக என் பங்குக்கு எதோ சொல்லிவிட்டேன்.
ஒரு நகைச்சுவை கேள்விபட்டது உண்டா?
ஏன்டி அவகிட்ட சொல்லாதேன்னு நான் உங்கிட்ட சொன்னதை நீ அவகிட்ட ஏன் சொன்னே?
ஐயோ அவகிட்ட சொல்லாதேன்னு நீ என்கிட்ட சொன்ன விஷயத்தை நான் அவகிட்ட சொன்னதை அவ உன்கிட்ட சொல்லிட்டாளா?
சரி சரி. அவகிட்ட சொல்லாதேன்னு நான் உங்ககிட்ட சொன்னதை நீ அவகிட்ட சென்னதைப் பத்தி அவ என்கிட்ட சொன்னதை நான் உங்கிட்ட கேட்டதா நீ அவகிட்ட சொல்லிறாதே.
அநேக சமயங்களில் பெண் விஷயங்கள் அப்படி றெக்கை கட்டுகின்றன.
அத்தோடு விஷயம் முடிந்திருக்கலாம். இந்தப் பெண் நான் சொன்னதை, அந்த மிகப் பிரபலக் கதைஞரிடம் அலைபேசி உரையாடலில் சொல்லிவிட்டது. அந்த மனுசனுக்கு கவிஞர் மேல் கோபம் வந்திருக்க வேண்டியது, அதானே அப்பா நியாயம்? ஆனால் அவர் கோபம் என்மேல் திரும்பி விட்டது. பெரும் சுற்றிதழ் ஒன்று நடத்தும் சிற்றிதழ் பாணி பததிரிகையில் அவர் மாதாமாதம், கதையா கட்டுரையா வாழ்பனுவமா என்று பிரித்தறிய முடியாத ஒரு ‘பத்தி’ எழுதிக் கொண்டிருந்தவர், அதில் நடுவே என்னை ‘நாட்டுநாய்’ என்று குறித்து, நாட்டுநாயின் இலக்கணங்களைப் புட்டுப் புட்டு வைத்து, அத்தனையும் எனக்குப் பொருத்தமாய் இருப்பதாகக் கொண்டுவந்தார். அட, தற்செயலாக நான் அதை வாசிக்க நேர்ந்தது!
ஏற்கனவே அவரது மகத்தான் ஒரு நாவலை நான் உரித்துத் தோரணம் கட்டி யிருந்தேன். அந்தக் கோபம் இத்தோடு சேர்ந்து கொண்டதா தெரியவில்லை. எழுத்தாளனுக்கு அப்படிப் பொறுமையற்ற ஆத்திரம் எப்படி வருகிறது தெரியவில்லை. எனக்கு இது தேவையே இல்லை. நான் அந்தப் பெண்ணிடம் தற்கால இலக்கியவாதிகள் பற்றி அப்படிச் சொல்லாமலாவது இருந்திருக்க வேண்டும். அது என்னைப் பார்க்க துப்பாக்கி குண்டுகளைத் திருப்பி விட்டிருக்கிறது.
அடுத்த வார ‘திண்ணை’ இணைய இதழில் என் சிறுகதை. ‘நாட்டு நாய்களும் நகரத்து நாய்களும்.’ நாய் என்று வந்துவிட்டால், நாட்டுநாய் என்ன நகரத்து நாய் என்ன, எல்லாமே நக்கிதான் குடிக்ணுமப்போவ், என்கிற எகத்தாளமான த்வனி பொதிந்த கதை. அதில் இலக்கிய உலகில் நான் கேள்விப்பட்ட பிற அக்கப்போர்கள் இரண்டு மூன்றை உள்ளடக்கி கதையாக்கி யிருந்தேன். அதன் கடைசிவரி “இதையும் திட்டி எழுதுவது உன் தீராவிதி” என முடியும்
அதை அவர் வாசித்துவிட்டு, அடுத்த தொடரில் எனது நண்பனைக் கேலிசெய்து, அந்த எழுத்தாளனைச் சுற்றி தூசும் தும்பும் பறக்கின்றன, என ஒரு கதை எழுத, நான் எனது அடுத்த கதை என் நண்பன் அப்பாவிதான், ஆனால் அயோக்கியன் அல்ல என்கிற பாணியில், கதை இரண்டு, எழுத, அதையும் வாசித்துவிட்டு, அவர் சிறிது மௌனம் காத்தார்.
என்று பார்த்தால், இந்த விஷயம் அந்தக் ‘கவிஞர்’ காதுக்கும் போய்விட்டது. கதைஞர் சொன்னாரா, அல்லது அந்தப் பெண்மணியே உளறித் தொலைத்ததா தெரியாது., பிரபல இதழில் அவர் இதைவைத்து நடுப்பக்கத்தில் கவிதை எழுதினார்.“எழுதினால மாட்டிக் கொள்ளாமல் எழுதத் தெரிய வேண்டும்…” இப்படி இருந்தது அந்தக் கவிதை. எனது மூன்றாவது கதைக்கு அவசியம் ஏற்பட்டு விட்டது இப்போது. அவர்கள் மூவரையும் முன்கொணர்கிற மாதிரி, மாதர்குழல் விளக்கு, என ஒரு கதை நான் தந்தேன். அதுவும் அந்த வளாகத்தில் வளைய வந்திருக்க வேண்டும். இப்போது சிற்றிதழில் அந்தக் கதைஞர் ஒரு சமாதானக் கொடி அசைக்கிறார். “இனி அவரவர் பாதை அவரவர்க்கு” என்கிற மாதிரி. பிறகு எனது நான்காவது கதை இந்தியா டுடேயில் வெளிவந்தது. ‘தோணியும் அந்தோணியும்.’ பெருமாள் கோவில் குருக்களின் மகனும், மீனவனின் மகனும் பள்ளியில் ஒன்றாய்ப் படித்த நண்பர்கள். மீனவப் பையன் கடலில் காணாமல் போய்விடுகிறான். இந்த குருக்களின் பையன் மீனவப் பையனின் அப்பாவிடம் துக்கம் கேட்டு மௌனமாக நிற்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் மௌனமாகப் புரிந்து கொள்கிறார்கள்... என்கிற அடிப்படைக் கருவில் அமைந்த கதை அது.
இந்த நான்கு கதைகளுமே எனது சிறுகதைத் தொகுப்பு ‘கடிகாரத்தை முந்துகிறேன்’ நூலில் வாசிக்கக் கிடைக்கும்!
தனியே வாசித்தாலும் சுவை குறையாத கதைகள் இவை. இந்தப் பின்னணியோடு வாசிக்க அதிக ருசி கிடைக்கும்.
இது தவிர, இலக்கிய உலகில் தனக்கென தனியிடம் கிடைத்து கொண்டாடப்பட்டு வருகிற ஒரு நபர். அவர் ஒரு இலக்கிய இதழின் ஆசிரியராகவும் இருந்தார். எனக்கு அவர் எழுத்தில் ஒரு மயக்கமான மரியாதை உண்டு. அந்த இதழுக்கு ‘காமதகனம்’ என ஒரு கதை அனுப்பினேன். அண்ணியைக் குளிக்கும் போது எட்டிப் பார்த்து விடுகிறான் ஒரு பையன். எதிர்பாராமல், அவன் குளியல் அறைக் கதவில் கண் வைக்கப் போன சமயம் கதவு திறந்துவிடுகிறது. சட்டென அந்தக் கதவு அவன் முகத்தில் அறைய அவனது ‘சில்லுமூக்கு’ உடைந்து விடுகிறது.“ஐயோ” என்று பதறுகிறாள் அண்ணி. தன்னை அவன் நிர்வாணமாகப் பார்த்தது அல்ல, அவன் மூக்கு உடைந்தது தான் அவளது அப்போதைய பதட்டமாய் இருக்கிறது. தன்னையே வெறுத்து வெளியே ஓடுகிறான் அவன்.
அண்ணா அலுவலகம் முடிந்து இரவு வீடு திரும்புகிறான். தம்பியைத் தேடி வருகிறான். தெருவோர பஜனை மடத்தில் தம்பியைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு வரும்படி அழைக்கிறான். தம்பி வெட்கப்படுகிறான். பிறகு “அண்ணா நீ ஒண்ணு புரிஞ்சிக்கணும். அந்த நிமிஷம் நான் அவளை அண்ணியாப் பார்க்கல்ல. ஒரு பெண்ணாத்தான் பார்த்தேன். நான் ஆணாயிருந்தேன் அப்போது. உன் தம்பியா இல்லை…” என்று பேசிக்கொண்டே வருகிறான்.
“என் தங்கையோடு நான் தெருவில் வரும்போது யாராவது பார்த்தால் எனக்கு ஒருமாதிரி பிடித்திருக்கிறது என்பது உண்மைதான். தங்கையுடன் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதா என்ன? ஆனால் ஒண்ணு நீ புரிஞ்சுக்கணும். SURVIVAL OF THE FITTEST, இது இயற்கையின் விதி. சமூகமா மனுசன் வாழ ஆரம்பித்தபோது அவன் புது விதி ஒணணு வெச்சிக்கிட்டான். SURVIVAL OF EVERYBODY. அந்த விதியை மதிக்க நாம கத்துக்கணும். மதிச்சாகணும். இல்லாட்டி என்னாகும், உன்னைவிட பலசாலிகிட்ட உன் பொக்கிஷங்களை நீ பறிகொடுக்க வேண்டி வரும்.” அண்ணா பதில் சொல்கிறான்.
இப்படிப் போகிற கதை அது.‘காமதகனம்’ என்ற என் இரண்டாவது தொகுப்பில் உள்ள கதை. இந்தக்கதை அந்தப் பத்திரிகையில் இருந்து திரும்பி வரவில்லை. வெளியாகவும் இல்லை. புத்தகம் என்று வந்தபோது நான் இரண்டாவது தடவையாக எழுதினேன். அந்த மகா எழுத்தாளர் இந்தக் கதையை நிராகரிக்கட்டும். அதைப் பற்றி என்ன? ஆனால் அடுத்த இரண்டு மாதத்தில் ஒரு பிரபல வார இதழில் அவர் ஒரு கதை எழுதினார். அதுதான் அவரது கடைசிச் சிறுகதை என்று தோன்றுகிறது. அவர் மறைந்துவிட்டார் இப்போது.
வானத்தில் ஊர்வசி போகிறாள். அவளை வழிமறித்து தன் காதலைச் சொல்கிறான் பிரம்மதேவன். என்னைப் படைத்தவன் நீதானே? நீயே என்னைப் பார்த்து மையல் கொள்ளலாகுமோ, என அவள் கேட்கிறாள். நான் பிரம்மதேவன் அல்ல, ஓர் ஆண்மகனாகத் தான் இப்போது நான் உன்னைப் பார்க்கிறேன்… என அவனது வாதங்கள் அமைகின்றன.
இதை யாரிடம் முறையிட முடியும் நான்?
பின்னாளில் நான் அவரது நடையிலேயே ஒரு கதை, ஒரு சவாலுக்காக எழுதினேன். அவரது பிரபலமான ஒரு சிறுகதையைக் கையில் எடுத்து, அதில் உள்ள அபத்தங்களை விவரித்து அதை மேலடி அடிக்கிறாப் போல என் சிறுகதை ‘பிரபஞ்ச ரகசியம்.’ புதிய பார்வை இதழில் வெளியானது. அவரது கதை போலவே பாதிக் கதை அமையும். அந்தக் கதையை இந்த எழுத்தாளரிடம் ரயிலில் ஒருவர் சொல்லிக்கொண்டே வருவார். பாதியில் நிறுத்தி, மீதிக் கதையயை நீ சொல்… என்பார். தான் எழுதியபடி அந்த எழுத்தாளர் கதை சொல்ல, “அப்படி இல்லை. அதில் இத்தனை பிழை இருக்கிறது. இதோ அதன் முடிவு” என எதிர் இருக்கைக்காரர் கதையை, தன் வாழ்க்கைக் கதையை முடிப்பதாக என் கதை.
‘பிரபஞ்ச ரகசியம்’ எழுதியதில் எனக்கு கர்வம் உண்டு.
இப்படி சில கதைளின் உற்பத்திக் களங்கள் சுவாரஸ்யமான பின்னணி கொண்டவை. இதன் இன்னொரு விதம் இருக்கிறது. அதை ஒரு பதிவில் சொன்னால் ஆயிற்று!
---
பின்குறிப்பு
பொதுவாக கதை எழுதி அதன் குறிப்பாக “இதில் வரும் சம்பவங்கள், காட்சிகள் என் கற்பனையே. யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் நிஜ வாழ்க்கையில் இருந்து கையாளப் பட்டவை அல்ல,” என்று எழுதுவார்கள். இது கட்டுரை. நிஜ வாழ்க்கை. இது புண்பட்ட நோக்கத்தில் எழுதப் பட்டது.
***
storysankar@gmail.com
91 97899 87842

Friday, December 14, 2018


part 20
தொடுவர்மம்
டைப்பு மனநிலை என்பது ஓர் அபூர்வத் திளைப்பு. ஒரு வரம்தான் அது. அதன்முன் உலகின் எதுவுமே துச்சம் தான். “கவிஞனுக்கு இல்லை வறுமை, இல்லவே இல்லை,” என்பார் க.நா.சு. லேசாய் விக்கல் எடுக்கும் ஒரு துக்கம் அந்த வரிகளில் இருப்பதாக நான் கேலியாடுவது உண்டு. என்றாலும் தான் - தன்னுலகு என்று கலைஞனின் வாழ்க்கை ஆனந்தமயம். அதில் ஏமாற்றங்கள் இல்லை.
எழுதும்போது எழுதப்பட்ட தக்கணத்தில் வாழ்க்கை அழகாக இருக்கிறது அவனுக்கு. அவனது வாழ்க்கை. ஆனால் எழுத்தில் சிக்கிய வாழ்க்கை வேறாக இருக்கலாம். அது விஷயம் அல்ல. எழுத்து எழுதுகிற சுகத்துக்காகவே எழுதப்படுகிறது, என்று சொல்லி விடலாம். துக்கத்தை அது எழுதலாம். அதை எழுதுவதில் துக்கம் இல்லை. எழுதும்போது, காகிதத்தோடு அதைப் பகிரும்போது அந்த துக்கம் கனம் குறைகிறது. அதாவது அந்த துக்கத்துக்கு எதிர்த் திசையில் அவனது நடை துவங்குகிறது. ஆனால் ஒரு நல்ல எழுத்து, எழுதி முடித்தபின்னும் எழுத்தாளனை ஆக்கிரமித்திருக்கும் சிறிது காலம்.
தொட்ட அலை தொடாத அலை, நாவலை முடித்து ஒருவார அளவில் கூட நான் அந்த ‘சாமிவந்த’ நிலையிலேயே இருந்தேன்.
நான் என்பவன் சாமானியன் தான். ஆனால் எழுதுகையில் அவன் கலைஞன். கலைஞன் சாமானியன் அல்ல. எழுதும்போது அவனில் ஒரு மேன்மை வந்தடைந்து விடுகிறது. அப்போது அவன் பயன்படுத்தும் வார்த்தைகளின் செறிவு வேறானது. ஒரு தாவரத்தின் பூத்த நிமிடம் அது. அதுவரை இருந்த தாவரம் வேறு. பூத்த தாவரம் வேறு, அல்லவா? எழுத்து ஒரு கடந்துவந்த நிலை. அல்லது கண்டடைந்த நிலை. வெந்த சோறு. பக்குவப்பட்ட நிலை அது.
எழுதித் தீருமா? எழுதுவதை நிறுத்திவிட முடியுமா?... எழுத முடியாத ஏக்கம் தான் இருக்கிறது. எழுதத் தினவு கண்டு எழுத அமர முடியாத கணங்கள் சில சமயம் அமைந்து விடுகின்றன. எழுதத் தினவு கண்ட பின், நினைவுகளின் வரிசையில் தன்னில் தானே திளைத்து பிறகு எழுத அமரும்போது, திளைத்ததில் பாதி கூட தேறாமல் போவதும் உண்டு. ஒரு வேகத்தில் எழுதிவிட்டு பிறகு திரும்ப வாசித்து நகாசு வேலை செய்வதும் உண்டு. எனினும் குறைந்தபட்ச சிந்தனைக் கோர்வை இல்லாமல் எழுத அமர முடியாது. நல்ல எழுத்து-மனநிலையில் சொற்கள் வரிசை கட்டி சேவகத்துக்கு வரும்.
சாதாரண வேளை போல் தோன்றும் ஒரு பொழுது, சட்டென தேவைப்படி அலங்கரித்துக் கொள்ளும் ஒரு கலைஞனுக்கு. ரித்விக் கடக்கின் ‘மேக தாக தாரா’ வங்காளப் படத்தில், ஒரு பாடகன். வானொலியில் பாடுவது அவனது கனவு. அது நிறைவேறி விடும். கடக் அவன் வானொலியில் பாடுவதைக் காட்ட மாட்டார். ஸ்டூடியோவில் பாடிவிட்டு அவன் தன் ஊர் திரும்புகிறான். சின்ன கிராமம் அவனது ஊர். ஊருக்கு வெளியே அவனை பஸ் இறக்கி விட்டுவிடும். பஸ்சில் இருந்து பொத்தென உற்சாகமாகக் குதித்து இறங்குவான் அவன். வீடு வரை, வயல் வரப்புகள் தோட்டங்களைத் தாண்டி நடந்து வருவான். அந்தப் பயிர்ப் பச்சைகளை ரசித்தபடி, அவற்றையெல்லாம் தன் ரசிகர் படை போலும் பாவித்து, காற்றில் அவை தலையசைக்கும்... தன்னில் கரைந்தபடி அருமையாப் பாட்டெடுத்தபடியே வீடு திரும்புவான்.
இந்த ‘மேக தாக தாரா’ தான் கே. பாலச்சந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை.’ டைட்டிலில் அதை அவர் சொன்னாரா?
ஜெயா தொலைக்காட்சியின் காலைமலரில் என்னைப் பேட்டி கண்ட பெண்மணி என்னை அப்படி சஞ்சாரம் செய்ய வைத்ததை முன்பே பதிவிட்டு விட்டேன். நம்மிடம் ஓர் எதிர்பார்ப்பு என்று வருகையில் அதற்குத் தக உயரப் பறத்தல் எப்பவுமே நமக்குப் பிடித்துப் போகிறது. பதிப்பாளர்கள் திடீரென்று தொலைபேசியில் பேசுவார்கள். எனது அடுத்த நூலுக்கு அட்டைப்படம், பின்னட்டையை என்ன மாதிரி பயன்படுத்தலாம், என்றெல்லாம் கேட்பார்கள். புத்தகத்தை அச்சுக்கு எடுத்துக் கொள்ளலாம், என வரும் கடிதங்களும் அவ்வண்ணமே பெரும் உற்சாகம் அளிக்கும்.
எஸ். சங்கரநாராயணனின் குறுநாவல்கள், என ஒரு தொகுதி நிவேதிதா பதிப்பகம் வெளியிட்டது. அட்டையில், பெரிய அளவில் மயிற்பீலி ஒன்று போட்டிருந்தார்கள். என்னிடம் காட்டினார்கள். நான் சொன்னேன். அதில், உற்றுப் பார்த்தால் வாசிக்கிற அளவில், எட்டு பாயின்டில் வெளியிடுங்கள். ‘ஒரு பறவையின் மரணம்.’
அட்டையைக் கையில் எடுத்துப் பார்க்கிறவர்களுக்கு கவனமாய்ப் பார்த்தால் ஓர் அதிர்வு கிட்டும், என்பது என் எதிர்பார்ப்பு.
‘புதுவெள்ளம்’ என என் சிறுகதைத் தொகுதி. பதிப்பாளர் அட்சரா. என் சிறுகதைத் தொகுதிகளுக்கு, தொகுப்பில் உள்ள ஒரு கதையின் தலைப்பைப் பயன்படுத்தாமல், சிறுகதை என்கிற அம்சத்தோடு பொருந்திப் போகிற பொதுத் தலைப்புகள் வைக்க நான் பிரியப்படுவேன். அநேகமாக அந்தப் பதிப்பாளர் என் நூலைப் பிரசுரத்துக்கு எடுத்துக் கொள்ளும் அந்தக் கணம் மனசில் அலையடித்து மேலே வரும் தலைப்பாக அது அமையும். அப்படி விளையாட்டு எனக்குப் பிடிக்கும். கேட்ட நேரம் அந்தக் கணத்தின் தேவைக்கு என என்னைத் தகவமைத்துக் கொள்வது. வெள்ளத்தனைய மலர் நீட்டம், நான் தாமரை.
என் முதல் சிறுகதைத் தொகுதி, ‘அட்சரேகை தீர்க்கரேகை.’ இவை கற்பனையே. ஆனால் இவற்றைக் கொண்டு நாம் உண்மையை, நம் பூமியின் அநேக விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. அவ்வண்ணமே இந்தக் கதைகள், இவை என் கற்பனையே, ஆனாலும் வாழ்க்கை பற்றிய உண்மைகளை இவற்றில் அறிந்துகொள்ள முடியும், என்கிறதாக ஒரு விளக்கம் தந்து இந்தத் தலைப்பில் நூலை வெளியிட்டேன். உயிரைச் சேமித்து வைக்கிறேன், படகுத்துறை, சராசரி இந்தியன், ஒரு துண்டு ஆகாயம்... முதல், சமீபத்திய, இறந்த காலத்தின் சாம்பல், யானைகளின் கானகம் வரை அப்படியான பொதுத் தலைப்புகளே. இதே தலைப்பில் தொகுப்பில் சிறுகதை எதுவும் இல்லை.
‘புதுவெள்ளம்’ என்ற பொதுத் தலைப்பில் சிறுகதை நூல் வெளியிடுகையில் சட்டென ஒரு பொறி. அதன் பொருளடக்கத்தில் கடைசிக் கதையை முதலில் வைத்தேன். முதலில் அது இடம் பெறும் பக்கம். பிறகு கதையின் தலைப்பு. 151 (கடைசிக் கதையின் தலைப்பு.) இப்படி. அதன் கீழ் அதற்கு முந்தைய கதை. 138 (கதைத் தலைப்பு) இப்படி மாற்றி அடுக்கி, தொகுப்பின் முதல் கதையைக் கடைசியில் வைத்தேன். 006 (முதல்கதை). ஏன் அப்படி அடுக்கினேன்? புத்தகத்தின் தலைப்பு ‘புதுவெள்ளம்.’
பொருளடக்கம் என்று போடுவதற்கு பதிலாக, “நீர்மட்டம்” என்று குறிப்பிட்டேன்.
பதிப்பாளர் இதை கவனித்தாரா தெரியாது. அவர் அதைப்பற்றி ஒன்றும் கருத்துரைக்கவில்லை. வாசகர்களில் யார் கவனிக்கிறார்கள் இதை, என அறிய எனக்கு ஆர்வம் இருந்தது. பொதுவாக ஒரு கதையில் எத்தனையோ நகாசு வேலைகளையும், தத்துவங்களையும், குறியீட்டுக் குறிப்புகளையும் பொதிந்து தருகிறோம். அத்தனையும் வாசகனுக்குச் சேருமா தெரியாது. ஒருத்தருக்கு ஒரு விஷயம் பிடிபடும். இன்னொருவருக்கு வேறொரு விஷயம் தட்டுப்படும்... ஆக இப்படி விஷயங்களை வாசகர்களே கண்டுபிடித்து நம்மிடம் உரையாடக் காத்திருப்பது ரொம்ப இஷ்டமான பொழுதுபோக்கு, எல்லா எழுத்தாளனுக்கும்.
நூல் வெளியாகி கிட்டத்தட்ட ஏழெட்டு ஆண்டுகள் கழித்து டெல்லியில் இருந்து ஒரு அழைப்பு. தொலைபேசியில். “ஐயா, உங்க புதுவெள்ளம்...” என்று சொல்லிச் சிரிக்கிறார். சொல்லுங்க சொல்லுங்க, என நான் ஊக்கப் படுத்தினேன். “பொருளடக்கம்னு போடாமல் நீர்மட்டம்னு போட்டீங்க.” ஆமாம். சொல்லுங்க நண்பரே, என்கிறேன். “அணையில் நீர்மட்டம் பார்க்கிற ஸ்கேல் மாதிரி, கடைசிக் கதையில் இருந்து பக்க எண்களை ஆழம் குறைஞ்சிட்டே வர்றாப்போல அடுக்கிட்டீங்களே. அருமை. அருமை”. என மிகிழ்ச்சியுடன் பேசினார் அவர்.
அநேகமாக நான் காத்திருந்து எதிர்பார்த்திருந்த விஷயங்கள் என்னை தாமதித்தேனும் வந்தடைந்து விடுகின்றன.
இப்படிப் பொதிந்து வைப்பது தவிர, சில கேள்விகளை உக்கிரமாக முன் வைப்பதும் வழக்கம் தான். ஓர் அறிவுஜீவி எழுத்தாளன், பெண்ணியம் பேசுகிறவன், தன் மனைவியை அலட்சியமாக, உங்கள் அடிமைத்தனங்களை நீங்கள் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள், என்பதாகக் கிண்டல் செய்கிறதாக ஒரு கதை. ‘அதோ பூமி.’ ஆண்களுக்கு விருப்பமாக அடிமையாகிறீர்கள் நீங்கள், என்கிற அவன் எகத்தாளத்துக்கு அவள் பதில் சொல்வாள். “ஒரு டெசிமலில் இருந்து ஒன்று என ஆகப் பயணப் படுகிறீர்கள் நீங்கள், அறிவுஜீவிகள். என்றால் அந்த டெசிமலில் இருந்து பூஜ்யம் நோக்கிப் பயணப்படுவது எத்தனை மகத்தான தியாகம், உங்களால் அதை நினைத்தே பார்க்க முடியாது,” என்பாள். நீங்கள் மேற்கத்திய தாக்கத்தில் பேசுகிறீர்கள். இது நமது மரபு. பூஜ்யத்தைக் கண்டவர்கள் நாம் தான். THE SUN NEVER SETS IN THE BRITISH EMPIRE. இது உங்கள் பெருமை. ஆனால் அதைவிட முக்கியம். IT RISES IN THE EAST.
கதையை இப்படி முடிக்கிறேன்.
அவள் பேசிவிட்டுப் போன பின்பும் அந்த ‘வெற்றிடம்’ அர்த்தபூர்வமாய் இருந்தது.
எனது சமீபத்திய சிறுகதைத் தொகுதி ’பெருவெளிக்காற்று’ நூல் ஆய்வு நிகழ்ச்சி டிஸ்கவரி புக் பேலசில் நடைபெற்றது. தலைமையாக அமைந்து பேசிய இந்திரன், “சங்கரநாராயணனிடம் பழகும் போதே ஜாக்கிரதையாகப் பழக வேண்டும். நம்மைப் பற்றி எதாவது கதையில் நுழைச்சி விட்ருவாரோன்னு இருக்கும். ஒருமாதிரி தொடுவர்மம் அவரது எழுத்தில் இருக்கிறது” என்றார்.
எழுத்துலகில் ஜாம்பவான் ஒருவர் சமீபத்தில் இறந்து போனார். அவரது வாழ்க்கையை உள்ளது உள்ளபடி ஒரு கதையில் நான் குறிப்பிட்டிருந்தேன். அது அந்த எழுத்தாளர் என்னிடமும், பொதுவாகப் பல மேடைகளிலும் பகிர்ந்து கொள்ளும் ஒரு விஷயம்தான். என்ன, அதில் தவிர்க்க இயலாமல் அவரது ‘பரிவாரம்’ பற்றிய குறிப்பில் இன்னொரு எழுத்தாளர், சிறுபத்திரிகையாளர் பற்றி இடம்பெற வேண்டியதாயிற்று! பிரதான கதையில் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை.
நான் ஏற்புரையில் பதில் சொல்ல வேண்டியதாயிற்று. “தொடுவர்மம் என்றெல்லாம் இல்லை நண்பரே. ஆனால் சில கருத்துகளுக்கு அழுத்தம் தர சில பிரயோகங்கள் கதையமைப்புப்படி நான் கையெடுக்கிறேன். உதாரணமாக...” என்று ஒரு கதை சொன்னேன்.
கல்யாணம் பண்ணிக்கொண்டு, மனைவியோடு நெருங்காமல், பணம் பணம் என்று தன் வியாபாரத்திலேயே கவனமாய் இருக்கும் கணவன். அவள் தாய்மையடைகிறாள். இதில் திகைத்துப் போகிறான் அவன். ஆனால் அவளிடம் கேட்கத் தயக்கம் அவனுக்கு. குழந்தை பிறந்து விடுகிறது. இனியும் கேட்காமல் எப்படி, என அவன் பேச ஆரம்பிக்கிறான்.
“இந்தக் குழந்தை, யாருடையது?”
“அப்டின்னா?”
“இந்தக் குழந்தைக்கு அப்பா யாரு?”
 “ஏன் நீங்கதான்.”
அவன். “துரோகி” என்று கத்துகிறான். அவளுக்குக் கோபம் வருகிறது.
“என்ன சொல்றீங்க? கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் வேறொருத்தருடன் குழந்தை பெத்துக்கிட்டதா, நீங்க துரோகம்னு குற்றம் சாட்டறீங்க, அதுக்கும் முந்தி... என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதே எனக்கு நீங்க செஞ்ச துரோகம் இல்லியா?” என்கிறாள்.
இந்தக் கதை என் அலுவலகத்தில் பல பெண்களால் படித்துப் பார்க்கப் பட்டது. அவர்கள் “கதை சரிதான். அவள் கேள்வியும் சரிதான். ஆனால் அவளது குழந்தையின் தந்தை, யார் அது? அதுபற்றி எதுவும் கதையில் இல்லையே?” என்றார்கள். நான் சொன்னேன். “அதுதான் இங்கே சிக்கல். அந்த வாழ்க்கை பற்றி, அவளது காதலன் பற்றி, நான் எழுத ஆரம்பித்தாலே, நீங்கள்... பெண்கள் உட்பட, இது தவறு அல்லவா, என்று குரல் கொடுக்க சமூக அளவில் பழக்கப் படுத்தப் பட்டு விட்டீர்கள். அதனால் தான் அந்தப் பகுதியைக் கதையில் விளக்காமல் விட்டேன். நீங்க இப்போது அவளது கோபத்தை மாத்திரம் பார்க்க முடிகிறது. அதை நியாயம் எனவும் உணர முடிகிறது...”
இந்திரன் எனது நல்ல நண்பர். அவரது முதல் மொழிபெயர்ப்புத் தொகுதி ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்.’ அன்னம் வெளியீடு. இதை வாசித்த பல ஆண்டுகளுக்குப் பிறகு பொள்ளாச்சியில் கவிஞர் சிற்பியின் வீட்டில் அவரது நூலக அறையில் இதன் பிரதியைப் பார்த்தேன். ஆசையுடன் கையில் எடுத்து, “நான் வைத்துக் கொள்ளவா?” என்று வாங்கி வந்தேன். அதன்பிறகு, கருப்பினர் கவிதைகளில் காணப்படும் மீட்சி தேடும் குரல்களும், நமது சுதந்திரத் தேடலின் குரலும் ஒத்திசைகிற மாதிரி ஒரு கதை எழுத ஆர்வப் பட்டேன். ‘புலிக்குகை.’ புதிய பார்வை இதழில் அது எனக்குப் பெரிய பெயர் எடுத்துத் தந்தது. மகாகவி பாரதியாரை தமிழ்நாட்டில் இருந்து வெள்ளைக்காரன் கண்ணில் படாமல் புதுவை அழைத்துச் செல்வது ஒரு பெண், என்று சொல்லி, அவள் விதவை என்று விவரப்படுத்தி, அவள் கர்ப்பமாய் இருக்கிறாள், வயிற்றில் குழந்தை, எனச் சொல்லி, அவளது கணவன் சுதந்திரப் போரில் உயிர் நீத்தவன் என்பதாக அமைத்து...
“இத்தனை தியாகங்களுக்குப் பின் நீ எனக்காக இப்படி ஒரு ஆபத்தை எதிர் கொள்கிறாயே அம்மா?” என பாரதி நெகிழ்வார். “என் கணவரின் மரணம், அதன் லட்சியம் நிறைவேறவே நான் இந்த ஆபத்தைக் கைக்கொண்டேன்” என்பாள் அவள். “உன் குழந்தை... அதற்கும் இந்த ஆபத்துகள் தேவையா?” என்பார் பாரதி. “சுதந்திரத்துக்கான நம் பாடுகளை அது அறியட்டும் ஐயா. இந்த சுதந்திரம் யாருக்கு? குழந்தைக்குத் தானே?” என்பாள் அவள்.
“ஆகா பாரதமாதா...” என கை கூப்புவார் மகாகவி. “உன் மணி வயிறு. வயிறல்ல அது. புலிக்குகை. அதில் உறங்கும் உன் குழந்தை, அதுவே நம் நாட்டின் சுதந்திரம்,” என்பார்.
இதில் பாரதியாரின் கவிதைகளாக நான் பயன்படுத்தியவை இந்திரன் மொழிபெயர்த்த ஆப்பிரிக்கக் கவிதைகள் சில, அவற்றை ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ தொகுப்பில் இருந்து எடுத்துப் பயன்படுத்தி விட்டு, கதையோடு அடிக்குறிப்பும் தந்தேன். நன்றி இந்திரன். இப்படியொரு கற்பனையை உங்கள் நூல் எனக்குச் சிறகளித்தது.
‘புலிக்குகை’ சிறுகதை, பாவை சந்திரன் ஆசிரியராக இருந்த ‘புதிய பார்வை’ இதழில் வெளியாகி, அதற்கு அடுத்த வாரம் அவர் கல்கத்தா தமிழ்ச் சங்கம் போயிருந்த போது அங்கே, இந்தக் கதையை வெளியிட்டதற்காகச் சிறப்பு பாராட்டு பெற்றார்.
கொண்டாட்ட மனநிலை வந்து விட்டால், உள்ளம் துள்ளி எழுந்து ஆட்டம் போடும். என் இயல்பு அது.
‘கடிகாரத்தை முந்துகிறேன்’ என் சிறுகதைத் தொகுதி. பதிப்பாளர் தேவகி ராமலிங்கம், நிவேதிதா பதிப்பகம். “சார் பின்னட்டை... என்ன செய்யலாம்?” என்று அலைபேசியில் காத்திருக்கிறார். “என்ன புத்தகம் அம்மா? தலைப்பு என்ன சொல்லியிருக்கிறேன்?” என்று கேட்கிறேன். ”கடிகாரத்தை முந்துகிறேன்” என்கிறார். ”சரி. சிறு கவிதை, பின்னட்டைக்கு. எழுதிக் கொள்ளுங்கள்.”
ஒருகால் குட்டை
ஒருகால் நெட்டை
என்றாலும்
என்ன ஓட்டம் ஓடுது
இந்த கடிகாரம்

“சரியா இருக்காம்மா?” என்கிறேன். “அருமை சார். உங்க வேகம் ஆச்சர்யமாய் இருக்கு” என்றார் தேவகி.
இன்னொரு சந்தர்ப்பம். எழுத்தாளர் திரு சாருகேசி, என் எழுத்தின் மேல் மிகுந்த மரியாதை கொண்டவர். நான் அதுவரை அவரைச் சந்தித்தது இல்லை. என்றாலும் என்னைப் பற்றி என் கதைகளில் அறிந்து மகிழ்ந்தவர். கல்கி ஆசிரியர் ராஜேந்திரனிடம் என்னைப் பற்றி நல் வார்த்தை சொல்லி, “சங்கரநாராயணனிடம் கதை கேளுங்கள். அவர் கதை கல்கியில் வர வேண்டும்” என்று எடுத்துச் சொன்னவர்.
எனக்கு கல்கி ஆசிரியரிடம் இருந்து கடிதம். கிர்ர் என்று ராட்டினம் ஏறிய நிலை எனக்கு. அந்தக் கொண்டாட்ட மனநிலையிலேயே, முதலில் ஒரு தலைப்பு என மனசுக்குள் பரபரத்தேன். எனது அநேகக் கதைகளை நான் தலைப்பு முன்னமே வைத்து விடுவேன். அல்லது முழுக் கதையையுமே, மறந்து போகாமல் இருக்க, ஒரு குறுங் கவிதை போல தலைப்பாக்கி விடுவேன். “பிரசவ அறைக்கு வெளியே வலியுடன் ஆண்கள்’ என ஒரு தலைப்பு இப்போது உதாரணம் சொல்ல நினைவு வருகிறது.
அடுத்த அரைமணி நேரத்தில், கல்கி பத்திரிகைக்கு ஒரு கடிதம். “கதை கேட்டதற்கு மகிழ்ச்சி. ஸ்கேலாயுதம், என ஒரு கதை தருகிறேன்” என எழுதிப் போட்டேன்.
தலைப்பு தயார். ஒரு வகுப்பாசிரியர். வேலாயுதம். ரொம்ப கண்டிப்பான ஆசிரியர். அதனால் பிள்ளைகள் அவருக்கு வைத்த பட்டப்பேர் ஸ்கேலாயுதம். இதற்குமேல் கதை என்னிடம் அப்போது இல்லை.
பிறகு ஒரு மன உலாவலில் கதை தயார் செய்தேன். ஒரு விஞ்ஞான ஆசிரியர். அவர் பேய்க்கு பயப்படுகிறார்!
கண்டிப்பான ஆசிரியர் அவர். மறுநாள் தேர்வு வைத்திருக்கிறார். பசங்களுக்கு பயமாய் இருக்கிறது. அந்த கிராமத்தில் எல்லாரும் மலஜலம் கழிக்க முள்ளுக்காட்டுப் பக்கம் போய் வருவார்கள். அன்றைக்கு இரவில் வாத்தியாரை முள்ளுக்காட்டுப் பக்கம் பார்த்த ஒரு மாணவன். அவரை “ப்பே...” என பயமுறுத்தி விட அவருக்குக் காய்ச்சல் கண்டு மறுநாள் பள்ளிக்கூடம் வரவில்லை. தேர்வு நடக்கவில்லை, என்பது கதை.
கல்கி ராஜேந்திரனுக்கு அந்தக் கதை ரொம்பப் பிடித்துப் போனது. ஒருமுறை நான் ‘அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி’ நடுவராகப் போனபோது, அவர் ஸ்கேலாயுதம் கதையைச் சொல்லி, புன்னகையுடன் கைகுலுக்கி வரவேற்றார்.
ஒரு கொம்புசீவிய தருணத்தில் எகத்தாளத் தாளத்தில் மனம் தன்னைபோல கூடு கட்டி விடுவதும் உண்டு. ஒரு பத்திரிகை நண்பரின் கல்யாணத்துக்குப் போயிருந்தேன். பிரபலமான, (அவர் அப்படி நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.) சினிமாப் பாடலாசிரியர் ஒருவர் தோள்பூரிக்க ஒரு படையுடன் நடந்து வந்தார். வழியில் அவரை நிறுத்தி எனக்கு அறிமுகம் செய்தார்கள். என்னைப் பார்த்து, கல்யாண ரிசப்ஷன் வாசலில் நிற்கும் பொம்மை போல கைகூப்பி விட்டு அதே கம்பீர நடையுடன், (அப்படி அவர் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.) என்னைத் தாண்டிப் போனார். சினிமா என்பது அவர்களை எப்படியெல்லாம் ஆட்டம் போட வைக்கிறது, என்று தோன்றியது.
அவர் நேரே போய் மணமேடை ஏறி மணமக்களை வாழ்த்துமுன், சினிமா பற்றி ஒரு சப்ஜெக்ட் தயார் செய்ய வேண்டும், என நான் எனக்குள் சவால் விட்டுக் கொண்டேன். அப்படி உருவாக்கிய கதை தான். ‘கதை திரைக்கதை வசனம் டைரக்சன்.’
என்ன கதை?
சினிமா உலகின் ஒரு பிரபலமான கற்பழிப்பு வில்லன். அவனுக்குக் கல்யாணம். இதேபோல ரிசப்ஷன். பிரமுகர்கள் வந்து அவனை ஒலிபெருக்கியில் எப்படியெல்லாம் வாழ்த்துவார்கள்?
சிறப்பாகக் கற்பழிப்பார், என வாழ்த்துவதா? சரியான நேரத்துக்குப் படப்பிடிப்புக்கு வருவார், என்றால் இதற்கு சரியான நேரத்துக்கு வருவது அத்தனை முக்கியமா என்று தோன்றாதா? ஒரே டேக்கில் முடிப்பார், என்பதா? மேடையில் எப்படியெல்லாம் அவரைப் பாராட்டிப் பேசுகிறார்கள் என்பதே கதை.
ஒரு திரைப்படப் படப்பிடிப்பு. இவர் கற்பழிப்பு வில்லன். கதாநாயகன் வந்து இவரிடம் இருந்து கதாநாயகியைக் காப்பாற்ற வேண்டும். படப்பிடிப்பு முடிந்தது. இப்போது கதாநாயகன் அவளிடம் அத்துமீறி நடக்க முயற்சி செய்கிறார். (மீ ட்டூ, குற்றச் சாட்டு எழும் போலிருக்கிறது.) அப்போது வில்லன் அவளைக் கதாநாயகனிடம் இருந்து காப்பாற்றுகிறார். அப்போது இருவரிடையே நட்பு மலர்ந்து, காதல் கல்யாணத்தில் முடிகிறது. இதுதான் கதை.
‘கதை திரைக்கதை வசனம் டைரக்சன்’ அவசியம் நீங்கள் வாசிக்க வேண்டும்.
இந்திரன் பயப்பட்ட தொடுவர்மம், இதில் இருக்கிறதா?
storysankar@gmail.com
91 97899 87842